தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 6 of 13 in the series 25 அக்டோபர் 2020

                             

                        உவரிப்பரு முத்தம் நிரைத்த திருப்

                              பள்ளிச்சிவி கைப்புடை உம்பர்வர

                        கவரிச் சிறுதென்றல் அசைப்ப மிசைக்

கொற்றக் குடைவந்து கவிப்பவுமே.          [181]

[உவரி=கடல்; பரு=பெரிய; பள்ளி=இடம்; சிவிகை=பல்லக்கு; உம்பர்=வானின்தேவர்; கவரி=விசிறி; மிசை=மேல்;கவிப்ப=மூட]

      கடலிலிருந்து சிந்திய பெரிய நல்ல முத்துகள்கொண்டு இழைக்கப்பட்ட பல்லக்கில் அமர்ந்து வானத்துத் தேவர்கள் எல்லாரும் உடன்சூழ்ந்து வரத்தென்றல் காற்றானது சாமரம் வீச, மேலே வெண்கொற்றக் குடை விரித்து நிழல்தர திருஞானசம்பந்தர் புறப்பட்டார்.

=====================================================================================                  மேகத்தொரு பந்தர் எடுத்து உடுவாம்                                       வெண்முத்தம் ஒழுக்கி மினற்கொடியால்

                        மாகத்து நிரைத்து மழை சிலையால்

                              வழிதோரணம் இட்டனன் வாசவனே.        [182]

[உடு=நட்சத்திரம்; மகம்=ஆகாயம்; மழைச்சிலை=வானவில்; வாசவன்=இந்திரன்]

      திருஞானசம்பந்தர் புறப்பட்டார். இந்திரன் அவர் செல்லும் வழியெல்லாம் மேகத்தால் பந்தலிட்டான். நட்சத்திரங்களாகிய முத்துகளால் மாலை கட்டியது போல மின்னல் கொடிகளை வரிசையாக உண்டாக்கினான். ஆகாயத்தில் வானவில்லால் தோரணம் அமைத்தான்.

=====================================================================================

                         சதுரானனும் சக்ரா யுதனும்

                              சந்த்ரா தவரும் இந்திரா தியரும்

                        மடுரா புரிவாது அறிவாம் எனமேல்

                              வரவந்தனன் வைதிக வாரணமே.         [183]

[வாது=விவாதம்; வைதிகம்=வேதஒழுக்கம்; வாரணம்=யானை]

      நான்கு சிரங்களை உடைய பிரமனும், சக்கரப்படையை உடைய திருமாலும், இந்திரன் முதலான தேவர்களும், மதுரையில் நடக்க இருக்கும் விவாதப் போரைக் காண வானில் வந்தனர். வேத ஒழுக்க நெறி விளங்கத் தோன்றிய திருஞானசம்பந்தர் யானையைப் போலப் பெருமை பொங்க வரலானார்.

=====================================================================================                       

                        ஆலியும் கடிதிற் புலந்து

கலந்து குண்டர் துடைக்கும்அப்

பீலியும் சுறுநாறி ஏறி,

      எறிந்து போன பிரம்புமே.       [184]

[அலி=நீர்த்துளி; கடிதில்=விரைவில்; புலந்தது=காய்ந்தது; பீலி==மயில்தோகை; நாறுதல்=அழிதல்; எறிதல்வீசுதல்; பிரம்பு=குச்சி]

      அலி என்பது விகாரமாகி ஆலி எனவந்தது. சமணர்கள் மந்திரித்துத் தெளித்த நீர்த்துளிகள் விரைவில் காய்ந்து ஆவியாகின. சமணர் குளிர்ச்சிதரத் தடவிய மயில் தோகையும் எரிந்து கரிந்து போனது. அந்த மயில் தோகையைக் கட்டியிருந்த பிரம்பும் வீசி எறிய வேண்டியதாயிற்று.

=====================================================================================                 

பொறை சூழ்வரையில் புலிஏறு எழுதம்

பொன்மேரு வரைப் பெருமான் மகளார்

மறைசூழ் திருவெள்ளி மலைப்பெருமான்

மகனார் அடிவந்து வணங்கியுமே.                [185]

[பொறை=பாறை; புலிஏறு=ஆண்புலி; வரை=மலை; மறை=வேதங்கள்]

      பாறைகள் பல சூழ்ந்துள்ள மலைகளில் எல்லாம் தன் புலிச்சின்னத்தைப் பொறித்த பொன்னைப் போலான மேருமலைக்குரிய சோழமன்னன் திருமகளான மங்கையர்க்கரசியார் வேதங்கள் சூழ்ந்த வெள்ளிமலைப் பெருமானாம் சிவனின் திருமகனான திருஞானசம்பந்தரின் திருவடிகளை வணங்கினார்.

=====================================================================================                 

”மன்காதலில் உய்வதில் வையமெலாம்

      மலையாள் முலை ஆரமு துண்டவனே

என்காதலன் எம்பெருமான் இவனுக்கு

இதுவேதகவு” என்றனள்; என்றலுமே.            [186]

[மன்=மன்னன்; மலையாள்=பார்வதி; ஆரமுது=தெவிட்டாத; தகவு=தன்மை]

      மன்னன் அன்பு காட்டும் திறத்தாலேதான் இவ்வுலக மக்கள் உயிர் வாழ்கின்றனர் என்பர். அப்படியிருக்க மலையரசன் மகளான பார்வதி ஊட்டிய ஞானப் பாலாகிய அமுதம் உண்டவரே! என் கணவன். எம் அரசர் அவருக்கு இந்நிலை வரலாமா?” என்று கூறி வருந்தினாள்.

=====================================================================================      .                                 

                   மாமான் மரபின் பகல் மண்டிலம் ஒத்து

எரிமண்டினன் என்னும் மகீபதிநின்

கோமான் மரபின் சசிமண்டிலம் நேர்

குளிரும்படி காணுதி கோமளமே.      [187]

[மரபு=குலம்; பகல்=சூரியன்; எரி=வெப்பம்; மண்டுதல்=சூழ்தல்; மகீபதி=கணவன்; கோமான்=அரசன்; சசி=சந்திரன்; கோமளம்=தாமரை]

      திருஞானசம்பந்தர் பாண்டிமாதேவியிடம், “உன் கணவன் அவர்தம் மாமனார் குலமுதல்வன் சூரியன் போல வெப்பத்தால் வாடுகிறார். இனிமேல் அவர்தன் குலத்தின் முதல்வன் சந்திரன் போலக் குளர்ச்சி அடைவார். நீ அதைக் காணலாம்” என்றார். சோழன் குலம் சூரியகுலம். பாண்டியர் குலம் சந்திரகுலம்.

=====================================================================================                   என்னக் களிகூரும் இளங்கொடியோடு

எதிர்கொண்டு புகுந்து குலச்சிறையார்

தென்னற்கு அருகே ஒருபீடிகை இட்டு

      ’இனிதேறி இருந்தருள் செய்க’ எனவே.             [188]

[களி=மகிழ்ச்சி; பீடிகை=ஆசனம்]

      திருஞானசம்பந்தர் இப்படிச் சொன்னதைக் கேட்டதும், அரசி பாண்டிமாதேவியும், அமைச்சர் குலச்சிறையாரும், மனம் மகிழ்ந்தனர். சம்பந்தரைப் பாண்டிய மன்னன் அருகில் அழைத்துச் சென்றனர். அங்கே ஓர் ஆசனம் இட்டு அதில் அமருமாறு கேட்டுக்கொண்டனர்.

=====================================================================================

                   ஏறிச் செழியற்கு அருகுஇட்ட திரு

                        பள்ளித் தவசின்கண் இருந்தருளச்

                  சீறிச் சமண்மூகர் குலச்சிறையார்

                        செவிவேவன சிற்சில செப்புவரே.     [189]

[செழியர்=பாண்டியர்; பளி=படுக்கை=;தவிசு=இருக்கை; மூகர்=மூடர்;வேவ=வருத்த]

      திருஞானசம்பந்தர் அரசி கேட்டுக்கொண்டபடி பாண்டிய மன்னரின் அருகில் போடப்பட்ட ஆசனத்தில் எழுந்தருளினார். இதைக் கண்ணுற்ற சமண மூடர்கள் குலச்சிறையார் மனம் வருந்தும்படிச் சில சொற்கள் கூறலாயினர்.

====================================================================================         

                  வருவான் ஒருசோழிய வைதிகனாம்  

                        வந்தால் இவன்மாளிகை வாயிதனில்

                  வெருவாது புகுந்து தொடப் பெறுமோ

மீளச் செழியன்திரு மேனியையே”     [190]

வெருவாது=அஞ்சாமல்; மீள=திரும்பவும்; பெறுமோ=கூடுமோ]

”சோழநாட்டில் இருந்து ஒரு வேதியன் வருவானாம். வந்து இந்த அரண்மனைக்குள் அச்சமின்றி நுழைவானாம். நுழைந்து மன்னன் திருமேனியைத் தீடுவானாம். இது கூடுமோ”

Series Navigationகோபுரமும் பொம்மைகளும்யாருக்கு சொந்தம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *