This entry is part 9 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

        ரமணி

பார்க்காதே என்கிறாள்

கண்டிப்பான குரலில் அம்மா.

 

கண் இருண்டு போய்விடும்

எனப் பயம் சொடுக்கும் அதிர்வில்

கண்மூடிச் சொல்கிறாள் அக்கா.

 

மழைகூட

இரண்டாம் பட்சமாய்ப்

போகச் செய்யும்

அந்த மின்சாரப் பாம்பை

எப்படித்தான் பார்க்காமல்

இருக்கமுடியும்?

 

இடியின் அபஸ்வர

பய லயம் சேர்ந்த

ஒளித்தெறிப்பு

மனதிற்குள் நிரப்பும்

அபூர்வ சங்கீதத்திற்காகவே

மழைப்பொழுதுகள்

மங்கலாக இருக்கையில்

எப்படித் தவிர்ப்பது

மின்னல் பார்ப்பதை?

 

தகதகக்கும் தங்க வாள்

வானைத் துண்டாக்கிப்

பிரபஞ்ச ரகஸ்யங்களைக்

காட்டும் கணத்தை

ஒரே ஒருமுறையாவது

ஒரு பறவைபோலப் பறந்து

பக்கத்திலிருந்து

பார்த்துவிடவேண்டும்.

 

பின் வேறெதையும் பார்க்கக்

கண் இல்லாவிட்டால்தான் என்ன?

 

—- ரமணி

Series Navigationஸ்பரிஸம்ஜி. நாகராஜனின் சிறுகதைகள்