சி. ஜெயபாரதன், கனடா
புத்தாண்டு பிறக்குது ! நமக்கு
புத்தாண்டு பிறக்குது !
கடந்த ஆண்டு மறையுது, நடந்த
தடம் மாறப் போகுது !
வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு
திக்கு மறையப் போகுது.
கணனி யுகம் பின்னி உலகு
பொரி உருண்டை ஆச்சுது.
வாணிப உலகு கூடி இயங்கி
நாணய மதிப்பு உயருது
விலை மதிப்பு ஏறப் போகுது.
ஐக்கிய நாட்டு மன்றம்
அமைதி கண்காணித்து வருகுது.
பூகோளச் சூடேற்றம் புவியோரை
ஒன்று படுத்திப்
போரணியில் நிறுத்தி விட்டது.
வித்தைகள் இணைந்து உழைக்கணும் !
விஞ்ஞானம் மக்கள் நலம் பெருக்கணும் !
வேலைகள் பெருகணும் !
ஊதியம் உயரணும்.
சித்தர்கள் மண்ணில் பிறக்கணும் !
பித்தர்கள் தெளிவாகணும் !
புத்திகள் கூர்மை ஆகணும் !
கத்திகள் ஏர்முனை ஆகணும்.
யுக்திகள் புதிதாய்த் தோன்றணும்.
சண்டைகள் குறையணும் !
ஜாதிகள் கைகோர்த்து உழைக்கணும் !
சமய இனத்தர் கூடி வசிக்கணும் !
திறமைகள் ஒன்றாகி வலுக்கணும்
வறுமை குன்றி வருவாய் பெருகணும்.
நீர்வளம் பெருக்கணும்.
நிலவளம் உணவு அறுவடை செய்யணும்.
வேளாண்மை விருத்தி ஆகணும் !
பசுமை மின்சக்தி யந்திரங்கள் ஓட்டணும்.
பஞ்சம் குறைய மிஞ்சி விளையணும் !
லஞ்ச மனிதர் அஞ்சி அடங்கணும் !
நீர்வளம், நிலவளம், சூழ்வெளித்
துப்புரவு செய்யணும் !
விடுதலை நாடு சீராய்த் தழைக்க,
கடமைகள் முடிக்கணும்; நாட்டுப்
பொறுப்புகள் ஏற்கணும் !
தேசப் பற்று மனதில் ஊற்றாகணும் !
தேச விருத்தி குறிக்கோள் ஆகணும் !
தேச மாந்தர் நேசம் பெருகணும் !
+++++++++++
கருத்துக்கள் உடோபியன் ஆக இருப்பினும், ஓகே.
கவிதை மொழிநடை, ஒரு – பாரதியார் + பட்டுக்கோட்டையார் + கொத்தமங்கலம் சுப்பு + கம்யூனிஸ்ட் தலைவரும் கவிஞரும் ஆனா ஜீவா – இந்நால்வரின் நடைகளைச் சேர்த்து கலக்கினால் வரும் நடை. கவிதைச் சிந்து என்பர். நாட்டுப்புற பாடல்கள் மெத்தபடிக்காத நாட்டுப்ப்புறத்தாருக்கு; எனவே சிந்து நடையில் வரும். மேலே சொன்ன நால்வரும் பலபாடல்களை இத்தொனியில் பாடினார்.
ஏன் ஜெயபாரதன் தனக்கென ஒரு நடையில் எழுதக்கூடாது? அதாவது, வாசிக்கும்காலை மறைந்த கவிஞரையும் நினைவுபடுத்தக்கூடாது.
நண்பர் விநாயகம்,
சிந்து நடை என்றால் புரியவில்லை. எனது வையகத் தமிழ் வலைப் [https://jayabarathan.wordpress.com/ பூங்காவில் உள்ள கவிதைகளைப் படித்துப் பாருங்கள்.
எனது தனித்துவ நடை தெரியும்.
சி. ஜெயபாரதன்