This entry is part 4 of 10 in the series 15 செப்டம்பர் 2019

கு.அழகர்சாமி

அந்தி

வேளையில்

ஒளிரும்

கலர்க் காகிதக் கொம்புகளைத்

தலையில் தரித்து

ஒரு விநோத விலங்கு போல் தலையாட்டி

வேடிக்கை பல  காட்டி

கிழக் கிலுகிலுப்பைக்காரனொருவன்

கிலுகிலுப்பை ஒலித்து,

கரையைச் சதா காதலில் அழைக்கும் அலைகளெனப் பல்கும்

கிலுகிலுப்பை ஒலிகளில்

காண்பவரை விளித்து –

பரிந்து அலைகள் தாலாட்டும் கடற்கரையில்

கிலுகிலுப்பை ஒன்று கூட

விற்க முடியாமல்-

ஆனால்,

தாலாட்டு மறந்த

அம்மாக்களின் செல்பேசிகளில் படம் பார்த்து

ஒலிக்கும் கிலுகிலுப்பைகளை  மறந்திருக்கும் குழந்தைகள்.

ஆதியிலிருந்து ஓயாத கிலுகிலுப்பையாய் ஒலிக்கிற கடல்

எப்போதும் போல் இப்போதும் ஒலிக்கிறது

விவரம் தெரியாமல்.

அதிர்கிறது

அலையோசை மீறி

கிலுகிலுப்பைக்காரனின் 

கிலுகிலுப்பை

ஒலி.

திருவிழாவில் தொலைந்து போன குழந்தையாய்,

குழந்தைகளைக் குழந்தைகளாய்க் காணத் தேடி

அலைந்து திரிகிறது கடற்கரையில்

தனியாய்

அது.

ஆனால்,

அம்மாக்கள் தாலாட்டிக் காணாத குழந்தைகள்

அவர்களின்  செல்பேசிகளில் படம் பார்த்து காணாதிருக்கும் அதை.

கு. அழகர்சாமி

Series Navigationகனவுகளற்ற மனிதர்கள்இந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து கிடக்கிறது