This entry is part 14 of 33 in the series 4 ஜனவரி 2015

நந்தாகுமாரன்

நான் நடக்கும் இடமெங்கும்
உங்கள் கருத்துகளுக்கான
விருப்பக் குறிகளை
சாமார்த்தியமாகப் பதுக்கி வைத்திருக்கிறீர்கள்
நானும்
ஒரு கன்னிவெடி நிலத்தில் போல
கவனமாகவே கடக்கிறேன்
இடறி விழுந்தாலும்
வாசலுக்கு வெளியே போய்
தப்பித்துக் கொள்கிறேன்
உங்கள் விருப்பப் பெருங்கடலின்
ஒரு துளி இக்குறி என்பதை
என்னைப் போன்றே தான்
நீங்களும் உணர்கின்றீர்களா
உங்கள் நட்பு அழைப்புகள்
வசீகரமானவை எனினும்
அவற்றை உதாசீனப்படுத்தக் கற்றுக் கொண்டுவிட்டேன்
பேச்சு வார்த்தைக்கு இடமே இல்லை
பகிர்வுகளையும் பரிந்துரைகளையும் பார்க்கவே மாட்டேன்
மேலும் உங்கள் விளையாட்டுகளுக்கும்
அளவே இல்லாமல் போய்விட்டது
எதிர் கருத்து எதுவும் இருந்தாலும் கூட
நான் உங்களுக்கு மட்டுமாவது
தெரிவிக்கப் போவதில்லை
ஆனாலும்
எதைப் பற்றியும் கருத்துக் கூறுவதில்
உங்களுக்கு உள்ள சுதந்திரத்தை
நான் தடுக்கப் போவதில்லை
பின் தொடரும் உங்கள் நிழலின் கூக்குரல்
கேட்கக் கேட்க
எனக்கு புளித்த தயிரின்
நினைவே வருகிறது
சரி
இப்போது நீங்களும் ஒரு எழுத்தாளர் ஆகிவிட்டீர்கள்
அப்புறம்
எப்போது உங்கள்
முகப்புத்தகம் முதல் தொகுதி
வெளியிடப் போகிறீர்கள்?

Series Navigationசுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வுஜல்லிக்கட்டின் சோக வரலாறு