பாரதி

This entry is part 15 of 41 in the series 10 ஜூன் 2012

 

மராத்தி மூலம் – விஜய் டெண்டுல்கர்

தமிழில் – ராகவன் தம்பி

ஓவியங்கள் : வெ.சந்திரமோகன்

 

கதை மாந்தர்கள்

1. பாரதி

2. பீர்பால்

3. அக்பர்

4. வீர சிவாஜி

5. மிக்கி மவுஸ்

6. நிலா

7. கழைக்கூத்தாடி

8. கோமாளி

9. குதிரை

10. தேவதை 1

11. தேவதை 2

பாரதி

(பாரதி வீடு, வீட்டுக்கான மேடை அமைப்பு, மாலை நேரம், பாரதி ஆண்பிள்ளைக்கான உடுப்புக்களை உடுத்தியிருக்கிறாள், வீட்டில் தனியாக இருக்கிறாள்.)

பாரதி: என் பெயர் பாரதி, என்னுடைய அப்பாவும், அம்மாவும் ஒரு ஆண் குழந்தை வேணும்னு ஆசைப்பட்டபோது நான் பிறந்தேனாம். அதனாலேயோ என்னமோ தெரியாது. எனக்கு அவங்க பாரதின்னு பேர் வைச்சாங்க. அது ஆண் பிள்ளையோட பெயராம். நான் எப்பவுமே ஆம்பிளைப் பசங்க மாதிரித் தான் டிரஸ் போட்டிக்கிறேன். எங்க அப்பா அம்மா எனக்கு வாங்கிக் குடுக்கிற விளையாட்டு சாமான்கள் எல்லாமே ஆம்பிளைப் பசங்க விளையாடுகிற சங்கதிதான், நான் ஆம்பிளைப் பையன் மாதிரி ஹேர்கட் செஞ்சிக்கணும்னு எங்கப்பா ரொம்ப ஆசைப்படுகிறார்.

ஆனா. அம்மா சொல்றா. ம்ஹும் முடியாது. என் பொண்ணுக்கு எவ்வளவு அழகா. களையா, நீளமா ஜடை இருக்கு. அதை ஏன் கெடுக்கணும்? எனக்குத் தங்கையோ, தம்பியோ கிடையாது. அதனாலே அப்பாவையோ அம்மாவையோ எனக்கு என்ன வேணுமோ, அதை நச்சரித்து கேட்டு வாங்கிக்கிறேன்.

ஆனா என்ன பிரயோசனம்? அப்பாவுக்கோ. அம்மாவுக்கோ எப்பவுமே நேரம் கிடையாது. எப்போது பார்த்தாலும் ஒரே ஒட்டம்தான். ஆபீஸ் – வீடு. அது இதுன்னு ஒரே ஓட்டம். பல சமயங்களிலே அவங்களை என்னாலே பார்க்கவும் முடியாது. ஏதாவது பேசலாம்னு அதுவும் முடியாது. நான் யார் கூடவாவது விளையாடித்தான் பொழுதைக் கழிக்க முடியும். நான் ஆம்பிளை டிரஸ் போடறதுனாலே. பொண்ணுங்க என்னை தன்கூட சேர்த்துகிடறது இல்லே, போ போ… நீ ஆம்பிளைங்க கூட விளையாடுன்னு என்னை ஒதுக்கிடுவாங்க… இந்த பசங்களா… நீ எங்கேடி இங்க வந்து ஒட்டிக்கிடறே… நீ பொண்ணு… பொட்டைப் பிள்ளைங்களோட விளையாடுன்னு சொல்லி என்னை தள்ளிவிடுவாங்க. அவங்களோட என்னை எப்பவும் விளையாட விடமாட்டாங்க.

பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தாலும் எங்க வீட்டுலே மட்டும் யாரும் கிடையாது. காலியான வீடு, அம்மாவோ. அப்பாவோ. யாரும் இல்லாத இந்த வீடு. வெறிச்சுன்னு இருக்கிற வீடு. பக்கத்துலே கார்த்திக் வீட்டுலேயோ. அர்ச்சனா வீட்டுலேயோ சாவியை வாங்கி. நானே சாப்பாடு போட்டு சாப்பிட்டுக்கிட்டு. உள்ளுக்குள்ளே தனியா என்னோட நானே பேசி. சிரிச்சு விளையாடி பொழுதைக் கழிக்கணும். எனக்கு ரொம்ப போர் அடிக்கும். ரொம்ப வெறுத்துப் போகும். நான் பால்கனியிலே கொஞ்சநேரம் நின்னு வேடிக்கை பார்ப்பேன். அப்புறம் ரூம் ஜன்னல் மேலே ஏறி நின்னு வேடிக்கை பார்ப்பேன். சத்தமா பாட்டு பாடுவேன். என்ன கத்தினாலும் பாடினாலும் அம்மாவோ, அப்பாவோ வருகிற பாடே இல்லை. இந்த மாதிரி நேரத்துலேதான் பலவிதமான நினைப்புகளும் எனக்குள்ளே வரும். நானே அதை நம்ப மாட்டேன். சத்தியமா… ஆனா அதுதான் நிஜம். உங்களுக்கு நிஜமாகவே பிடிச்சதுன்னா. போர் அடிக்கலேன்னா. நான் அதைச் சொல்கிறேன், சொல்லட்டுமா?…

சரி. ஒரு ஆட்டுக்குட்டியும், ஒரு ஓநாயும் இருந்தது. யோசேப் என்கிற ஆளைப்பத்திக் கேள்விப்பட்டு இருப்பீங்க…. ஆமா… அந்த ஆள்தான் இந்தக் கதையை எழுதினான் என்று எங்க ஸ்கூல்லே சொல்வாங்க சரி. அதை விடுங்க. அந்த ஓநாய் ஏகப்பசியோட இருந்தது. (பாரதி தன் கால் சட்டைப் பையில் இருந்து எதையோ எடுத்து மெல்ல ஆரம்பிக்கிறாள்) (மென்று கொண்டே) அந்த ஓநாய் வழியோடு போய்க்கிட்டு இருந்த ஒரு ஆட்டுக்குட்டியை பிடித்து…

என் அருமை ஆட்டுக்குட்டியே நான் உன்னை இப்போ முழுங்கப்போறேன்… ஹஹ்ஹஹ்ஹா ன்னு கோரமா உறுமி பயம் காட்டியது.

அந்த அப்பாவி ஆட்டுக்குட்டி நடுங்கியபடி…

ஒநாய் அண்ணாச்சி. உனக்கு நான் என்ன துரோகம் பண்ணினேன். நீ என்னை ஏன் தேவையில்லாம கொன்னு முழுங்க ஆசைப்படறே ன்னு பரிதாபமா கேட்டது.

அந்த பொல்லாத ஓநாய் உறுமிக்கிட்டே, வா… கண்ணா வா… இப்போ சொல்றேன்.. நீ என்னை ஒண்ணும் பண்ணலே. ஆனா உங்க அப்பன் அப்போ பண்ண தப்புக்கு இப்போ நீ தண்டனை அனுபவிக்கப்போறே. கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பார் விகாரமா பல்லை காமிச்சது. பாவம் அந்தக்குட்டி வெள்ளாடு ரொம் பயந்து வெடவெடன்னு நடுங்க ஆரம்பிச்சது. நான் இதையெல்லாம் ஒரு மரத்துக்குப் பின்னாலே ஒüõஞ்சிருந்து கவனிச்சுக்கிட்டு இருந்தேன்.

அப்புறம் நான் முன்னாலே ஒரு எட்டு வைச்சு வந்து

ஏ ஓநாயே… Attention…. Left turn… Right turn…. on the run… March Fast…. Get out… ன்னு ஓங்கிக் கத்தினேன். என்ன ஆச்சு தெரியுமா? (கண்ணடித்து) அந்த ஓநாய் நெனைச்சுது எங்க P.T. Teacher தான் வந்துட்டாங்கன்னு.

அந்த ஓநாய் பயந்து நடுங்கி அப்படியே ஒரு about turn அடிச்சது. வாலைக்குழைச்சு இரண்டு ழ்ர்ன்ய்க், அடிச்சு பிடிச்சுது ஓட்டம், ஒரே ஓட்டமா ஓடிக் காட்டுக்குள்ளே ஒளிஞ்சுக்கிடட்து.

(சிறிது நேர மவுனம்)

எனக்குத் தெரியும். நான் பொய் சொல்றேன்னு நீங்க சொல்லுவீங்கன்னு. ஆனா இப்படித்தான் என் மனசுக்குள்ளே பல விஷயங்கள் ஓடிக்கிட்டு இருக்கு.

(மானசீகமாக துப்பாக்கி ஒன்றை எடுத்த சுட ஆரம்பிக்கிறாள். பார்வையாளர்களை நோக்கி டிஷ்யும் டிஷ்யும்)

பீர்பால்னு ஒருத்தன் இருந்தான். உங்களுக்கு தெரிஞ்சு இருக்கணுமே… இந்த கதைப் புத்தகங்கள்லே எல்லாம் வருவானே.. தெரியுதா… அவனேதான்…

(ஒரு ஆசிரியையின் மிடுக்குடன் மேஜையின் முன் அமர்கிறாள். வருகைப் பதிவு எடுக்கும் பாவனையில்)

பாரதி: நான் இப்போ Class Teacher…

(ஒரு ஆசிரியையின் மிடுக்குடன்)

பீர்பால் கல்வி மற்றும் கலைகளின் தேர்ந்த காஷ்மீரத்துப் பண்டிதர்…

(பீர்பால் பிரவேசம். அவர் தோளில் பள்ளிக்கூடப் பை மாட்டப்பட்டுள்ளது)

பீர்பால்: உள்ளேனம்மா (Yes Mam)

பாரதி: (பார்வையாளர்களை நோக்கி)

பார்த்தீங்களா? இப்படித்தான்… இப்படித்தான் என் மண்டைக்குள்ளே இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் சுத்திக்கிட்டு இருக்கு… ஆனா இது நிஜம்னு உங்களுக்குத் தோணலையா? (பீர்பாலிடம்) Sit straight….

(பீர்பால் நிமிர்ந்து உட்காருகிறார்)

பாரதி: Did you brush your teeth?

(பீர்பால் எழுந்து பாரதிக்குப் பக்கம் வந்து நின்று தன் பற்களை அவளுக்குக் காட்டுகிறார்)

Now…. go back to your seat….

(தன் இருக்கையில் திரும்ப வந்து அமர்ந்து கொள்கிறார்)

பீர்பால்: (எழுந்து நின்று கைகளைக் கட்டிக் கொண்டு) டீச்சர். நான் வகுப்புக்கு ஒரு நீதிக் கதையை சொல்லட்டுமா?

பாரதி: உஷ்… அக்பர் இன்னைக்கு க்ளாஸ் க்கு வரல்லியா?

பீர்பால்: டீச்சர்… அவர் தன்னோட பாட்டிக்கு வடாம் இடுவதற்கு வேண்டி இன்று விடுப்பில் இருக்கிறார்.

பாரதி: இப்படியே ஏதாவது ஒரு சாக்கு. படவா. நீயும் அவனுக்குக் கூட்டுக் களவாணி

பீர்பால்: (அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு) ப்ராமிஸô இல்லை டீச்சர்.

(அப்போது அக்பர் பிரவேசிக்கிறார். தன்னுடைய வழக்கமான ராஜ ஒப்பனையுடன். இவருடைய தோளிலும் பள்ளிக் கூடப் பை மாட்டப்பட்டுள்ளது)

அக்பர்: Teacher…. May I come in?

பாரதி: மூக்குக் கண்ணாடியை ஒதுக்கிப் பார்க்கும் பாவணையில் Bend down and hold your knees… முட்டி போடு… late…. late…. daily late….

(பாரதி கவனிக்காத நேரத்தில் பீர்பால் அக்பரின் மீது காகித உருண்டையை சுருட்டி எறிகிறார்)

அக்பர்: டீச்சர்…. பாருங்க டீச்சர்…. என்மேலே காகிதத்தை சுருட்டி எறியறான்….

பீர்பால்: பொய் பேசறான் டீச்சர். நான்தான் சுருட்டி எறிஞ்சேன்னு இவனுக்கு எப்படித் தெரியும்?

அக்பர்: வெவ்வெவ்வே… போடா குடாக்கு. ரொம்பத்தான் அலட்டிக்காதே

பீல்பால் நீ உதைபடுவே. நீ அலட்டிக்காதேடா…

பாரதி: (மேஜையை பிரம்பால் உரக்கத் தட்டியபடி) Will you stop it?

(இருவரும் அமைதியாகின்றனர். பார்வையாளர்களைப் பார்த்து)

இப்படித்தான்.. இந்த மாதிரி இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப இருக்கு. (அக்பரிடம்) நான் சொல்ற மாதிரி கேட்கலைன்னா உன்னை இந்த பிரம்பாலேயே விளாசிடுவேன்.

ஆமாம். (பீர்பாலிடம்) பீர்பால்… நீ பார்த்துக்கிட்டே இரு. உன்னை நான் கண்டிப்பா ரெண்டு மார்க்லே ஃபெயில் ஆக்கப்போறேன்….

(பார்வையாளர்களிடம்) பார்த்தீங்களா? பீர்பால் என்கிட்டே ரொம்ப பயந்துட்டான். அக்பரும் என்னைப் பார்த்து பயந்துட்டான். ரெண்டு பேருக்கும் நான் அவங்க Class Teacher. எங்க Class Teacher எப்போவுமே இப்படித்தான்… எங்க கிட்டே கூச்சல் போட்டுக்கிட்டே இருப்பாங்க.

(அக்பரும் பீர்பாலும் விரைவாக மேடையை விட்டு அகலுகின்றனர்)

ஆனா எனக்கு இவங்களோடவும் அலுப்பு தட்டிப்போகுது. அப்புறம் அப்படியே உட்கார்ந்து…

(வீர சிவாஜி உள்ளே நுழைகிறார். அவர் தோளிலும் பள்ளிக் கூடப்பை)

ஆங்… சிவாஜி… வீர சிவாஜி.. ஆனா நிஜமான சிவாஜி இல்லை. இதுதான். என் மனசுக்குள்ளே வந்து போகிற சிவாஜி. நான் சிவாஜியைப் பார்த்துக் கேக்குறேன். நட்ண்ஸ்ஹத்ண்… ஜ்ட்ண்ஸ்ரீட் ஹ்ங்ஹழ் ஜ்ஹள் அச்க்ஷ்ஹப் ஓட்ஹய் ஓண்ப்ப்ங்க்?

சிவாஜி: (நாணத்துடன் நகங்களைக் கடித்தபடி பாதங்களில் கோலம் வரைந்தவாறு) Shivaji… which year was Afzal Khan Killed?

பாரதி: (பார்வையாளர்களிடம்) ம்ஹும்… நீங்களே பாத்துக்கோங்க. இவனாலே தேதிகளை ஞாபகத்துலே வெச்சுக்க முடியாது. என்னை இவன் தன்னுடைய History Teacher னு நினைச்சுக்கிறான்.

சிவாஜி: டீச்சர்… அஃப்ஸல் கான்.. (தலையை சொறிகிறான்)

பாரதி: மண்டு… (பார்வையாளர்களிடம்) எங்க ஹிஸ்டரி டீச்சர் மாதிரியே. மண்டு. உனக்கு இந்த சின்ன விஷயம் கூட தெரியலே? சரித்திரத்திலே இந்தத் தேதிகளை எல்லாம் முக்கியமா மனப்பாடம் பண்ணி வைக்கணும்னு உனக்குச் சொல்லலே? யாரையாவது கொல்லணும்னு நெனைச்சா ஒரு செகண்ட்லே கொன்று தீர்ந்திடுவே. ஒரு நொடியிலே. (சிவாஜி தன் கால் கட்டை விரலால் மீண்டும் தரையில் கோலம் போடுகிறான்) Stand up on the bench (சிவாஜி ஸ்டூல் மேல் ஏறி நிற்கிறார்)

பாரதி: (பார்வையாளர்களிடம்) எனக்கு இதெல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க இப்ஹள்ள் லே இப்படித்தான் எங்க டீச்சர் இந்த சிவாஜியோட தேதிகள் தெரியாததனாலே என்னை பெஞ்ச் மேலே ஏறி நிக்க வைச்சாங்க. இந்த தேதி – வருஷம் இதுதான் நான் சிவாஜிக்கு தரக்கூடிய சரியான தண்டனை.

(சிவாஜி ஸ்டூலை விட்டு இறங்கி ஓடி மறைகிறார்)

(பாரதி ஸ்டூலைத் தள்ளி. ஷெல்பின் மேல் பாட்டில்களைத் தேடும் பாவனையில் ஈடுபடுகிறாள்)

(மிக்கி மெளஸின் பிரவேசம்)

மிக்கி Hi! பாரதி!

பாரதி: ஓஹோ. நீயா? இந்த பாட்டிலை நான் தவற விட்டிருப்பேன் தெரியுமா?

மிக்கி நான் உனக்கு உதவி செய்யறேன். நான் பாட்டிலை கீழே இறக்கித் தரவா? சீக்கிரம் தேடிப்பாரு. ஏதாவது கிடைகிடைக்குமான்னு.

பாரதி: நீயா? உன்னை எனக்குத் தெரியாது? நீயே எல்லாத்தையும் முழுங்கிடுவே. எனக்கு ஏகப்பசியா இருக்கு. எதுனாச்சும் இருக்கான்னு பார்க்கிறேன் இரு.

மிக்கி : எனக்கும் பசியா இருக்கு.

பாரதி: உனக்கு எப்போவும் பசிதான். தீனிக்கு பக்கி மாதிரி அலையாதே

மிக்கி என்னத்தை அலையறது? இந்தப் பூனைக்கு பயந்து ஓடி ஓடியே எனக்கு உயிர் போகிற மாதிரி பசி. பாரதி நீ நல்ல பொண்ணு இல்லே? எனக்கு சாப்பிட எதுனாச்சும் கொடேன் ப்ளீஸ்.

பாரதி: இங்கே பாரு. ஒரே ஒரு முறுக்கு இருக்கு. உனக்குப் பாதி. எனக்குப் பாதி. (கொடுக்கும் பாவனையில்)

மிக்கி : நான் குட்டியூண்டு இருக்கேன்னு எனக்குப் பாதியா? நான் ரொம்ப இளைச்சுட்டேன் இல்லே?

பாரதி: ஏதாவது ஜøரத்துலே படுத்து எழுந்தியா என்ன?

மிக்கி: அதெல்லாம் ஒண்ணும் இல்லே. எல்லாம் அந்த பாழாப்போன ரேஷன் கடை தானியங்களாலேதான். படுமோசம். சமையல் அறைலேர்ந்து துருவி துருவி சாப்பிட்டேன். ஆனாலும் என்னாலே குண்டாக முடியல்லே.

(மி மவுஸ் டேபிளில் பாரதியின் முன் அமர்கிறது)

பாரதி: (பார்வையாளர்களிடம்) நீங்களே பார்த்துக்கோங்க. இப்படித்தான். ஆனா இது சத்தியமா நிஜம்னு உங்களுக்குத் தோணலியா? அதேதான். இந்தக் கதைப்புத்தகங்கள்லே வருகிற மாதிரி.

மிக்கி: அன்னிக்கு ஒரு நாள் – இரண்டு முரட்டுக் கடுவன் பூனைங்க. இதை மாதிரித்தான் பேசிக்கிடிச்சு.

பாரதி: எதே மாதிரி?

மிக்கி: (பூனைகளின் பாவனையில்) என்ன இது கருமாந்திரம்? ஒரு எலியை மென்னு கடிச்சா… இந்த ரேஷன் கடை தானியம். ஒரே நறநறன்னு வயித்துலே கல்லோடு. நம் பழைய நாட்களை நினைச்சுப் பார். வாயிலே கடிக்கக் கடிக்க சுவைக்கச் சுவைக்க. விழுங்க விழுங்கத் தீராத குண்டு எலிகள்… அப்போ எவ்வளவு குஷியா இருந்தது? இந்தக் கலப்படம் வந்து நம்ம பிழைப்பிலே கல்லைக் கலந்துடிச்சு.

பாரதி: பாவம். பரிதாபமான பூனைகள்.

மிக்கி: அதுதான் நானும் சொல்றேன். ஒரு அதி பத்திரமான தூரத்தில் இருந்து நானும் அதுகளைப் பார்த்து பரிதாபப்படுகிறேன். ரேஷன் தானியங்களை சாப்பிட்டு என் வயித்துலே இருக்கிற கற்கள் அந்தப் பரிதாபமான பூனைகளின் பற்களை உடைக்க வேணாம். ஏய். என்ன பாரதி சிரிக்கிறே? நான் நிஜமாத்தான் சொல்றேன்.

பாரதி: ஆமாம். ரொம்பத்தான் பூனைகள் மேலே கரிசனம் இல்லையா?

(பார்வையாளர்களிடம்) இப்படிதான் நான் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்பேன். ஆனா கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் படுபோர். அம்மாவோ அப்பாவோ வருகிற சுவட்டையே காணோம் பாருங்க. இப்போ மிக்கியும் என்னை விட்டுப்போறான். நான் என்ன பண்ண?

(ஸ்டூலை இழுத்துவிட்டு அதன் மேல் ஏறி சுவர் கடிகாரத்தினைக் கையில் எடுக்கிறாள்.)

பாரதி: ம்ம்ம்… நான் இந்த முள்ளை முன்னாலே நகர்த்திக்கிட்டே போவேன். இதனாலேயாவது இந்த அம்மாவையும் அப்பாவையும் சீக்கிரம் வரவழைக்க முடியுமான்னு பார்க்கிறேன்.

(கடிகார முட்களை 12 மணிக்கு திருப்புகிறாள். கடிகார மணி 12 முறை தவறாது ஒலிக்கிறது. மேடையில் இருள் சூழ்கிறது. பாரதி பயத்துடன் கண்களை இறுக்க மூடிக்கொள்கிறாள்.)

என்ன இது? இதுக்குள்ளே இவ்வளவு இருட்டிப் போச்சு?

குரல் ஏன்னா கடிகாரப்படி இது நடுராத்திரி.

பாரதி: (கண்களை மெல்லத் திறந்தபடி) அது எப்படி?

குரல் : கடிகாரத்தின் முள்ளை நீ நகர்த்தினே இல்லையா?

பாரதி: (பயத்தில் அழும் குரலில்) ஆனா நான் இவ்வளவு சீக்கிரம் ராத்திரி வரணும்னு ஆசைப்படலை. என் அம்மாவோ அப்பாவோ இன்னும் வரல்லியே?

குரல்: ஆனா நான் வந்துட்டேன் இல்லையா?

பாரதி: வந்துட்டியா? நீ யார்?

(நிலவு உள்ள பிரவேசிக்கிறது)

பாரதி: நீ… நீயா? நிலா?

நிலா: ஆமாம்

பாரதி: நீ எப்படி இங்கே வந்தே?

நிலா: ஆகாய வழியா… மேகங்களோட முதுகுலே சவாரி ஏறி. நேத்து நீ பாடினியே. அந்தப்பாட்டை மறந்துட்டியா? (பின்னணியில் நிலா நிலா ஓடிவா பாடல் ஒலிக்கிறது. பின்னர் தேய்ந்து மறைகிறது)

பாரதி: ஏன் அந்தப் பாட்டை நிறுத்தினே?

நிலா: யார்? நானா? டேப்ரிக்கார்டர் தானாக நின்று போச்சு. நேத்து நீ இந்தப் பாட்டைப் பாடினே இல்லையா? நான் வரணும்னு நீ ரொம்ப ஆசைப்பட்டே அப்போ பகல் நேரம் ஆனதாலே என்னாலே வரமுடியலே. இங்கே பகல் நேரமா இருக்கிறப்போ நான் இந்த உலகத்தின் மறுகோடியிலே டியூடியிலே இருப்பேன். நேத்து நீ பாடினப்போ நான் உடனே வர ஆசைப்பட்டு ஓடி ஓடி வந்தேன். ஆனா நான் வந்தப்போ நீ உங்கம்மாவோட ஒண்டிக்கிட்டு நீ நல்லா தூங்கிப்போயிட்டே இப்போ நீ கடிகார முள்ளை சுத்தி ராத்திரி ஆக்கிட்டே. அதனாலேதான் நான் குடுகுடுன்னு மூச்சு இறைக்க ஓடிவர வேண்டியதாப்போச்சு.

பாரதி: ஆனா இந்த அம்மா இன்னும் வரல்லியே? தினம் தினம் இதே கதைதான். நான் அம்மாவுக்காகக் காத்திருந்தே ரொம்ப டயர்ட் ஆகிடறேன்.

நிலா உங்கம்மா எந்த நேரமும் வரலாம். அவங்க வர்றதை நான் பார்த்தேன்.

பாரதி: நிஜமாகவா?

நிலா: சத்தியம்மா. உனக்காக உங்கம்மா கடையிலே பிஸ்கட் சாக்லேட் எல்லாம் வாங்குறதைக் கூடப் பார்த்தேன். உங்க அப்பாவையும் பார்த்தேன்.

பாரதி அப்பா என்ன செய்துக்கிட்டு இருந்தார்?

நிலா : யாரு? உங்கப்பாவா? 53, 54, 55, 56….

பாரதி: 56?

நிலா: ஆமாம். டவுன் பஸ் க்யூவிலே அவருடைய வரிசை என் அதுதான். நான் ஒவ்வொரு தலையா எண்ணிப் பார்த்தேன். உங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் கூடிய சீக்கிரம் வந்துடுவாங்க.

பாரதி: அதுவரைக்கும் நான் என்ன செய்யறது? உனக்குத் தெரியுமா? நான் ராத்திரியிலே கொஞ்சம் அதிகமாகவே பயப்படுவேன். இருட்டின உடனே இந்த பூதங்கள் எல்லாம் வாக்கிங் கிளம்பிடுமாம்.

நிலா : பைத்தியம் மாதிரி பேசாதே. பசங்க போடுற டிரஸ் போடறே. பசங்க விளையாடுற விளையாட்டை விளையாடுறே. மத்த பொண்ணுங்க மாதிரி நீயும் பயப்படுவேன்னு சொல்லாதே. யாருடைய பேரை நீ வெச்சிக்கிட்டு இருக்கே? உனக்கு எங்கிருந்து பயம் வரும்? நீ சொல்ற அதெல்லாம் பூதங்கள் இல்லே. நிழல்கள். வெறும் நிழல்கள் தான். நான் சிருஷ்டிக்கிற குறும்புக்கார நிழல்கள். நிஜமாவே அதுகளெல்லாம் பசங்க மாதிரி டிரெஸ் பண்ணிக்கிற பொண்களைப் பார்த்து பயப்படும். நிலா தன் கைகளைக் குவித்து பின் மேடையில் பிரம்மாண்டமான நிழல்களை உண்டாக்குகிறது)

பாரதி: (பயந்து) அம்மா.

நிலா: (உரக்கச் சிரித்து) நீ வேறே… இது வெறும் நிழல்தான். (நிழல்கள் மறைகின்றன).

பாரதி: அம்மா எப்போ வருவாங்க?

(வெளியே பெரும் ஆரவாரம்) நாங்க வந்தாச்சு… நாங்க வந்தாச்சு என்று கூச்சல். சந்திர கிரணங்கள் மேடையில் பிரவேசிக்கின்றன)

பாரதி: நோ. நான் விளையாட வரல்லே. எங்கம்மா இன்னும் வீடு வந்து சேரல்லே. நான் வரமாட்டேன். (படு கோபத்துடன் ஸ்டூல் மீது ஏறி கடிகாரத்தின் முட்களை சரிசெய்கிறாள். மேடையில் முழு வெளிச்சம் பரவுகிறது. மெல்லிய குரலில் நிலா நிலா ஓடிவா பாட்டு தூரத்தில் கேட்கிறது. பாரதி ஸ்டூலில் இருந்து குதிக்கிறாள்)

அம்மா… கும்மா… சும்மா…

(கோபத்துடன் தன் பொம்மைகளை வீசி எறிகிறாள். மூன்று சக்கர சைக்கிளில் கோமாளி அவளை வைத்து மீண்டும் வலம் வருகிறான். பின்னணியில் சர்க்கஸ் பேன்ட் ஒலிக்கிறது. இருவரும் வலம் வலம் வரும்போது பொய்க்கால் குதிரை நடனமாடிக் கொண்டே வருகிறது. கோமாளி சைக்கிளை விட்டு இறங்கி தள்ளிக் கொண்டே மறைகிறான். பாரதியும் குதிரையும் பின்னணி இசைக்கேற்ப நடனமாடுகின்றனர். நடனத்தின் ஊடே ஒரு கழைக்கூத்தாடி பிரவேசிக்கிறான். இப்போது குதிரை வெளியேறுகிறது. பாரதி தன் குடையினை எடுத்துக் கொண்டு தானும் கயிற்றின் மீது நடக்கும் பாவனையை மேற்கொள்கிறாள். சில கணங்களில் கழைக்கூத்தாடியும் மறைகிறாள். பின்னணி இசை மாறுகிறது. பாரதி பிரமை பிடித்தவள் போல் ஆகிறாள். குடையைக் கோபத்துடன் வீசி எறிந்து மிகுந்த துக்கத்துடன் கைகளால் வாயைப் பொத்திக் கொண்டு உறைந்து போகிறாள்)

பாரதி: அம்மாவாம் அம்மா. கும்மா. எனக்கு இந்த அம்மாவும் வேணாம். அப்பாவும் வேணாம். இன்னும் யாரும் வீடு வந்து சேரலை. எனக்கு யாரும் வேணாம்.

(சோகத்துடன் மடிந்து உட்கார்ந்து தனக்குள் முணுமுணுத்துக் கொள்கிறாள். தூரத்தில் குழந்தைகள் குதூகலத்துடன் விளையாடும் ஒலி கேட்கிறது. மெல்லத் தேய்கிறது. பீர்பால், அக்பர், சிவாஜி, மிக்கி மவுஸ், நிலா, கோமாளி, கழைக்கூத்தாடி எல்லோரும் ஒவ்வொருவராக சத்தமில்லாமல் பிரவேசிக்கிறார்கள். குதிரையும் வந்து சேர்கிறது. தர்பார் தொடங்குகின்றது)

அக்பர் இந்த மாதிரி பொறுப்பில்லாத பெற்றோர்களை என்ன செய்வது? பீர்பால் இதுபற்றி உன் அபிப்பிராயம் என்ன?

பீர்பால்: தாங்கள் என் மேதாவிலாசமான அபிப்பிராயத்தைக் கேட்கிறீர்கள். பாரதி போன்ற குழந்தைகளுக்கு இப்படித்தான் நேர்கின்றது. இக்குழந்தைகளின் தாய்மார்கள் எப்போதிலிருந்து அலுவலகங்களில் பணியாற்றத் தொடங்கினார்களோ அப்போது இருந்து இப்படித்தான் இவர்களுக்கு நேர்கிறது.

சிவாஜி: ஹர ஹர மஹாதேவ். நாம் நம் யுத்தத்தினைத் தொடங்குவோம். அந்த அலுவலகங்களைக் கடுமையாகத் தாக்கி துகள் துகளாகச் சிதறச் செய்வோம். குன்றுகளில் இருந்து என் படை வீரர்களை ஏவி விடப்போகிறேன்.

பீர்பால்: ஆனால் நீங்கள் அந்த அலுவலகங்களை முற்றும் ஒழித்துவிட்டால் இக்குழந்தைகளின் பெற்றோர்கள் எங்கிருந்து பணம் சம்பாதிக்க முடியும்? பெற்றோர்களிடம் வேண்டிய அளவு பணம் இல்லையென்றால் பாரதி போன்ற குழந்தைகளுக்கு நல்ல உடைகளும் தின்பண்டங்களும் விளையாட்டுப் பொருட்களும் எங்கிருந்து கிடைக்கும்? இவைகளுக்காக அப்பெற்றோர்கள் எங்கே போவார்கள்? பெற்றோர்களுக்கு அந்தப் பணம் இல்லையென்றால் வீட்டுச் சாமான்களும் பால்பழங்களும் வாங்க முடியாது தெரியுமா? பின் பாரதி எதைச் சாப்பிடுவாள்? எதைக் குடிப்பாள்?

அக்பர்: பணத்தினை ஏன் இந்த இழவு அலுவலகங்களில் வைத்துத் தொலைத்தார்கள் என்று எனக்கு உடனடியாகத் தெரிந்தாக வேண்டும். பீர்பால். இது என் கட்டளை. பணத்தினை பொது விநியோக தானியக் கிடங்கில் வைத்தாக வேண்டும். உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

(குதிரை மெல்லக் கனைக்கிறது)

அக்பர்: சிரிப்பதைப் போல் ஏன் கனைக்கிறாய் குதிரையே?

குதிரை: மகாப்பிரபு. பொது விநியோக தானியக் கிடங்கில் பணத்தை வைத்தால் மக்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? தானியங்களுடன் பணத்தையும் அரைத்துக் கிச்சடியாகக்கி சாப்பிடுவார்கள். இல்லையென்றால் காப்பியில் சர்க்கரையாகக் கரைத்துக் குடிப்பார்கள்.

மிக்கி: ஐயையோ. வேண்டவே வேண்டாம். மகாராஜா. பொது விநியோக தானியக் கிடங்கில் பணத்தினைக் கலக்க வேண்டாம். என்னுடைய அவஸ்தையை நீங்கள் எண்ணிப் பாருங்கள். வயிற்றில் சில்லறை குலுங்கினால் ரொம் தூரத்தில் இருந்தே என் அசைவுகள் பூனைக்குத் தெரிந்துவிடும் மகாராஜா. தயவு செய்து இந்த உத்தரவை அமர்படுத்தாதீர்கள். இந்த அப்பாவி எலி ஜென்மங்களை நீங்கள் தான் ரட்சிக்க வேண்டும்.

க.கூ. : பணத்தை ஏன் ஆகாயத்தில் தொங்கவிடக்கூடாது? ஜனங்கள் எல்லாம் கயிற்றின் மீது ஏறி நடந்து சில நொடிகளிலேயே தனக்கு வேண்டிய பணத்தை சுலபமாக பறித்துக் கொள்ளலாமே?

நிலா: ஒரு நிமிஷம். நீ என்ன எல்லா பெற்றோர்களையும் உன்னைப்போல கழைக்கூத்தாடி என்ற நினைத்தாயா? யாருக்காவது பிடி தவறிக் கீழே விழுந்தால் என்ன ஆகும்? தொபுக்கடீர்னு விழுவாங்க. எல்லாப் பணத்தையும் என்கிட்டே கொடுத்திடுங்க. எல்லோரும் தூங்கும்போது அவங்க மேலே ஒரு சந்தடியும் இல்லாம, நிதானமா, ஒரு சச்சரவும் இல்லாம இந்த காரியத்தை செய்து காட்டுறேன். சத்தியமா. பிராமிஸ்… என் மேலே நடந்த ஆர்ம்ஸ்டிராங் மேலே சத்தியமா

(கோமாளி சத்தத்துடன் விசும்பி அழத் தொடங்குகிறான்)

அக்பர்: என்ன ஆச்சு?

கோமாளி: பாருங்க. என்னுடைய பேண்ட் ரொம்ப சின்னதா இருக்கு

நிலா அட. அழாதே. என் கிரணங்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமா நான் பணம் சேத்துத் தரேன்.

கோமாளி: ஆமாம். ராத்திரி எல்லாம் வாய் கிரிய பீத்திக்கிட்டு இருப்பே. காலைலே சந்தடியில்லாமெ மாயமாயிடுவே. உன் பவிஷø எனக்குத் தெரியாதா?

அக்பர்: சைலன்ஸ்… பாரதி நமக்குத்தான்

எல்லோரும் கண்டிப்பாக பாரதி நமக்குத்தான்

கோமாளி: அவள் என்னுடைய ஃப்ரண்ட்

நிலவு: என்னுடைய தோழி

குதிரை: நம்ம தோஸ்து

சிவாஜி: ஹரஹர மஹாதேவ. பாரதி என் சோட்டி சிஸ்டர். குதிரை மேலே ஆரோகணிக்கும் என் குட்டி தளபதி.

நிலவு: பாரதியை நான் என்னுடைய பிரதேசத்துக்கு அழைச்சிக்கிட்டுப் போவேன்.

அக்பர்: அவளை நான் டெல்லிக்கு அழைச்சிக்கிட்டுப் போகலாம்னு இருக்கேன்.

சிவாஜி: நான் அவுரங்கசீப் கிட்டே புடுங்கி வைத்திருக்கிற கோட்டைகளில் ஒன்றை அவளுக்குக் கொடுக்கப்போறேன்.

குதிரை: பாரதியை என் முதுகிலே சவாரி ஏத்திக்கிட்டு ரர்ழ்ப்க் பர்ன்ழ் அடிக்கப்போறேன்.

கோமாளி: பாரதியை என் விதூஷகத்தாலே குலுங்க குலுங்க சிரிக்க வைப்பேன்.

ககூ: பாரதியை நான் என்னோட கழைக்கயிறு வழியா மேலே அழைச்சிக்கிட்டு மேலே மேலே போவேன். கிருஷ்ணகிரி வரைக்கும்.

(எல்லோரும் கசகசவென்று கூச்சல் போடுகின்றனர்)

(பாரதி தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு மலங்க மலங்க விழிக்கிறாள்) ஷ்ஷ்… நான் தூங்கிக்கிட்டு இருக்கிறது தெரியலே? (பார்வையாளர்களிடம்) இந்த துஷ்ட பசங்க ஒரு நிமிஷம் கூட கண்ணை மூடி தூங்க விடமாட்டாங்க. (மீண்டும் படுத்துத் தூங்குகிறாள்)

கோமாளி: ஷ்ஷ்.. அவ தூங்கிட்டு இருக்கிறது தெரியலே? ஏன் இப்படி கூச்சல் போடுறீங்க? அவளை ஒரு நிமிஷம் கண்ணை மூடித் தூங்க விடமாட்டீங்க?

(பெரும் ஓசையுடன் தும்முகிறான். எல்லோரும் அவனை முறைக்கிறார்கள். மன்னிப்பு கோரும் பாவனையில் கைகூப்புகிறான்)

பீர்பால்: (தலையைச் சொறிந்த வண்ணம்) ம். ம். இதோ பாருங்க. எனக்கு சண்டை போடுறது பிடிக்காது. நாம் எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும். இருக்கிறதை நாம சரி சமமாக பங்கிட்டுக்கிறதே உத்தமமான காரியம்.

மிக்கி அது சரி. நிஜந்தான்.

பீர்பால்: அதனாலோ நாம் எல்லோரும் ஆளுக்கு ஒரு பங்க பாரதியை பிரிச்சுக்குவோம்.

எல்லோரும் என்ன?

பீர்பால்: அது சரி. அறிவாளி சொல்றதை யார் கேக்கப் போறாங்க?

சிவாஜி பாரதி என்ன சாம்ராஜ்யமா என்ன நாம சரிசமமாகப் பங்கு போட்டுக் கொள்ள?

மற்றவர்கள் அதுதானே?

பீர்பால்: சரி. பின்னர் ஏன் சண்டை போடுறீங்க? யாருடன் எங்கே போகணும்னு பாரதியே தீர்மானிக்கட்டும். அவளுடைய தீர்ப்பையே இறுதியா ஏத்துக்குவோம். (குதிரையிடம்) இங்கே யார் என்னை அறிவாளி இல்லேன்னு சொன்னது?

நிலா: பாரதி தூங்குறாளா?

குதிரை: நான் என்ன சொல்றேன்னா. பாரதி இப்போ தூங்குறதாலேதான் நாம இப்போ இங்கே இருக்கோம். இல்லேன்னா நாம எல்லாம் மனுசங்க போல இங்கே நின்னுக்கிட்டு பேச முடியுமா? அதனாலே. அவன் தூங்குறபோதே கேட்போம். அவ சொல்றபடி நடப்போம். என்ன சரியா?

மிக்கி : அது சரி. (பாரதியின் அருகில் சென்று குனிந்தவாறு) பாரதி. நீ யாரோடு போக ஆசைப்படுறே?

(தானே பாரதியின் குரலில்) மிக்கி மவுஸ் கூட

(தன் குரலில்) அப்படிப் போடு. என்னோடுதான். இதை நான் சொல்லலை. அவளே சொல்றா. நீங்களும் கேட்டீங்க இல்லே? பூனை மீது ஆணையா.

சிவாஜி: ஹரஹர மகாதேவா. சரியான டூப் மாஸ்டரா இருக்கானே

கோமாளி அயோக்கியப் பயலே. வெளியே போடா. நானே அவளைக் கேக்குறேன்.

(பாரதி மெல்ல எழுந்து உட்காருகிறாள்)

நீலக் கரங்கடல் ஆழத்தில்

நீள விரிந்த அடிப்பரப்பில்

பாசிக்கம்பள விரிப்பில்

ஒளிக்கற்களின் ஜொலிப்பில்

சிறகுகள் விரித்துத் திரியும்

சின்னத் தேவதைகளின் கைகோர்த்து

சிரித்துப் பாடிடும் சிங்கார ஊரில்

சிரித்து சிரித்து வலம்வர வேண்டும்.

(மேடையில் இருள் சூழ்கிறது. நீர்க்குமிழிகள் மேல் எழும்பும் ஓசை. பச்சை ஒளி மெல்லப்படர்கிறது. பாரதி தன் பழைய நிலையிலேயே, கண்ணை மூடிக் கொண்டே)

பாரதி: ஆறில் ஒண்ணு போய் அஞ்சாச்சு.

ஆறில் ஒண்ணு போய் அஞ்சாச்சு

அப்படித்தானே?

(சிறகுகளுடன் இரண்டு தேவதைகள் பாரதியின் அருகில் வந்து நிற்கின்றன)

தேவதை 1 ஏய்! யார் இது?

தேவதை 2 எனக்குத் தெரியாது. ஆனா இவ கண்டிப்பா நமக்குத் தெரிந்த பொண்ணு இல்லை.

தேவதை 1 ஆமாம் சுத்தமா புதுமுகமா இருக்கு

தேவதை 2 ஏய்! யார் நீ?

தேவதை 1 ஏன் இப்படிக் கண்ணை மூடிக்கிட்டு இருக்கே?

தேவதை 2 ஆமாம். நீ இங்கே எப்படி வந்தே?

தேவதை 1 உன் பெயர் என்ன?

தேவதை 2 அவளை ஏன் இப்படி பயமுறுத்துகிறே? பாப்பா. கண்ணு. உன் பேரு என்னம்மா?

பாரதி: (கண்களை அகல விரித்து) பாரதி! (இருவரும் சிரிக்கிறார்கள்)

பாரதி: இதுக்குப்போய் ஏன் இப்படி சிரிக்கணும்?

தேவதை 1 பாரதி. என்ன பேரு இது?

தேவதை 2 என் பெயர் பாரு ராதி.

தேவதை 1 என் பேரு பிந்தி. பாரதி… என்ன பேரு இது?

தேவதை 2 பாரதி – பூரதி.

பாரதி உங்க மனசுலே என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?

தேவதை 1 சும்மா இருடீ. அவ அழுதுடப் போறா.

தேவதை 2 சுட்டியா களையா இருக்கா இல்லே?

தேவதை 1 ஆனா கொஞ்சம் மொண்ணை மூக்கு

தேவதை 2 அவளை ஏன் சொல்லுறே? உன் கொட்டைப் பல்லுக்கு என்ன சொல்ல?

தேவதை 1 ஷ். நாம சண்டை போடக்கூடாது. நாம் ஃப்ரண்ட்ஸ் ஆகவே இருப்போம்.

தேவதை 2 அது சரி. நாம ஃப்ரண்ட்ஸ் ஆகவே இருப்போம்.

(இருவரும் பாரதியைச் சுற்றி வட்டம் அடிக்கின்றனர். பாரதியின் முகம் மலர்கிறது)

பாரதி: ஹை. இது நிஜமான றெக்கையா?

தேவதை 1 ஆமாம். நைலான் றெக்கைகள்

பாரதி: எவ்வளவு அழகா இருக்கு. ஆமாம். இதை வெச்சிக்கிட்டு நீங்க என்ன செய்வீங்க?

தேவதை 2 :என்ன செய்யறதா? ஒண்ணும் கிடையாது. எங்க தேவதைகளின் பூமியில் இது ஒரு ஃபாஷன்.

தேவதை 1 என் கிட்டே மேட்சிங் கலர்லே கூட றெக்கைகள் இருக்கு.

தேவதை 2 நாங்க பறந்து பறந்து டேன்ஸ் ஆட இது எங்களுக்கு வசதியா இருக்கும்.

பாரதி: எனக்குக் கூட றெக்கை கட்டிக்கணும்னு ஆசையா இருக்கு.

தேவதை 2 உனக்குத்தான் ஏற்கனவே இருக்கே. (அருகில் சென்று விரிக்கிறாள்)

பாரதி: அட. நிஜமாகவே எனக்கு..

தேவதை 1 ஆமாம். எங்க பூமிக்கு யார் வந்தாலும் அவங்களுக்கும் றெக்கைகள் ஃப்ரீயாக் கிடைக்கும்.

பாரதி: ஹை! எனக்கும் றெக்கை… எனக்கும் றெக்கை… (சிறகடித்து இங்கும் அங்கும் ஓடுகிறாள்) ஹை. ஜாலி. அம்மா… இங்கே பாரேன்… அம்மா… இங்கே பாரேன்.

(ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நிற்கிறாள். முகத்தில் விரக்தி)

தேவதை 1-2 (குசுகுசுவென்று) என்ன ஆச்சு? பாரதி என்ன சொன்னா? அவளுக்கு அம்மா ஞாபகம் வந்திருக்கும் போல. நீ என்ன சொல்றே?

தேவதை 1 வாயேன் பாரதி! வந்து எங்களோட வந்து விளையாடேன்

தேவதை 2 எங்க பூமியைச் சுற்றிப் பார்

தேவதை 1 முத்துக்கள் விளையும் காடுகள்

தேவதை 2 வைடூரியம் விளையும் வயல்கள்

தேவதை 1 வைரங்கள் மின்னும் வரிசைகள்

தேவதை 2 சுத்தமான சுகந்தமான பெட்ரோல் வாடையில்லாத காற்று

தேவதை 1 மீன்களால் ஆன படகுகள்

தேவதை 2 சிப்பிக்குள் அமைந்த பள்ளிக்கூடங்கள். வீட்டுப் பாடச் சுமை இல்லாத விடுமுறை. சுகமான பாடங்கள்.

பாரதி இல்லை. இல்லை. இது எதுவும் எனக்கு வேண்டாம். ப்ளீஸ். எனக்கு எங்க அம்மாவும் அப்பாவும் தான் வேணும். நான் இங்கே தங்கமாட்டேன்.

தேவதை 2 உன்னாலே இந்த பூமியை விட்டு போகமுடியாது. யார் இங்கே வந்தாலும் திரும்பப் போக ஆசைப்படமாட்டாங்க. ப்ளீஸ்… பாரதி இங்கே எங்களோட தங்கிடேன்.

(தேவதைகள் அவளை அங்கேயே நிறுத்த முயற்சிக்கின்றன. இருள் படர்கின்றது. பின்புலத்தில் நீர்க்குமிழிகளின் ஒலி. எங்கும் அடர்த்தியான ஒளி. தேவதைகள் இல்லை. மீண்டும் மேடை பழைய நிலைக்கு வருகிறது. பாரதி தூங்கிக் கொண்டிருக்கிறாள். வீட்டு அழைப்பு மணி விட்டு விட்டு ஒலிக்கிறது. பின் மேடையில் தெளிவான ஒலியில் இரு குரல்கள்)

அப்பா: ஏண்டி, பாரதி தூங்கி இருப்பான்னு நினைக்கிறாயா?

அம்மா: பாவம். குழந்தை. மெரண்டு போயிருக்கும். ஆயிரம் சொல்லுங்கோ. நாம இன்னிக்கு சினிமாவுக்கு போயிருக்கக் கூடாது.

அப்பா : சாவி உன்கிட்டே தானே இருக்கு?

அம்மா: ஒரு நிமிஷம். குடையைப் பிடிங்க. என் பர்ஸிலே இருக்கான்னு பார்க்கிறேன்.

பாரதி: (விழித்துக் கொள்கிறாள். பார்வையாளர்களைப் பார்த்து)

ஷ்ஷ். நான் இன்னும் தூங்கலை. நல்லா முழிச்சிக்கிட்டுத்தான் இருக்கேன். நீங்க சத்தம் போடாமல் இருங்க. அப்புறம் அம்மாவும் அப்பாவும் நாளைக்கு காலையிலே ஆபீஸ் கிளம்புற ஜோலியிலே பிஸியாயிடுவாங்க எனக்கு என் அம்மாவை இறுக்கிக் கட்டிப் பிடிச்சித் தூங்கறது பிடிக்கும். என் அப்பா தோள் மேலே ஏறி விளையாடறது ரொம்பப் பிடிக்கும். அது எவ்வளவு ஜாலியாக இருக்கும் தெரியுமா? இப்போ இந்நேரம் அம்மாவுக்கு சாவி கிடைத்து இருக்கும். பூட்டைத் திறந்த ரெண்டு பேரும் பாய்ஞ்சு வருவாங்க. நான் நல்லா தூங்குகிற மாதிரி கண்ணை மூடிக்கிட்டு நடிப்பேன். அம்மா வந்து என்னை எழுப்புவா. மெல்ல. ஸôஃப்ட்ஆ ஒரு முத்தம் கொடுத்து அப்பா என்னை தூக்கிட்டு என் செல்லக்குட்டி பட்டுக்குட்டின்னு தூக்கிப்போட்டுக் கொஞ்சுவார். எனக்காக கடையிலே வாங்கி வந்ததெல்லாம் காண்பிப்பார். அப்புறம் அம்மா எனக்கு பாசமா சாதம் ஊட்டி விடுவா. அந்தக் குஷியிலே நான் வயிறு வெடிக்கும் வரைக்கும் சாப்பிடுவேன். அப்புறம் அம்மா என் வலது பக்கத்திலேயும் அப்பா இடது பக்கத்துலேயும் நான் நடுவிலேயும் படுத்துத் தூங்குவோம். இப்போ தூங்குற மாதிரி.

(படுத்துத் தூங்குகிறது. போல பாவனை செய்கிறாள். ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்வையாளர்களைப் பார்த்து)

Tata…. bye… bye…

எனக்கு இதுதான் வேணும்.

good night…

-திரை-

குறிப்பு-

சில ஆண்டுகளுக்கு முன்பு National Book Trust, Delhi வெளியிட்ட Together with children – in the Drama World என்னும் குழந்தைகள் நாடகத் தொகுப்பில் இந்த நாடகத்தைப் படித்தேன். மராட்டிய மூலத்தில் இந்த நாடகத்தின் பெயர் ‘பாபி’ (Bobby)/

இந்த நாடகத்தை என்னுடைய இயக்கத்தில் மேடையேற்றவும் நினைத்தேன். பல காரணங்களால் மேடையேற்றம் முடியாமல் போனது. சரி. மொழிபெயர்த்து வைத்தால் யாருக்காவது பிற்காலத்தில் பயன்படுமே என்று நினைத்தேன்.

நான் பொதுவாக நாடகங்களை மொழிபெயர்ப்பாக செய்வது இல்லை. இயன்றவரை அதைத் தமிழ் சூழலுக்கு முற்றாக மாற்றுவதற்கு முயற்சிப்பேன். நான் இயக்கிய எல்லா நாடகங்களிலும் இப்படித்தான் முயற்சித்து இருக்கிறேன். நான் தமிழில் கொண்டு வந்த சில வேற்று மொழி நாடகங்களையும் தமிழ்நாடகமாகக் கொண்டு வரத்தான் முயற்சித்து இருக்கிறேன். அதன் வழியே இந்த நாடகத்தையும் தமிழ்ப்படுத்த நினைத்தேன். 1995ம் ஆண்டு என்று நினைக்கிறேன். சாகித்ய அகாடமியில் ஒரு கருத்தரங்குக்காக வந்திருந்த என்னுடைய துரோணாச்சாரியார் பேராசிரியர் சே.ராமானுஜம் அவர்களிடம் விஜய் டெண்டுல்கரின் ‘பாபி’ நாடகம் பற்றிச் சொன்னேன். அந்தக் கருத்தரங்கத்துக்கு வந்திருந்த விஜய் டெண்டுல்கரிடம் என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.

இந்த நாடகத்தை மொழிபெயர்க்க அனுமதி வேண்டும் என்று கேட்டேன். கடிதம் அனுப்பு பார்க்கலாம் என்றார் விஜய் டெண்டுல்கர்.

அவரிடம் பேசிய பிறகு உடனே இந்த நாடகத்தை ‘பாரதி’ என்னும் பெயரில் மொழிமாற்றம் செய்து வைத்தேன். சில மாதங்கள் கழித்து அல்லது ஏறத்தாழ ஓராண்டு கழித்து விஜய் டெண்டுல்கருக்கு டாக்டர் சே.ராமானுஜம் என்னை அறிமுகப்படுத்தியதை நினைவுறுத்தி இந்த ‘பாபி’ நாடகத்தை தமிழ்ப்படுத்த அனுமதி வேண்டினேன். ஒரே வரியில் அவருடைய மின்னஞ்சல் வந்தது. – “You can” என்று. இதனை என் வாழ்க்கையில் கிட்டிய மிகப்பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

இந்த நாடகத்தைக் குழந்தைகள் நாடகத்தில் ஆர்வம் உள்ள யார் வேண்டுமானாலும் மேடையேற்றிக் கொள்ளலாம். பெரியவர்களும் குழந்தைகளும் இணைந்து நடிக்க வசதியான குழந்தைகள் நாடகம் இது. நான் இயக்கியிருந்தால் சிவாஜி, அக்பர், அவுரங்கசீப் போன்ற பாத்திரங்களை பெரியவர்களை வைத்து நடிக்க வைத்திருப்பேன். பாரதி, மிக்கி மவுஸ், குதிரை, நிலா போன்ற பாத்திரங்களில் குழந்தைகளை நடிக்க வைத்திருப்பேன். மேடையற்ற நினைக்கும் இயக்குநர்கள் தங்கள் வசதிப்படி செய்து கொள்ளலாம்.

இந்த நாடகப்படியை மேடையேற்ற என்னுடைய அனுமதி தேவை இல்லை. மேடையேற்றம் குறித்த தகவல் மட்டும் அனுப்பி வைத்தால் மகிழ்ச்சி அடைவேன்.

ராகவன் தம்பி
kpenneswaran@gmail.com

Series Navigationஇதுவேறு நந்தன் கதா..மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5
author

ராகவன் தம்பி

Similar Posts

4 Comments

  1. Avatar
    Innamburan says:

    படித்துக்கொண்டு இருக்கிறேன். சுவையாக போகிறது. பிறகு எழுதுகிறேன்.

  2. Avatar
    ராகவன் தம்பி says:

    புதுவை சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியில் இந்த நாடகத்தை மேடையேற்றப்போவதாக பேராசிரியர் செ.ரவீந்திரன் சில நிமிடங்களுக்கு முன்பு தொலைபேசியில் தெரிவித்தார். இயக்குநர் எல்.ரவி. சென்ற வாரம் அவர்கள் இதனை எனக்குத் தெரிவித்து இருந்தால் இந்த விபரத்தை என்னுடைய குறிப்பில் சேர்த்து இருக்கலாம். ஒத்திகையின் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கலாம்.

    ராகவன் தம்பி

  3. Avatar
    K R Mani says:

    மும்பையின் ரசனை அதிஅற்புதமானது(!). இருக்கிற பைன் ஆட்ர்ஸீகளும், தமிழ் சங்கங்களுமே மிகவும் கஸ்டப்பட்டு தனது பிரார்பத கர்மாவை செய்து கொண்டிருக்கின்றன. பாவம் எப்பவெல்லாம் கல்யாணம், கருமாதி, பட்டிமன்றங்கள் இல்லையோ அப்பவெல்லாம் சில தெரியாமல் நல்ல கச்சேரியே, நாடகமோ நடந்துவிடுகிறது.

    இசையில் சபாக்களின் தரம் மீது எனக்கு எந்த கைச்சுட்டலுமில்லை. சஞ்சய் சுப்பிரமணியத்தின் கச்சேரியை கலாரசனையோடு வைத்திவர்களுக்கு என் தலைநெற்றி தரைபடும் வணக்கங்கள்.

    ஆனால் அதற்கு சாபவிமோசனமாக அவர்கள் அழைக்கும் நாடகங்கள் ஐயோ.. அம்மா.. அம்மா..
    ஒரு முறை எனது அம்மாவோடு டிவி வரதராசன் நாடகத்திற்கு போயிருந்தேன். அம்மா எப்படியோ தனி ஆட்டோ பிடித்து வந்து தொலையட்டும் என்று நினைக்குமளவுக்கு என் தாய்ப் பாசத்தை கத்தரித்த பெருமை அன்னாருக்கு உண்டு.
    அடுத்த சில நாட்களில் ஒய் ஜீபி நாடகம். கொஞ்சம் அரதப்பழசு. உள்ளூர்காரர்கள் நாடகம் – வேறு வழியில்லை முக மதிப்பிற்காக போக வேண்டும்.
    இன்னும் 60,70களை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் நாடகங்கள்.
    புரியவில்லை, நாடகத்தில் மட்டும் ஏன் இத்தகைய பின்னேற்றம் என்று.

    திருவள்ளுவர், பாரதி இளங்கோவை குழந்தை குரங்கு போல பிடித்துக்கொண்டிருக்கும் தமிழ்ச் சங்கங்கள் போலவும், உளுத்துப் போன கழக கொள்கைகளை நாப்கின்களாக வைத்துக் கொண்டு அதற்கு இலக்கிய வாசனை பூசும் கொள்கை வீரர்களும் இருக்கும்போது நாடகத்தில் மட்டும் ஏன் மாற்றத்தை எதிர்ப்பார்க்கிறாய் என்று நீங்கள் கேள்வி கேட்டால் என்னிடம் பதில் எதுவுமே இல்லை.

    ஆனால் நாடக உலகத்தில் ஏற்பட்ட எந்த மாற்றங்களும் பாதிக்கப்டாத ஒரு களமாகத்தான் முமபை இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

    மும்பை புலம்பல்கள் இருக்கட்டும். ஆனால் அதே மண்ணில் தான் மராட்டி நாடகங்கள் சக்கை போடு போடுகின்றன. தஞ்சைகாரனுக்கு சங்கீதம் போல, வங்காளியின் புத்தகம் படித்தல் போல, மராட்டிக்காரனுக்கு நாட்கம் அவனது வாழ்க்கையோடு ஒட்டிய ஒரு விழுமியம் போல.

    இந்த புலம்பல் மனதோடும், ஒரு அவநம்பிக்கையான மனதோடும் தான் ராகவனின் இந்த கட்டுரை படிக்க நேர்ந்தது. அவர் தெரியதவரல்ல. அவரின் நாடகப்புலம் தெரியாததமன்று.
    ஆனால் மனம் ஏதோ ஒரு அவநம்பிக்கையோடுதான் படிக்கத் துவங்கியது.

    என்ன சொல்ல, ?

    மிகப் பிரமாதமான மொழிபெயர்ப்பு. ராகவன் தம்பி எனப்படுகிற பென்னேஸ்வரனின் கைவண்ணம் தெரியாமலில்லை. இது வெறும் மொழிபெயர்ப்பு மட்டுமன்று. தனக்கு தெரிந்த, தான் உழைத்த நாடக உலகின் அனுபவங்களும் சேர்ந்து குழைத்து, வாழ்வியலோடு இணைந்து செய்த மொழிபெயர்ப்பு இது.

    இதன் கதைகளம் – எத்தனைதான் மொழிபெயர்ப்பு மட்டமாகயிருந்தாலும் – பிரமாதமாய் ஒத்தைக்காலிலே தவம் செய்யும் வல்லமை கொண்ட சத்தியம். அதனை உள்வாங்கி, வெளியிட்டிருக்கும் ராகவனின் எழுத்துக் கூர்மையை, அங்கத மேன்மையை மூலத்தோடு ஓப்பிட்டு யாரேனும் விமர்ச்னம் செய்யலாம்.

    நான் மூலம் படிக்கவில்லை. படிக்கப் போவதுமில்லை. ஆனாலும் ராகவனின் டச்சை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. தனது கையெழுத்தின்றி ஒரு மொழிபெயர்ர்ப்பை தட்டையாக செய்ய ராகவனால் முடியாது. இலக்கிய ஆர்வமும், நாடக அனுபவ செறிவும் கண்டிப்பாய மூலத்திற்கு பலம் சேர்க்கும் மொழிபெயர்ப்பாய் இதை மாற்றியிருக்கும் என என்னால் அனுமானிக்க முடிகிறது.

    இருக்கட்டும் அநுமானங்கள்.

    ரசிப்போம் நாடகத்தை. ஏதாவது மும்பை குழு இதை எடுத்து நாடகமாக்கும் ஒரு நல்ல தருணத்திற்காக காத்திருப்பேன். அதுவரை வரதாரசன்களும், ஒய்ஜிபிக்களும் என்னை விரட்டிக்கொண்டிருப்பார்கள்.

  4. Avatar
    charusthri says:

    Mani,your analysis of mumbai tamil dramas are partly correct.Still some good dramas actad by meenalata and Santosh are successfully staged Penneswarans this drama translation is an excellant piece.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *