எரிந்த ஓவியம்

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

முடவன் குட்டி

பின் வீட்டு மாடிக்கதவு திறந்தேன்

ஆரத்தழுவியது காற்று

விரிந்த கண்மாய்

வற்றும் குளம்

மரங்களூடே மறைந்து மறைந்து
தோன்றும்
தூரத்து தொடர்ச்சி மலை

குளக்கரை தொட்டுவிட
சரிந்து இறங்கும் வானம்

தவிப்போ தவமோ ஏதுமிலாது
சும்மா நிற்பது போல்
காத்திருக்கும் கொக்குகள்

ஏதோ ஓர் வான் பறவை
கீழ் இறங்கி -குளம் தொட்டு- மேலேகும்
வாயில் மீனுடன்

குளத்தின் பேரழகு
மலைத்து நின்றேன்
சாயுங்காலம் வரை
அழியுமோ இவ்வோவியம்..?

பார்வை விலகி
குளக்கரை மேட்டில் விழுந்தது

கால் விந்தி
பக்கவாட்டில் சாய்ந்து
அசைந்தது ஓர் உருவம்
அ..
இது அவனது நடையல்லவா..?
அவன் தானா..?
துரோகி

இரு பத்து ஆண்டுகள்
கீழ்
மன ஆழத்தில் புதைந்து கிடந்த
துரோகத்தின் கரும்புகை
உயிர் கொண்டு மேலெழ
பற்றி எரிந்தது மனம்

சாயும் வரை சாகாதென
சற்று முன் மனம் படிந்த
அழகு ஓவியமும் தான்

Series Navigation

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *