This entry is part 6 of 12 in the series 12 மார்ச் 2017

நாளென்பது கேடாய்
நான் என்பது தீண்டதகாததாய்
வாழ்வின்று பாழாய் போனது
யாருக்கும் இல்லை அபத்தமாய்…

ஓடி களைத்ததில் ஒரு மிடறு
நீர் கொடுக்க கைகள் இல்லை
அன்பென்பது வெறும் வார்த்தையாய்…

உண்டு உறங்கி எழுந்து இருந்து
மிச்ச சுழற்சியில்  சுழன்று சுழன்று
ஓடாய் தேய்ந்தாலும்
உயிர் இன்னும் விடாமல் ஒட்டிக்கொண்டே…

மதி கெட்ட மனது கையேந்தி கையேந்தி காயங்களைத் தழும்பாக்கிக் கொண்டது

புறங்கணிப்பில் மானம் கெட்டு
வாழ்வுதனில் சிறுமைப்பட்டு
இருத்தலில் பாவங்களைக் கணக்கிட்டு
ஆசைகளுக்கெல்லாம் தீயிட்டு
வார்த்தைகளையெல்லாம் தொலைத்து
ஊனமாகி போனேன் இன்று…

நிஜம் கொன்று நினைவு தின்று நிழலாய் மட்டும் வாழ்வு
நிறங்களற்று…

– தினேசுவரி,மலேசியா

Series Navigationநாற்காலி மனிதர்தொடுவானம் 161. பயிற்சி மருத்துவம்