கவிதையாக ஒரு கதை தாத்தாக்கள் வாழும் இல்லங்கள்

This entry is part 4 of 15 in the series 23 அக்டோபர் 2016

 

 

தாத்தாவுக்கின்று

எண்பது வயது

 

‘சொந்தக் காலில்

நிற்கிறார்’ என்று

சொல்லவைத்த ‘கால்’கள்

தன் காலை மறந்து

‘கல்’ லாக மறத்து

 

இன்று

உள்ளங்கால் ஊன்றினால்

உச்சந்தலை இறங்குது

சுத்தியடி வலி

 

அந்தக் கால்களுக்கின்று

காலவரையற்ற ஓய்வு

புதிய நியமனம்

சக்கர வண்டி

 

தாத்தாவின்

பாதப் பென்சில்

பதிந்த தடங்களை

ரப்பர் வண்டி

அழித்தழித்து உருள

உருள்கிறது அங்கே

தாத்தாவின் வாழ்க்கை

 

ஒரு நாள்

 

தாத்தாவுக்கும் பேரனுக்கும்

தல்லுமுல்லு

‘தாத்தா இறங்கணும்

நா ஓட்டணும்’

மல்லுக்கு நிற்கிறான் பேரன்

 

 

தோற்றதாய் நடித்து

வெல்கிறார் தாத்தா

 

உயிர்ப் பேரன் தாங்கி

உள்ளங்கால் ஊன்றி

இறங்குகிறார்

 

சக்கரைப் பேரனின்

சக்கரச் சவாரியில்

வெளிச்சமாகிறது வீடு

 

சின்னச் சின்ன

இடியாய் கைதட்டல்

சின்னச் சின்ன

மின்னலாய் சிரிப்பு

ஆனந்த மழையில்

வீடேநனையுது

 

உச்சந்தலையில்

அந்த சுத்தியடி வலியை

விழுங்கிக் கொண்டே

தாத்தாவும் நனைகிறார்

ஆனந்த மழையில்

 

தர்மங்கள் வாழும்

உள்ளங்கள்

தாத்தாக்கள் வாழும்

இல்லங்கள்

 

அமீதாம்மாள்

 

 

Series Navigationபியூர் சினிமா புத்தக அங்காடி – விரிவாக்கம்திரும்பிப்பார்க்கின்றேன் – நீர்வைபொன்னையன்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *