Posted in

எப்போதும் சாத்தி கிடக்கும் வீடு

This entry is part 12 of 12 in the series 21 மே 2023

கோவிந்த் பகவான்

அது ஒரு வீடு

உட்தாழ்ப்பாளிட்டு

எப்போதும் சாத்தி 

ஜன்னல் மட்டும் திறந்தே கிடக்கும்

அது துர் சக்திகள் வெளியேறும் மார்க்கம் என

எல்லோராலும் பரவலாக பேசப்பட்டு நம்பப்பட்டது அதனருகில் சென்றவர்கள் யாரும்

திரும்பியதில்லை

மனிதர்கள் வாழ்ந்ததற்கான எவ்வித அடையாளமுமற்று

வெறுமனே காட்சியாய் அல்லது சாட்சியாய்

மௌனிக்கிறது அவ்வீடு.

பட்டாம்பூச்சிகளின் குவியல் 

அதன் ஜன்னல் வழி புகைபோல் வெளியேறிய ஓர் அதிகாலைப்பொழுதொன்றில்

துழாவும் கண்களால் அதன் அருகடைந்தேன்

மெல்ல மேலெழுந்து வெளியேறும் புகை மண்டலம் சூழ 

ஒரு தேவதை நடனமாடிக்கொண்டிருந்தாள்

(சந்தேகமின்றி தேவதையே தான்).

பூட்டிய பக்கத்து அறையில் யாரோ 

பாடல் பாடுகிற ஒலியும்

அதற்கும் பக்கத்தில் யாரோ

இசைக்கருவிகள் வாசிக்கும் ஓசையும்

இரம்மியமாக்கிய

அவ்வதிகாலைப் பொழுது

வழக்கம்போல் முற்றும் விடியாமல் 

ஒரு யுகத்திற்கும் அப்பால்

மெல்ல விடிந்தது.

 -கோவிந்த் பகவான்.

Series Navigationதிருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *