பூதக்கோள் வியாழன், வெள்ளிக் கோள்கள் இடையே ஈர்ப்பு விசை மாறுதலால், பூமியின் சுற்றுப் பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேரலாம்

This entry is part 5 of 6 in the series 3 செப்டம்பர் 2023

சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா

+++++++++++++

சூரியத் தீக்கோளம்  சுற்றிக் கட்டிய
சிலந்தி வலைப் பின்னலில்
சிக்கிச் செக்கு போல் சுற்றுபவை
ஒன்பது கோள்கள் !
வியாழக்கோள், வெள்ளிக்கோள்
இடையெழும்
ஈர்ப்பு விசை மாற்றத்தால் புவிக்கோள்
சுற்றுப் பாதை நீட்சி ஆகும் !
பருவக் காலம் மாறி
உயிரின விருத்தி வேறாகும் !
எல்லைக் கோடு தாண்டி,
இப்புறமோ அப்புறமோ நகன்று,
தப்பிக்க முடியாது !
திசைமாற இயலாது !
வேகம் சிறிதும் மாற முடியாது !
சாகாது, எல்லை மீறாது !
மோதாது ஒன்றோ டொன்று !
சூரிய எரிவாயு தீர்ந்து போய்
சூனிய மானால்
சிலந்தி வலைப் பின்னல்
அறுந்து விடும் !
கோள்கள் முறிந்து
தூள் தூளாய்ச் சிதறும் !
முடிவுப்  பிரளயம் அதுதான் !
மனிதப்  பேரழிவு அதுதான் 

++++++++

மாறி மாறி வரும் பூமியின் சூழ்வெளிக் காலநிலைப் பருவ மாற்றங்கள்

தொடர்ந்து ஓர் சீர்மைக் கால இடைவெளியில், நமது புவியின் காலநிலைப் பருவங்களில் பெருத்த மாற்றங்கள் நேர்ந்து வருவதைப் பூகோளத் தளவியல் விஞ்ஞானிகள் நன்கு அறிவர்.  கடந்த 200 மில்லியன் ஆண்டுகளில் நான்கு பெருத்த பூதளவியல் காலநிலை யுகங்கள் நிகழ்ந்துள்ளன.  அவை திரியாஸிக், ஜுராஸிக், கிரிடேசியஸ், செனோஸாயிக் யுகங்கள்  [Triassic, Jurassic, Cretaceous, cenozoic Periods].  அத்துடன் ஒருபெரும் பனியுகம் [Pliocene – Quaternary Glaciation ] 10,000 – 15,000 ஆண்டுகட்கு முன் சென்றுள்ளது.  இந்த ஐந்து யுகங்களில் புவிதளம் தீவிரமாய்ப் பாதிக்கப்பட்டு, விலங்குகளின் வாழ்வு, உயிரின விருத்திகளின் போக்கு மாறிவிட்டன !

கடந்த சில பத்தாண்டுகளாய் புவித்தளவியல் விஞ்ஞானிகள் இந்த மாற்றங்கள், வியாழக்கோள் – வெள்ளிக்கோள் ஈர்ப்பால் சிறுகச் சிறுக நகர்ந்த புவிச் சுற்றுப் பாதை நீட்சியால் என்றும் புரிந்து கொண்டுள்ளார்.   அந்த வட்டத்தை ஒட்டிய சுற்றுப் பாதை 5% நீட்சியாகி, 405,000 ஆண்டுகட்கு ஒருமுறை மீட்சியாகிறது.  ஆனால் இதுவரைப் புவித்தள விஞ்ஞானிகள் யாரும் ஆதாரம் காட்ட முடியவில்ல.  இப்போதுதான்  விஞ்ஞானிகள் அவற்றுக்கு  பாறைகள் & படிவுமண் மாதிரிகள் [Rocks & Sediments] காட்ட முடிந்தது.  தோண்டி எடுத்த மாதிரிகள் புவித்தளவியல் பதிவாக, எப்போது, எப்படி, இந்த மாற்றங்கள் தோன்றின என்று காலத் தோடு காரணம் கூறுகின்றன.

இந்தப் புதிய அறிவிப்பு சமீபத்தில் “405,000 ஆண்டு வியாழன் – வெள்ளி மையத்திரிபு நிலைப்பு மீட்சி” [Empirical Evidence for Stability of the 405,000 year Jupiter – Venus Eccentricity Cycle]  என்ற தலைப்பில் அமெரிக்க தேசீய விஞ்ஞானக் கழகத்தின் வெளியீடாக  [Proceedings of the National Academy of Sciences of the USA] வந்துள்ளது.  இந்த ஆய்விதழ்க் குழுவினரின் தலைவர் : டெனிஸ் பென்ட்,  [Professor, Rutgers University–New Brunswick is the flagship home of Rutgers, The State University of New Jersey.] [ Members from Lamont – Doherty Eath Observatory, Berkeley Geochronology Center, and Petrified Forest National Park in Arizona] 

ஒரு நூற்றாண்டுக்குள் விஞ்ஞானிகள் அறிந்து கொண்டது :  புவிக்கோள் பருவக் காலநிலை மாறுவதற்கு, புவிச் சுற்றுப் பாதை நீட்சி, சுருக்கம், மற்றும் மீட்சியே என்பது.  புவிச் சுற்றுப் பாதை மாற்றம் உண்டாக்குபவை எவை ?

  1. மிலாங்கோவிச் சுழற்சிகள்  [Milankovitch cycles] –  இது 100,000 ஆண்டுக்கு ஒருமுறை புவிச்சுற்றுப் பாதையில் மையத்திரிபு [Eccentricity in Earth’s Orbit]  உண்டாக்கி மீளும்.
  2. பூகோள அச்சின் சுழல் திரிபு மீட்சி.  [Tilt of Earth’s Axis].  இது 41,000 ஆண்டுக்கோர் முறை, சுற்றுப் பாதை மட்டத்துக்கு ஏற்ப  மீளும், சுழல் அச்சுக் கோணத் திரிபு.
  3. 21,000 ஆண்டுக்கோர் முறை மீளும் புவிக்கோளின் சுழல் அச்சு சாய்வு.
  4. இவற்றுடன் 405,000 ஆண்டுக்கோர் முறை வியாழக்கோள் – வெள்ளிக்கோள் இழுப்பால், சுற்றுப்பாதை நீட்சியாகி, சூரியக் கதிர்களின் பொழிவு பூமியில் கூடிக் குறைந்து, காலப் பருவ நிலையில் மாற்றங்கள் தோன்றுகின்றன.

இவற்றை அறியப் படத்தைப் பார்க்கவும்.

இவற்றின் விளைவுகளை ஆழ்ந்து ஆராய பேராசிரியர் டெனிஸ் கென்ட்,  நியூ ஜெர்ஸி மாநில அகற்சிக்கு நீண்ட பூர்வீக ஏரியின் பீடத்தில் [Newark Basin]  உள்ள படிவுமண் மாதிரி சோதிக்க 518 மீடர், [1700 அடி] ஆழத்தில் 6.35 செமீ [2.5 அங்குலம்] விட்டக் குழி தோண்டி  எடுத்தார்.  [மேலே படத்தைப் பார்க்கவும்].   அதேபோல் அரிசோனா தேசீயப் பூங்காவிலும் மாதிரி படிவுமண் எடுத்தார்.  அவற்றின் கால யுகம் “டிரையாசிக்கைச்  [Triassic Period] சேர்ந்தது.  அதாவது  200 – 250 மில்லியன் ஆண்டுக்கு முற்பட்டவை.  மாதிரிப் படிவமண் மூலம் அறிந்தவை என்ன ?  405,000 ஆண்டு புவிச் சுற்றுப் பாதை நீட்சி – சுருக்க மீட்சிகள் பல நூற்றாண்டுகள் நிலைத்துக் காலநிலை தொடர்ந்து மாறி வந்துள்ளது.  அதனால் உயிரின வளர்ச்சி, விருத்தியிலும் மாற்றங்கள் உண்டாகி யுள்ளன.

Cover Image

ஜொஹானஸ் கெப்ளர்

(1571-1630)

ஜொஹானஸ் கெப்ளர் பேரார்வமுடன் இயற்கை நிகழ்ச்சிகளின் நுட்பமான இயற்கைத் தன்மையை  ஆழ்ந்து தேடி ஆராய்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.   தன் அகத்திலும், புறத்திலும் இடர்ப்படுகளால் இன்னல் உற்றாலும், உன்னத குறிக்கோளில் வெற்றி பெற்றவர்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் [ஜொஹானஸ் கெப்ளர் நூல் வெளியீட்டு முகவுரை 1949] 

“எனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.”

ஜொஹானஸ் கெப்ளர்

விண்கோள்களின் நகர்ச்சியை விளக்கிய கிரேக்க விஞ்ஞானிகள் 

2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க கணித மேதை பித்தகோரஸ் [Pythagoras], பூமியை ஒரு கோளமாகக் கருதி, அது மற்ற அண்டங்களுடன் அக்கினி மையமானச் சூரியனைச் சுற்றி வருகிறது என்று அப்போதே கூறியிருக்கிறார்! அண்ட கோளங்கள் யாவும் சீரிய ஓர் கணித ஒழுங்கைக் கடைப்பிடித்து, நீண்ட இடைவெளியில் சீரிய கால வேறுபாட்டில் சுற்றி வருகின்றன என்றும் அறிவித்துள்ளார்! ஆனால் அவருக்குப் பின் வந்த கிரேக்க ஞானிகளில் சிலர் மாறுபட்ட கருத்தை உபதேசித்து வந்தார்கள்! கிரேக்க வேதாந்தி அரிஸ்டாடில் [Aristotle (384-322 B.C.)] பூமி உருண்டை வடிவானது என்பதற்கு இரண்டு உதாரணங்களைக் காட்டினார்! கடலில் மிதந்து வரும் கப்பலின் பாய்மரக் கம்ப நுனிதான் முதன் முதலாகத் தொடுவானில் தெரிகிறது! கப்பல் கரையை நோக்கி நெருங்க, நெருங்க கம்பத்தின் முழு உயரத்தையும் காண முடிகிறது! அடுத்து சூரிய கிரகணத்தின் போது, சந்திரனில் படும் பூமியின் நிழல் வளைந்து காணப் படுகிறது! கோள வடிவில் பூமி இருந்தால்தான் நிலவில் அம்மாதிரி வளைவு நிழலை உண்டாக முடியும்!

பூமியை மையமாகக் கொண்டு சூரியனும் மற்ற கோள்களும் சுற்றி வருகின்றன என்ற கொள்கையை ஊகித்தவர்களில் அவரும் ஒருவர்! அந்த அரிஸ்டாடில்தான், கிரேக்க மேதை பிளாட்டோவின் சீடர், மகா அலெக்ஸாண்டரின் மாண்பு மிக்க குரு! கிரேக்க வானியல் மேதை, அரிஸ்டார்ச்சஸ் [Aristarchus (310-230 B.C.)] பூமி தானே தன்னச்சில் சுழல்வதையும், பூமி சூரியனைச் சுற்றி வருவதையும் எடுத்துக் கூறியவர்! பரிதியை மையமாகக் கொண்டு [Sun-centered or Heliocentric] சுற்றிவரும் அண்ட கோளங்கள் அமைந்த ஓர் பிரபஞ்சத்தை அவர்தான் முதன் முதல் அறிவித்தவர்! அவரது கோட்பாடு சூரிய சந்திர கோளங்களின் வடிவளவையும், பூமியிலிருந்து அவற்றின் தூரத்தையும் கணக்கிட உதவியது! பரிதி நிலவை விட மிகப் பெரிதென்றும், அது சந்திர தூரத்தை விட வெகு தொலைவில் உள்ளதென்றும் கூறினார். ஒரு கோள உருண்டையைத் தயாரித்து, அதனுள்ளே சூரியனை மையத்தில் வைத்து, விண்மீன்களை அப்பால் விளிம்பில் இட்டு, பிரபஞ்ச அமைப்பைக் காட்டினார்.

Planetary Motions

கிரேக்க நிபுணர் எராடோஸ்தெனிஸ் [Eratosthenes (276-194 B.C.)] பூமியின் சுற்றளவை 4% துல்லியத்தில் கணித்து, வானியலில் ஒரு மைல் கல்லை நிலை நாட்டினார். எகிப்தில் அலெக்ஸாண்டிரியா, ஸைன் [அஸ்வான்] என்னும் இரு நகரில் உள்ள நிழல்களை உச்சிப் பொழுதில் ஒப்பிட்டு, அவ்விரு நகரங்களின் இடைத் தூரத்தைக் கணித்தார்! அதே முறையைக் கையாண்டு பூமியின் சுற்றளவை 24,000 மைல் என்று முதன் முதலில் கணக்கிட்டார்! மேலும் பூமி தானே சுற்றும் சுழல் அச்சின் சாய்வையும் [Tilt of Earth Axis] துல்லியமாக அவர் கணக்கிட்டார். கிரேக்க மேதை ஹிப்பார்ச்சஸ் [Hipparchus (190-120 B.C.)] விண்மீன்களின் அட்டவணையைத் தயாரித்து, முதல் வான வெளிப் படத்தை வரைந்தார். நிலையான விண்மீன்களின் கூட்டமைப்புகளைக் கண்டு [Constellations of Stars] பதிவு செய்தார். அவர் துல்லியமாகக் கணித்தவை: பூமி பரிதியைச் சுற்றி வரும் ஓராண்டு காலத்தின் நாட்கள், இரவு பகல் சமமாக வரும் நாட்கள் [Equinoxes], நிலவின் தூரம் ஆகியவை! அடுத்து விண்கோள் அளப்புக் கோளம் [Astrolabe] ஒன்றையும் அமைத்தார். கி.பி. 87-150 ஆண்டுகளில் வாழ்ந்த டாலமி [Ptolemy] கிரேக்க வானியல் ஞானிகளின் இளவரசர் [Prince of Astronomers] என்று போற்றப்படும் மேதை!

Chart -1

அரிஸ்டாடில் ஊகித்த தவறான பூமைய [Geo-centric or Earth centered] அமைப்பான பிரபஞ்சத்தை டாலமி கடைப்பிடித்தார்! ஆயினும் அக்கொள்கை ஐரோப்பிய நாடுகளில் அடுத்து 1500 ஆண்டுகளாய் நம்பப் பட்டு வந்தது! அரிஸ்டாடிலின் பூமையப் பிரபஞ்ச வடிவுக்கு, டாலமி ஓர் கணித அமைப்பையும் [Mathematical Model] உண்டாக்கினார்! அண்டக் கோள் சில சமயம் விரைவாக நகர்வதையும், சில சமயம் மெதுவாகச் செல்வதையும், சில சமயம் நிற்பதுபோல் தோன்றி பின்னோக்கிப் போவதையும் [Retrograde Motion] முதலில் கண்டார்! கோள்களைச் சிறு வட்ட விளிம்பில் வைத்து, அந்த வட்டத்தை மற்றுமொரு பெரிய வட்டத்தில் சுற்றி வரும்படி [Epicycles] அமைத்துக் காட்டினார்! அதுவே அவர் கருதிய பிரபஞ்ச அமைப்பு!

Fig 2 Geo-Centric System

புவி மையச் சுற்று ஏற்பாடு

பூர்வீக இந்தியாவில் வானியல் விஞ்ஞான வளர்ச்சி

கி.மு. 2000 ஆண்டுகளில் பூர்வீக இந்தியாவில் வானியல் விஞ்ஞானத் துறை உன்னத மேன்மையில் இருந்திருப்பதைப் பலரும் அறிய மாட்டார்கள்.  வானியல் பற்றிய குறிப்புகள் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தை அப்போதிருந்த ரிக் வேதத்தில் காணலாம்.  அடுத்த 2500 ஆண்டுகள் (அதாவது கி.பி. 500 வரை) பூர்வீக வானியல் துறையின் விருத்தி அப்போதிருந்த படைப்புக்களில் அறியப் படுகிறது.  ஒருசில உதாரணங்களாக வானியல் கணிதக் குறிப்பீடுகள் கடன் வாங்கப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் வானியல் கணிப்பு மூலம் ஜோதிடக் கட்டம் வரையப் பயன்பட்டுள்ளதை இப்போதும் இந்திய மொழிகளின் பஞ்சாங்கங்களில் காணலாம். முக்கியமாக இந்திய வானியல் விஞ்ஞான வளர்ச்சி.

1.  சூரிய சந்திர கிரகணங்களைக் கணித்திடப் பயன்பட்டது.

2.  பூமியின் சுற்றளவைக் கண்டுபிடிக்க உபயோகமானது

3.  ஈர்ப்பு விசையின் நியதியை சிந்தித்தது.

4.  பரிதி ஒரு விண்மீன் என்றும் பரிதி மண்டலத்தின் அண்டக் கோள்களையும் அவற்றின் சுற்றுக்களையும் கணித்தது.

Fig 3 Geocentric System

கி.பி. 500 இல் ஆரியபாட்டா என்னும் வானியல் மேதை ஒரு கணித முறையை வெளியிட்டார்.  அதில் பூமியின் சுயச் சுழற்சியை எடுத்தாண்டு பரிதியை மையமாய் வைத்து ஒப்பு நோக்கி மற்ற கோள்களின் சுற்று எண்ணிக்கையைக் குறிப்பிட்டார்.   ஆரியபாட்டா பூமியின் 1,582,237,500 வேகச் சுற்றுக்கள் நிலவின் 57,753,336 மெதுச் சுற்றுக்களுக்குச் சமம் என்று காட்டினார்.  பிறகு அவற்றை வகுத்துப் பின்னமாக்கி ஓர் வானியியல் நிலை இலக்காக 27.396 (1,582,237,500 /57,753,336 =27.396) துல்லியமாகக் கணித்தார்.அமெரிக்க எழுத்தாள மேதை டிக் டெரிஸியின் (Dick Teresi) கூற்றுப்படி “இந்தியாவின் பண்டைய வேதப் படைப்புகளில் பூமியே நகர்கிறது என்றும் பரிதி மையத்தில் உள்ள தென்றும் தெரிய வருகிறது.  அதாவது சூரியனே பட்டப் பகலில் எப்போதும் ஒரே இடத்தில் ஒரே பொழுதில் நிலைத்துள்ளது.  பரிதி உதிப்பது மில்லை !  அத்தமிப்பது மில்லை ! யஞ்சனவால்கியா (Yajnavalkya) என்பவர் பரிதி பூமியை விட மிகப் பெரிதென்று கூறினார்.  அவரே முதன்முதலில் பூமியிலிருந்து நிலவு பரிதி ஆகியவற்றின் ஒப்புமைத் தூரங்களை அவற்றின் விட்டத்தைப் போல் 108 மடங்கு என்று கணக்கிட்டவர்.   இப்போது அந்த இலக்கத்தை விஞ்ஞானிகள் 107.6 பரிதிக்கும் 110.6 நிலவுக்கும் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளார்.

பரிதி மையமானதா ? அல்லது பூமி மையமானதா ?

கி.பி. 476-550 இல் வாழ்ந்த இந்திய கணித வானியல் மேதை ஆரியபட்டா, பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது என்றும், அது சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் ஐந்தாம் நூற்றாண்டிலே தான் எழுதிய ‘ஆரியபட்டியா ‘ என்னும் சமஸ்கிருத நூலில் கூறி யிருக்கிறார். சூரிய கிரகணத்திற்கும், சந்திர கிரகணத்திற்கும் ஆரியபட்டா தெளிவாக விளக்கம் தந்திருக்கிறார்! அண்டக் கோள்கள் சூரியனை நீள்வட்ட வீதியில் [Elliptical Orbits] சுற்றி வருகின்றன என்றும் அப்போதே அறிவித்திருக்கிறார்! விண்வெளியில் கோள்களின் இடத்தையும், அவற்றின் நகர்ச்சியையும் கணித்துப் பஞ்சாங்க அட்டவணை தயாரித்துப் பாரதத்தில் ஜோதிடம் வளர்ச்சி அடைய காரண கர்த்தாவாக இருந்திருக்கிறார்! ஆரியபட்டாவை அரேபியர் நன்கு அறிந்து கொண்டு, அவரை ‘அர்ஜெஹீர் ‘ [Arjehir] என்று தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்! கி.பி. 1473-1543 ஆண்டுகளில் வாழ்ந்த போலந்து மேதை நிகோலஸ் காபர்னிகஸ் [Nicolaus Copernicus] பல்லாண்டுகள் வானோக்கி ஆய்வு செய்து, ‘பரிதி மைய அமைப்பின் ‘ [Sun-centered or Helio-centric System] சீரொழுங்கை நிலைநாட்டியவர். அம்முறைப்படி சூரியனைப் புதன் 88 நாட்களில், வெள்ளி 225 நாட்களில், பூமி 365 நாட்களில், செவ்வாய் 1.9 ஆண்டுகளில், வியாழன் 12 ஆண்டுகளில், சனி 30 ஆண்டுகளில் சுற்றி வருகின்றன என்று விளக்க மாகக் கூறினார்!

அரிஸ்டாடில், டாலமி போன்ற கிரேக்க ஞானிகள் பூமைய ஏற்பாடை [Geo-centric or Earth centered] உறுதிப் படுத்தி இருந்ததால், ஐரோப்பிய நாடுகளின் கிறித்துவ மதாதிபதிகள் பல நூற்றாண்டுகளாய் அக்கோட்பாடை எடுத்துக் கொண்டு, மக்களையும் நம்பும்படிக் கட்டாயப் படுத்தினர்! பூமைய அமைப்பை நம்பாதவரைச் சிறையில் இட்டும், சித்திரவதை செய்தும், சிரச் சேதம் செய்தும் துன்புறுத்தியதை உலக வரலாற்றில் காணலாம்! காபர்னிகஸ் கிறித்துவ மதாதி பதிகளிடம் நட்பும், மதிப்பும் நீண்ட காலம் கொண்டிருந்ததால், ‘பரிதி மையக் கோட்பாடை ‘விளக்கும் அவரது, ‘அண்டக் கோள்களின் சுற்றலைப் பற்றி ‘ [Concerning the Revolutions of the Heavenly Orbs (Six Volumes)] என்னும் நூலை மதப்பலியீடுக்குப் பயந்து மறைத்து வைத்துத், தான் சாகும் வரை அதை வெளியிட அனுமதி தரவில்லை!

Fig 4 Heliocentric System

டென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹே [Tycho Brahe (1546-1601)] தொலை நோக்கிகள் தோன்றாத காலத்திலே, மற்ற முற்போக்கான கருவிகளைக் கொண்டு சூரியன், சந்திரன், விண்மீன்கள், மற்ற கோளங்களையும் கண்டார்! பரிதி மட்டும் பூமியைச் சுற்றுகிறது என்றும், பிற அண்டங்கள் யாவும் பரிதியைச் சுற்றி வருகின்றன என்றும் பிராஹே நம்பினார்! 1572 இல் வந்த நோவாவின் [Nova] நகர்ச்சியைத் துல்லியமாகக் கூறினார். 1577 இல் தெரிந்த வால்மீன் [Comet] போக்கைக் கண்டு அது பூமண்டலத்தைச் சேராதது என்றும், விண்வெளியில் அப்பால் போகிற தென்றும் அறிவித்தார்! டென்மார்க் தீவில் அவர் கட்டிய யுரானிபோர்க் வானோக்ககம் [Uraniborg Observatory] பின்னால் பல வானோக்காள வல்லுநருக்குப் பயன்பட்டது. 1600 ஆம் ஆண்டில் ஜெர்மன் வானியல் மேதை ஜொஹான் கெப்ளர் [Johan Kepler] என்பவர் டைசோ பிராஹேயிடம் பணி புரியச் சேர்ந்தார்.

கெப்ளர் வானியலில் செய்த ஒப்பற்ற சாதனைகள்

Fig 6 Geo-centric & Helio-centric Systems

அண்டக் கோள்களின் நகர்ச்சி விதிகளை [Laws of Planetary Motion] முதன் முதல் ஆக்கிய வானியல் மேதை ஜொஹான் கெப்ளர்! பூர்வீக ‘வரைவடிவ ‘ விளக்கத்திலிருந்து [Geometrical Description] மாற்றிப் பெளதிக விசையைப் [Physical Force] புகுத்தி அதை நவீன விண்ணியக்கவியல் [Dynamical Astronomy] கோட்பாடாக்கி, வானியலை ஓர் விஞ்ஞானத் துறையாய் ஆக்கிய பெருமை கெப்ளர் ஒருவரையே சாரும்! நவீன ஒளியியல் [Modern Optics] துறைக்கு வித்திட்டு அதை விஞ்ஞானமாய்த் துவக்கியரும் கெப்ளரே! தொலை நோக்கியில் ஒளி எவ்வாறு உலவுகிறது என்பதை முதலில் ஆய்வு செய்து, ஒருவிதமான முதல் தொலை நோக்கியையும் அமைத்தவர், கெப்ளரே! அவரைப் பின்பற்றி, இத்தாலிய வானியல் மேதை காலிலியோ தன் முதல் தொலை நோக்கியைப் படைத்தார்! கெப்ளரின் ஒளியியல் நூலே, ஸர் ஐஸக் நியூட்டனின் (1642-1726) அடிப்படைக் கருத்தாகி, ஒளித்துறைக் கண்டு பிடிப்புகளுக்கு வழி காட்டியது! கெப்ளர் கணிதத் துறையில் மிகச்சிறு எண் கணக்கியலை [Infinitesimals in Mathematics] ஆரம்பித்துக் கால்குலஸ் [Calculus] துறையைத் துவக்கியவர். அதுவே நியூட்டன் கால்குலஸ் கணித விருத்தி செய்ய ஏதுவானது! ஜெர்மன் கணித ஞானி வில்ஹெம் லெப்னிஸ் [Wilhem Leibniz (1646-1716)] தனியாக கால்குலஸ் கணிதத்தை வளர்ச்சி செய்தார்!1600 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி வில்லியம் கில்பர்ட் [William Gilbert (1544-1603)] பூமி ஒரு பிரமாண்டமான காந்தம் [Giant Magnet] என்று கண்டு பிடித்ததை எடுத்துக் கொண்டு, சூரியனிலிருந்து எழும் காந்த விசையே மற்ற அண்ட கோளங்களைத் தள்ளித் தன்னைச் சுற்றி வரச் செய்கிறது என்று கெப்ளர் அறிவித்தார்! அதே போன்று அண்ட கோளங்களில் காந்த விசை உள்ளதென்றும், அவ்விசையே அவற்றை ஒருங்கே இணைத்துக் கொண்டு சீரிய ஓர் ஒழுங்கு முறையில் பரிதியைச் சுற்றி வருகின்றன என்றும் கூறினார். சூரியனை நடுவாய்க் கொண்டு விண்கோள்கள் சுற்றி வருகின்றன என்னும், காபர்னிகஸின் ‘பரிதி மையக் கோட்பாடே ‘ மெய்யான தென்ற உறுதியில் மேற்படுத்திப் ‘பிரபஞ்சம் ஓர் ஆட்ட அரங்கம் ‘ [Dynamic Universe] என்று விளக்கிக் காட்டினார். கெப்ளரது ஒப்பற்ற நகர்ச்சி விதிகளையும், அவர் கருதிய அண்டக்கோள் களின் காந்த விசைகளையும் அடிப்படையாக எடுத்துக் கொண்டு, பிரபஞ்ச யந்திர இயக்கவியலை மேலும் விருத்தி செய்தவர், ஸர் ஐஸக் நியூட்டன்!

chart -2

ஜொஹான் கெப்ளரின் ஏழ்மை வாழ்க்கை வரலாறு

1571 டிசம்பர் 27 ஆம் தேதி ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] ஜெர்மனியில் வைல் டெர் ஸ்டாட், ஊட்டம்பெர்க் [Weil der Stadt, Wuttemberg] என்னும் ஊரில் நலிந்த, வேண்டப் படாத, முன்முதிர்ச்சிக் குழந்தையாய் [Premature Baby] ஏழைப் பெற்றோர்களுக்குப் பிறந்தார். பணத்துக்கு வேலை புரியும் ஒரு பட்டாளத் தந்தைக்கும், விடுதியாளர் [Innkeeper] மகளான ஒரு தாயிக்கும் நோஞ்சான் பிள்ளையாய்த் தோன்றினார்! எலும்பும் தோலுமாய் மெலிந்த சிறுத்த தோற்றம்! ஜொஹான் கெப்ளர் ஐந்து வயதான போது, போருக்குப் போன அவனது தந்தை திரும்பி வரவே யில்லை! தாத்தாவின் விடுதியில் தாயுடன், ஜொஹான் ஓர் பணிப் பையனாக வேலை செய்து வந்தான்! சிறுவனாக உள்ள போதே, ஜொஹானின் உன்னத ஞானம் வெளிப் பட்டது! விடுதியில் தினமும் உண்ண வந்த வாடிக்கையாளர்கள், சிறுவன் ஜொஹான் கணக்கு வல்லமையைக் கண்டு பிரமித்துப் போனார்கள்! உள்ளூர் பள்ளிப் படிப்பில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று, உள்ளூர்ச் செல்வந்தர் அளித்த உபகார நிதியில், 1587 இல் டுபிங்கன் பல்கலைக் கழகத்தில் [University of Tubingen] சேர்ந்தார்.

Fig 7 Geocentric & Heliocentric Systems

பல்கலைக் கழகத்தில் கெப்ளர் படித்தவை, கணித விஞ்ஞானம் [Mathematical Science]. அவற்றில் கணக்கு, வரை வடிவியல் [Geometry], வானியல் [Astronomy], பிறகு இசை ஆகியவற்றை ஒருவர் கற்க வேண்டும்! அத்துடன் அவர் கிரேக்க, ஹீப்ரூ மொழி களையும் படித்தார். மேலும் கணிதம், வானியல் ஆகியவற்றைப் பயின்ற முக்கிய மொழி லாட்டின். அவருக்குக் கணிதமும், வானியலும் கற்பித்த ஆசிரியர், மைக்கேல் மேஸ்ட்லின் [Michael Maestlin]. கெப்ளர் முதல் வருடம் கணக்கைத் தவிர மற்ற பாடங்களில் ‘A ‘ மதிப்பு வாங்கினார்! அப்போது மேஸ்ட்லின் புகட்டிய முற்போக்கு வானியலான ‘காபர்னிகஸின் பரிதி மையப் பிரபஞ்ச அமைப்பைப் ‘ புதிதாகக் கற்ற மாணவர்களில், கெப்ளரும் ஒருவர். ‘சூரியனை நடுவாகக் கொண்டு, அண்ட கோளங்கள் அதைச் சுற்றி வருகின்றன ‘ என்னும் காபர்னிகஸ் கோட்பாடை, முதலில் மேஸ்ட்லின் வாயிலாய் கெப்ளர் கற்றுக் கொண்ட உடனே, அக்கோட்பாடு மெய்யான தென்று அவருக்குப் பளிச்செனத் தெரிந்தது!

Kepler First Two Laws
Fig 8 Kepler's Three Laws

1588 ஆம் ஆண்டில் கெப்ளர் B.A. பட்டத்தையும், 1591 இல் M.A. பட்டத்தையும் பெற்று, லூதெரன் கோயில் பாதிரியாராக [Lutheran Church Minister] விரும்பி, மதக்கல்வி [Theology] பயிலச் சேர்ந்தார். கெப்ளர் இறுதி ஆண்டில் படிக்கும் போது, ஆஸ்டிரியா லூதரன் உயர்நிலைப் பள்ளியில், கணிதப் பேராசிரியர் பதவி காலியாகவே மதக்கல்வியை முடிக்காமல் விட்டு விட்டு, 1594 இல் அப்பதவியை மேற்கொண்டார். பிறகு 1612 இல் ஆஸ்டிரியா லின்ஸில் [Linz, Austria] கணித ஆசிரியர் பணியையும் செய்தார். ஜொஹானின் முதல் மனைவி பார்பரா [Barbara] இறந்ததும், 1613 இல் இரண்டாவது மனைவி சுசானாவை [Susanna] மணந்து கொண்டார். திருமண விழாவிற்கு வந்திறங்கிய ஒயின் கொப்பரைகளில் [Wine Barrels] இருந்த ஒயின் கொள்ளளவைக் [Volume of Wine] கணக்கிட, கோல் ஒன்று நெடு நீளத்தில் [Diagonally] துளை வழியாக விட்டு அளக்கப் பட்டது! இப்படிக் கொள்ளளவை அளக்க முடியுமா ? என்று கெப்ளர் ஐயுற்றார்! அவர் கணித மூளை வேலை செய்ய ஆரம்பித்தது! அதன் அரிய விளைவுதான் ‘திடவ உருளைகளின் கொள்ளளவுக் ‘ [Volumes of Solids of Revolution] கண்டு பிடிப்பு! அம்முறையே பின்னால் போனவென்ச்சரா காவலேரி [Bonavetura Cavalieri (1598-1647)], ஐஸக் நியூட்டன் [1642-1726] ஆகியோரால் விருத்தி செய்யப் பட்டு, கால்குலஸ் [Calculus] கணித மானது!

பிரபஞ்ச ஆட்ட அரங்கத்தின் சீரொழுங்கு!

ஜொஹான் கெப்ளர் வாழ்க்கை முழுவதும் மதவாதியாக, கிறிஸ்துவ மதத்தில் ஆழ்ந்த பற்றுடன் வாழ்ந்தார். அவரது படைப்புகள் யாவற்றிலும் கடவுளைப் பற்றி எழுதாத தலைப்பே யில்லை! கடவுளின் படைப்பைப் பற்றிப் புரிந்து கொண்டு எழுதிய தனது நூல்கள், ‘ஒரு கிறித்துவன் தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியைக் கொடுத்தன ‘, என்று கூறினார். கடவுளின் பிம்பத்தில் படைக்கப் பட்ட மனிதன், கடவுள் உண்டாக்கிய பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள முடியும், என்று கெப்ளர் நம்பினார்!   ‘பிரபஞ்சத்தை மேலும் கடவுள் ஒரு கணித அமைப்பாட்டில் [Mathematical Model] ஆக்கி யுள்ளார் ‘, என்பது அவரது உறுதியான கருத்து! அதே கருத்தைக் கிரேக்க மேதைகள் பித்தகோரஸ், பிளாட்டோ ஆகியோர் ஆக்கிய நூல்களிலும் காணலாம்! தனக்கு ஆழ்ந்த உள்ளொளி [Insights] அளித்த கடவுளுக்கு அடிக்கடி நன்றி கூறினார், ஜொஹான் கெப்ளர்!

அவர் அறிந்த அகிலத்தின் மர்மத்தை விருத்தி செய்து, 1619 இல் கெப்ளர் எழுதி வெளிட்ட நூல் ‘பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு ‘ [The Harmony of the World (Cosmos)] என்பது! இந்நூலில் கெப்ளர் மிக விபரமான விளக்கத்தில் ஓர் பிரபஞ்சக் கணித அமைப்பைக் [Mathematical Model of Cosmos] காட்டுகிறார். மேலும் பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கில் அவரது மூன்றாவது அண்டக்கோள் விதி [Kepler ‘s Third Law] விளக்கப் படுகிறது! அதாவது எந்த இரண்டு கோள்களின் சுற்றுக் கால ஈரடுக்கின் விகிதமும் [Ratio of Squares of their Periods], அவற்றின் சுழல் வீதி ஆரங்களின் மூவடுக்கு விகிதமும் [Ratio of Cubes of their Radii] ஒன்றாகும்! பதினேழு ஆண்டுகள் டென்மார்க் வானியல் மேதை டைசோ பிராஹேவுடன் ஆய்வுகள் செய்து, முதலில் கனவுபோல் தென்பட்ட மூன்றாவது விதி, பின்னால் முற்றிலும் மெய்யென்று உறுதிப் படுத்தப் பட்டது!

Planetary Laws of Motion

கெப்ளர் கணித்த முப்பெரும் அண்டக்கோள் விதிகள்

பிரபஞ்சத்தில் விண்கோள்கள் சுற்றி வரும் வீதிகள், அவற்றின் வேகம், பரிதியை அவை நெருங்கும் போது ஏற்படும் வேக வளர்ச்சி, பரிதியை விட்டு அவை அகலும் போது நிகழும் வேகத் தளர்ச்சி, அவை மேவும் விண்பரப்புக்கும் [Spatial Setup] காலத்திற்கும் உள்ள உறவு, அவற்றின் தூரத்திற்கும், சுற்றும் காலத்திற்கும் உள்ள தொடர்பு போன்ற கணிதக் கோட்பாடுகளைக் கூறுவது, கெப்ளரின் மூன்று விதிகள் [Kepler ‘s Laws]. 1609 இல் அவர் எழுதிய ‘புதிய வானியல் ‘ [New Astronomy] என்னும் நூலில் கெப்ளரின் முதலிரண்டு விதிகள் வெளியாயின! அவர் எழுதிய ‘பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு ‘ [Harmony of the World (Cosmos)] என்னும் அடுத்த நூலில் மூன்றாம் விதி 1619 இல் வெளி வந்தது! முதல் விதி:- அண்டக் கோள்கள் பரிதியை ஓர் குறிமையமாகக் [Focus] கொண்டு அதை நீள்வட்டச் சுழல்வீதியில் [Elliptical Orbits] சுற்றுகின்றன. கோள்களின் பாதை விதி இது. முன்பு வானியல் மேதைகள் தவறாக யூகித்தப்படி, கோள்கள் வட்ட வீதியில் சுற்றுபவை அல்ல! அண்டங்கள் பரிதியைச் சுற்றும் வீதிகள் நீள்வட்டம் என்று வலுயுறுத்துகிறது, முதல் விதி! இரண்டாம் விதி:- ஓர் அண்டம் பரிதியைக் குறிமைய மாகக் கொண்டு நீள்வட்டத்தில் சுற்றிவரும் போது அண்டத்தையும், பரிதியையும் சேர்க்கும் ஓர் ஆரம் சம காலத்தில் சமப் பரப்பைத் தடவுகிறது. இது கோள்களின் பரப்பு விதி! அதாவது, கோள் பரிதியை நெருங்க நெருங்க, அதன் வேகம் மிகை யாகிறது! பரிதியை விட்டு அப்பால் செல்லச் செல்ல அதன் வேகம் குறைகிறது!

Fig 10 The Present System

மூன்றாம் விதி:- பரிதியிலிருந்து ஓர் அண்டம் கொண்டுள்ள தூரத்தின் மூவடுக்கு [Cube of the Distance], அந்த அண்டம் பரிதியைச் சுற்றும் காலத்தின் ஈரடுக்கிற்கு [Square of the Period] நேர் விகிதத்தில் உள்ளது. சுருங்கக் கூறினால், அண்டத்தின் தூர மூவடுக்கு/அண்டத்தின் சுற்றுக் கால ஈரடுக்கு விகிதம் ஓர் நிலை யிலக்கம் [(Cube of the Distance)/(Square of the Period), Ratio is a constant]. கெப்ளரின் மூன்று விதிகளும் அவர் கண்ணோட்டத்தில் சிந்தித்த விதிகளே [Empirical Laws]! கணித விதிகள் ஆயினும், காரண அடிப்படைகளைக் கையாண்டு, அவை தர்க்க முறையில் படிப்படியாக உருவாக்கப் பட்டவை அல்ல! அண்டக் கோளப் பாதை, வேகம் ஆகியவற்றை விதிகள் காட்டினாலும், கோள்கள் ஏன் அவ்வாறு நகர்கின்றன என்ற காரணங்களை அவை கூறமாட்டா! அவ்விதிகளைப் பயன் படுத்தி, எதிர் காலத்தில் கோள்கள் எங்கே இருக்கும் என்று அவற்றின் இடத்தை மட்டுமே முன்னறிவிக்கலாம்! 1596 இல் கெப்ளர் எழுதிய ‘பிரபஞ்ச வரைவமைப்பின் மர்மம் ‘ [Cosmographic Mystery] என்னும் நூலில், சூரியன் பூத விசையைக் [Giant Force] கொண்டுள்ள தென்றும், அந்த விசையே மற்ற அண்ட கோளங்கள் தன்னைச் சுற்றி வர ஆளுகிற தென்றும் கூறுகிறார்! தூரம் அதிகமானால், பரிதியின் விசை எதிர் வீதத்தில் [Force inversely diminishes with distance] குறைகிறது என்றும் எடுத்துரைத்தார்! கெப்ளரின் இந்தக் கோட்பாடு அண்டங்களின் கட்டமைப்பு ஒழுங்குள்ள காபர்னிகஸின் பரிதி மையக் கொள்கையை விளக்க ஏதுவாகிறது!

********************************************

Series Navigationஇந்தியா சூரியனைச் சுற்றி ஆராயப் போகும் ஆதித்யான் -L1 விண்ணுளவியை ஏவியுள்ளதுநாவல்  தினை – அத்தியாயம்  30- பொது யுகம் 5000
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *