ஒரிகமி

This entry is part 8 of 33 in the series 12 ஜூன் 2011

காகிதத்தில்

கற்பனை மடிப்புகள் விரிந்து

புதுப்புது உருவங்கள்

பார்வையாளர் உள்ளத்தில்

மிதக்கும்.

ஒரிகமி கலைஞனின்

மெல்லிய விரலழுத்தத்தில்

குதித்தெழுகின்றன

குதிரைகளும், பறவைகளும்.

ஒரே தாளில் தோன்றுகின்ற

வியத்தகு உருவங்களை

உள்ளத்தில் கசங்காமல் பதித்துக் கொண்ட மக்களின்

கரகோஷம்

அரங்கைக் குலுக்கியது.

 

சிந்தனையைக் கொட்டி விதைத்து

அறுவடை செய்யும் தாளில்

பொம்மைகள் செய்யும் பேதமை.

கணக்கிட்டு உருவாகும்

பதுப்புது வடிவங்களின் மடிப்புகளிலும்

ஒடுங்கிப் போகிறது அறிவு என்றது

விஞ்ஞான மூளை.

 

பக்கம் பக்கமாய்

இயற்கை எழுதி வைத்த

கற்படிவ நூலைப் புரட்டும் விஞ்ஞானி.

உறங்கும் குழந்தையின்

கன்னங்களை வருடும்

விரல் நுனியாய்

பல மில்லியன் வருடத் தூசியை அகற்றி,

சிதறிக் கிடக்கும்

புதையலை இணைத்து

முழு உருவத்தைக் கண்டுவிட

மீண்டும் அதன் மேல்

தூசியாய் படியும்

அவன் ஆழ்ந்த கவனம்.

 

கண்டெடுத்த பரிணாமச் சங்கிலி வளையங்களை

விரல்களில் கோத்து

கவனமாய் பதிவு செய்த

விஞ்ஞானியின் புத்தகப் பக்கங்களை

கிழித்தெறிகிறது

ஒரு குகையில் பல மில்லியன் ஆண்டுகளா

யுறங்கிக் கொண்டிருந்த விலங்கின்

விசித்திர அலகு.

இதுவரை பிடித்து ஏறி வந்த

கருதுகோள் சங்கிலி யறுந்து

குழப்பத்தின் இருட்குகையில் விழுந்தவனின்

ஆழ்ந்த உறக்கம்.

 

கனவின் காற்றில் பறக்கும்

அவன் கருதுகோள்கள்.

தன் புத்தகத்தை எப்போதும்

எழுதிப்படைப்பதில்லை

இயற்கை.

கற்பனை நகங்களால்

பக்கங்களைக் கிழித்து

உருவங்களைப் படைக்கும்

ஒரிகமி கலைஞனது.

படுக்கையறை முழுவதும்

பறக்கும் பொம்மைகள்.

உலகைக் காப்பாற்ற வந்த

சித்தாந்தங்கள்

இயற்கையின் கற்பனைப் படைப்புகளின்  நகல்கள்.

உயிரை உருக்கி,

உலகம் தழைக்க உருவாக்கப்படும் அவைகள்

வெறும் எழுத்தாக இல்லாமல்

நடைமுறை பொம்மைகளில் ஏறி பயணிப்பவை.

விழித்தெழுந்த மேதை

தன் நாட்குறிப்பேட்டோடு,

ஒரு புதிய கற்படிவ பொம்மையை எழுப்பினான்

அதன் முதுகில் பயணிக்க…

 

Series Navigationமனவழிச் சாலைகணமேனும்
author

துவாரகை தலைவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *