This entry is part 7 of 26 in the series 13 ஜூலை 2014

புகாரி

எங்கே செல்கிறது
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின்
பொன்னான இயல்விருது?

வானுயர்ந்து
தாய்த்தமிழ் வாசம் சுமந்து

புலம்பெயர்ந்தும்
தமிழ்த்தேன் வேர் பெயரா
கர்வத்தோடு

உயர்ந்து உயர்ந்து
பறக்கப் பிடிக்கப்பட்ட பட்டம்

ஓரிரு வாசல்களின் முன் மட்டும்
மண்டியிட்டுத் தாழ்ந்து
பின்னெலும்பு மடிந்து

அந்நிய மோகத் தனலில்
தானே வலிந்து விழுந்து
கருகிக் கருகி

சிதையும் சிறகுகளோடு
கீழ்நோக்கிப் பறக்கும்
அவலம் ஏன்?

நெஞ்சு
பொறுக்குதில்லையே!

*

28 ஜூன் 2014ல் நிகழ்ந்த 2013ன் இயல்விருது விழாவிற்கு மிக ஆர்வமாகச் சென்றிருந்தேன். இயல்விருது பெறுபவரின் பேச்சைக் கேட்க என் செவிகள் காத்துக்கிடந்தன.

ஆனால் பெருத்த ஏமாற்றம்.

இயல்விருதினைப் பெற்ற தியடோர் பாஸ்கரன் நாலு வரியை மேடையில் பேச எட்டுமுறை மூச்சுமுட்டினார்.

முழுவதுமே எழுதிக்கொண்டுவந்து மேடையில் வாசித்தும்கூட தங்குதடையற்று அவரால் பேச இயலவில்லை.

கணிஞர் மணி மணிவண்ணன் ஒண்ணேமுக்கால் நிமிடங்களே பேசினாலும் தங்குதடையின்றி சிறப்பாகப் பேசினார். அவரையே இயல்விருது பெற்றவரின் சார்பாகப் பேச வைத்திருக்கலாமோ என்று தோன்றியது

தொகுத்து வழங்கிய பெண் முழுவதும் ஆங்கிலத்திலேயே தொகுத்து வழங்கினார் (அவர் ஒரு தமிழ்ப் பெண் தான் – சந்தேகம் வேண்டாம் தமிழர்களே).

என்ன ஒரு சரளமான ஆங்கில நடை அந்தப் பெண்ணுக்கு? ஆனால் ஒரு தமிழரின் பெயரைக்கூட அவரால் உச்சரிக்கவே முடியவில்லை.

ஒரே ஒரு தமிழ்ச் சொல்லும் சொல்லத்தெரியாத தமிழ்ப்பெண்கள் புலம்பெயர்ந்த கனடாவில் எதை நோக்கித்தான் செல்கிறார்கள் என்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

அவர் தொகுத்து வழங்கியதைக் கேட்டு வெள்ளைக்காரர்கள் எல்லாம் அப்படியே பூரித்துப் போயிருப்பார்கள். ஆனால் அப்படி எந்த வெள்ளைக்காரரும் விழாவிற்கு வந்திருக்கவில்லை.

அமெரிக்க மோகம் கொண்ட தமிழர்களோ அதைவிடவும் புல்லரித்துப் பூரித்துப் போயிருப்பார்கள்.

ஓ…. அவர்களுக்காகத்தான் இவரோ?
புரிகிறது, வாழ்க!

ஆனால், தமிழரின் செவிகள் எல்லாம் செத்துத் தொலைந்தனவே இயல்விருந்து வழங்கும் எவராவது கவலைப்பட்டீர்களா?

Series Navigationஉத்தமபுத்திரா புருஷோத்தம் – தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமைமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 12