This entry is part 9 of 9 in the series 27 ஆகஸ்ட் 2017

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

 

கிட்டத்தட்ட ஒரு பிள்ளையைப் போல்தான்

வளர்த்திருந்தேன் அந்தக் கிளியை

அந்தக் கிளிக்கு ஒரு கூண்டிருந்தது

ஆனால் பூட்டில்லை

ஏன் கதவுகளே இல்லை.

பரணிக்கு மேல்

பீரோவிற்கு மேல்

அல்லது எவர் தலையிலாது

ஏறி நின்று கொள்ளும்

கொடுத்த எதையாவது

தின்று கொள்ளும்

நாற்சுவர் மதில் ஓரங்களில்

பறந்து மோதி

விழுந்து கொண்டிருந்த கிளியை

மனசாட்சி உறுத்தவே

ஒரு புளியந்தோப்பில் பறக்க விட்டேன்

இரண்டு நாட்களில்

இன்னொரு கிளியுடன்

இல்லம் திரும்பியிருக்கிறது

எல்லா அறைகளும்

சிறைகளில்லை

எல்லா சுதந்திரங்களிலும்

பாதுகாப்பில்லை

தங்களது மொழியினில்

கிரீச்சித்துக் கொண்டே

கதவில்லா அந்தக் கூண்டில்

முத்தித்துக் கொண்டன

அந்தக் கிளிகள்.

 

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

 

 

 

 

 

Series Navigationகாதலனின் காதல் வரிகள்