This entry is part 28 of 34 in the series 6 ஜனவரி 2013
சீராளன் ஜெயந்தன்
நான் ஆணாய் பிறந்தது வெட்கம்
கோரப்பற்களும்
கொடூர நகங்களும்
குருதி சொட்டும் நாவும்
குத்திக் கிழிக்கும்
கொடுங்கோளும் கொண்டு
சதை தேடி சதை தேடி
பசியாறா பிணந்தின்னி
சாகும் வரை சதை வேண்டும்.
காமக் கண்களும் கற்பழிக்கும்
காமிரா கண்களும் எரியூட்டும்
சேலைக்குள் ஊடுருவும் கண்கள்
துகிலுரியத் துடிக்கும் மனசு
அது எவளாயினும்
எனக்கு வேண்டும்.
உடன் பிறந்தவள் தவிர்த்து
யாரும் இல்லை சகோதரி
என்று
இறுமாப்பு பேச்சிலும்
காமம் களியூரும்.
பணமும் புகழும் காட்டி
பசியோடிருக்கும் மாதவியரை
பந்தி வைத்து படம்காட்டி
விலை மாதர் எனச்சொல்லும்
வியாபாரி விலை மகன்
விந்துற்பத்திக்கு தீனியிட்டான்.
உடல் திராணியற்று போயினும்
உள்ளம் ஆண் வக்கிரமாகவே தொடரும்
ஆண்  ஆணாக இருக்கும் வரை
உயிரியல் உடல் மாறாதவரை
உள்ளம் மாறுவதில்லை
மாற்றுவோர் யாரும் இல்.
உனக்கான என் பரிதாபங்களும்
பட்சாதாபங்களும்
வேறொரு பெண் மேல்
காமுறு வரைதான்.
யாருடனும் சுகிக்கவே
துடிக்கிற ஆண்.
இந்த விலங்கினை
அழித்தொழி பெண்ணே
ஆணினத்தை காயடி
அல்லது
தற்காத்துக் கொள்.
–      சீராளன் ஜெயந்தன்
Series Navigationஎரிதழல் கொண்டு வா!இரு கவரிமான்கள் –