This entry is part 4 of 8 in the series 21 ஜூலை 2019

கு. அழகர்சாமி

தேவாலயம்

பூட்டிக் கிடக்கிறது.

குரங்குகள்

அதன் ஓடுகளைப் பிரித்துப் போட்டிருக்கின்றன.

தேவனின் அற்புதங்கள் தேடி யாரும்

அங்கு வருவதில்லை.

அருகில் பிரார்த்தித்திருக்கும்

பூக்கும் காலமும் பூக்காத காலமும் தெரிந்த மாமரம்.

எங்கு செல்கின்றன

அதன் வேர்கள்?

அதன் ஆன்மாவின் ஆழம் தேடியா?

அல்லது

தேவனின் ஆதித் தடம் தேடியா?

அன்றேனோ

குரங்குகளின் அட்டகாசம் ஏதுமில்லையென்று

அளக்கிறாள் ஒருத்தி.

அதை அற்புதமாய்

தினந்தோறும் அவள் விரும்புகிறாளென்று தெரிகிறது.

மாமரத்தின் கிளைகள் பிரிந்திருக்கும் ஓடுகளில் தாழ்ந்து

தேவனைத் தரிசிக்கின்றன.

பூட்டிக் கிடக்கவில்லை தேவாலயம் என்கிறேன் அவளிடம்.

திகைக்கிறாள் அவள் அற்புதத்தைத் தேடி.

கு. அழகர்சாமி

Series Navigationஅரை நூற்றாண்டுக்கு முன் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் முதல் தடம் வைத்து புவிக்கு மீண்ட நாள் கொண்டாட்டம்குரு அரவிந்தன் எழுதிய ‘ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்’