பஞ்சதந்திரம் தொடர் 57

This entry is part 40 of 41 in the series 23 செப்டம்பர் 2012

பிராமணனின் மனக்கோட்டை

‘’ஓர் ஊரில் சுபாவக்ருபணன் என்ற பெயருடைய பிராம்மணன் இருந்தான். அவன் பிச்சையெடுத்து வந்த மாவில் ஒரு பகுதியைச் சாப்பிட்டு மிகுதியை ஒரு பாத்திரத்தில் நிரப்பி வந்தான். அந்தப் பாத்திரத்தை ஒரு முனையில் தொங்கவிட்டு அதன் அடியில் கட்டிலைப் போட்டுக்கொண்டு எப்பொழுதும் ஒரு கண்ணால் அதைப் பார்த்துக்கொண்டே இரவில் யோசனை செய்தான்: ‘’இந்தக் குடமோ நிறைந்திருக்கிறது. எப்பொழுதாவது மாவுக்குப் பஞ்சம் ஏற்பட்டால் இதிலிருந்து நூறு ரூபாய் கிடைக்கும். பிறகு அதன்மூலம் இரண்டு ஆடுகளை வாங்குவேன். பிறகு ஆறு அறு மாதத்திற்கு அது குட்டி போடுமாதலால் ஒரு ஆட்டுமந்தையே ஏற்படும். பிறகு ஆடுகளால் மாடுகளையும், மாடுகளின் ஈற்றினால் அதன் கன்றுகளையும் விலைக்கு விற்பேன். பிறகு மாடுகளால் எருமைகள், எருமைகளால் குதிரைகள், குதிரையின் பிரஸவத்தால் எனக்கு அநேகக் குதிரைகள் கிடைக்கும். அவைகளை விற்பதால் நிறையத் தங்கம் கிடைக்கும்.  தங்கத்தினால் நடுவில் பெரிய தாழ்வாரம் உள்ள வீட்டை வாங்குவேன். பிறகு யாராவது ஒருவன் என் வீட்டிற்கு வந்து மிகவும் அழகிய பெண்ணை வரதட்சணையுடன் எனக்குக் கொடுப்பான். அவளுக்குப் பிள்ளை பிறக்கும். அவனுக்கு நான் சோமசர்மா என்று பெயர் வைப்பேன். பிறகு அவனுக்குத் தவழும் நிலை வந்தவுடன் நான் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு குதிரை லாயத்தின் பக்கத்தில்  உட்கார்ந்து யோசனை செய்வேன். இந்த சமயத்தில் சோமசர்மா என்னைப் பார்த்து தந்தை என்ற ஆதுரத்தினால் முழங்கால்களால் தவழ்ந்துகொண்டே குதிரைகளின் அருகில் செல்வான். அப்பொழுது நான் மனைவியைக் கோபத்துடன் ‘’குழந்தையை எடுத்துச் செல், எடுத்துச் செல்’’ என்று கட்டளையிடுவேன். வீட்டுக்காரியத்தில் ஈடுபட்டிருக்கும் அவளுக்கு என் வார்த்தை கேட்காது. அப்பொழுது நான் எழுந்து கால்களினால் அவளை உதைப்பேன்.’’ இப்படி மனோராஜ்யத்திலிருந்த அவன் கால்களால் எட்டி உதைத்தான். அப்பொழுது பானை உடைந்து பானையிலிருந்த மாவால் வெள்ளை நிறத்தவனாக ஆனான்.
அதனால்தான் ‘நடக்கக்கூடாத விருப்பத்தில்’… என்று சொல்கிறேன் என்றான். சக்ரதரன்.

சுவர்ணசித்தன் சொன்னான்: ‘’இது மிகவும் உண்மை. எவ்விதமெனில்,

அதன் அனர்த்தத்தைப் பாராமல் எவன் பேராசையால் காரியம் செய்கிறானோ அவன் சந்திரன் என்ற அரசன் போல ஏமாற்றத்தை அடைகிறான்.’’

சக்ரதரன் ‘’அது எப்படி?’’ என்று கேட்க, அவன் சொன்னான்.

பழிக்குப் பழி

ஒரு நகரத்தில் சந்திரன் என்ற அரசன் இருந்தான். அவன் மகன் விளையாடுவதற்காக ஒரு குரங்குக் கூட்டம் இருந்தது. அவைகளுக்கு தினசரி அநேகவிதமான ஆகாரங்களைக் கொடுத்து புஷ்டியாக வளர்த்தனர். அதே அரசகுமாரனுக்கு விளையாடுவதற்காக ஒரு செம்மறியாட்டு மந்தையுமிருந்தது. அவைகளின் நடுவில் ஒன்று நாக்கின் பேராசையால் இரவும் பகலும் சமையலறையில் நுழைந்து எதுஎது கண்ணில் படுகிறதோ அவை யாவற்றையும் சாப்பிட்டது. சமையற்காரர்களும் கட்டை முதல் எது கையில் கிடைக்கிறதோ அதனால் அந்த ஆட்டை அடித்தனர்.

குரங்குக்கூட்டத் தலைவன் அதைப் பார்த்து எண்ணிற்று: ‘’ஐயோ, ஆட்டிற்கும் சமையற்காரனுக்கும் உள்ள இந்தக் கலகம் இந்தக் குரங்குகளின் நாசத்திற்காகவே ஏற்படுகிறது. எவ்விதமெனில், இந்த ஆடோ ருசிப் பேராசை பிடித்தது. மிகவும் கோபங்கொண்ட சமையற்காரர்கள் இருந்த இடத்திலிருந்தே எது கிடைக்கிறதோ அந்த வஸ்துவால் அடிக்கின்றனர். பிறகு ஒரு பொருளும் கிடைக்காவிட்டால்  ஒரு சமயம் கொள்ளிக்கட்டையால் அடிக்கலாம். பிறகு கம்பளி நிரம்பிய இந்த ஆடு சிறிது நெருப்பாலும் பற்றிக்கொள்ளும். அப்படி எரிந்துகொண்டே குதிரை லாயத்தின் அருகில் அது நுழையும். அந்த லாயத்தில் புற்களே அதிகமாக இருப்பதால் அதுவும் எரிந்துவிடும். பிறகு குதிரைகள் நெருப்பினால் சுடப்படும். மிருக வைத்தியத்திலோ இப்படிச் சொல்லப் படுகிறது: குதிரைகளின் நெருப்புச் சுட்ட புண்கள் குரங்குகளின் கொழுப்பால் குணப்படுத்தப்படும் இதனால் நிச்சயம் தங்களுக்கு மரணம் நெருங்கிவிட்டது’’ என்று இவ்விதம் தீர்க்காலோசனை செய்து, அது எல்லாக் குரங்குகளையும் அழைத்துச் சொல்லிற்று:

‘’ஆட்டிற்கும் சமையற்காரர்களுக்கும் எங்கு சண்டை நடக்கிறதோ,அங்கு சந்தேகமின்றி குரங்குகளுக்கு நாசம் ஏற்படும். எந்த வீட்டில் தினந்தோறும் சண்டை நடக்கிறதோ அந்த வீட்டை வாழ்வை விரும்புபவன் தூரத்திலேயே விட்டுவிட வேண்டும்.

கலகம் சந்தோஷமான வீட்டையும், கெட்ட வார்த்தை நல்ல நட்பையும், துஷ்ட அரசன் ராஜ்யத்தையும், கெட்டட காரியம் மனிதனின் கீர்த்தியையும் முடிக்கின்றன.

அதனால் நம் எல்லோருக்கும் நாசம் ஏற்படுவதற்கு முன்பு வீட்டைவிட்டு காட்டிற்குச் செல்வோம்’’ என்று.

அதனுடைய அந்த வார்த்தைகளை கேட்டு அவைகள் அகந்தையுடன் சொல்லின: ‘’ஓஹோ, கிழத்தன்மையால் உனக்குப் புத்தி குழம்பியுள்ளது. அதனால்தான் இப்படிச் சொல்கிறாய். நாங்கள் அரசகுமாரர்கள் தங்கள் கையாலேயே கொடுக்கும் அமிருதத்திற்கொப்பான விசேஷமான ஆகாரங்களை விட்டுவிட்டு அந்தக் காட்டில் கசப்பும், புளிப்பும், துவர்ப்பும், தித்திப்புமான மரத்தின் பழங்களை நாங்கள் சாப்பிடப்போவதில்லை’’ என்றன.

அதைக் கேட்டுக் கோணலான பார்வை பார்த்துவிட்டு அந்தக் கூட்டத் தலைவன் சொல்லிற்று: ‘’சீ! நீங்கள் யாவரும் முட்டாள்கள். இந்தச் சுக வாழ்க்கையின் முடிவை நீங்கள் அறியமாட்டீர்கள். ஏனெனில் இப்பொழுது இனிப்பாக இந்தச் சுகம் முடிவில் விஷமாக ஆகும். அதனால் நானே என் குலத்தின் நாசத்தைப் பார்க்கப்போவதில்லை. இப்பொழுது நான் அந்தக் காட்டிற்கே செல்கிறேன்.

இப்படிச் சொல்லப்படுகிறது:

பிறரிடம் சென்ற மனைவியையும், கஷ்டத்திலிருக்கும் நண்பனையும், வீட்டில் மரணத்தையும், தேசத்தின் நாசத்தையும் யார் பார்ப்பதில்லையோ அவனே பாக்கியசாலி.

இவ்விதம் சொல்லி எல்லோரையும் விட்டுவிட்டு அந்தக் குரங்குத் தலைவன் காட்டிற்குச் சென்றது.

அது சென்றபின் ஒரு தினம் அந்த ஆடு சமையற்கட்டில்  நுழைந்தது. சமையற்காரனுக்குக் கையில் ஒன்றும் கிடைக்காததால் பாதி எரிந்த கொள்ளிக் கட்டையை எடுத்து அதை அடித்தான். அதுவும் அதனால் அடிபட்டு, பாதி எரிகின்ற சரீரத்துடன் கத்திக்கொண்டே அருகிலே உள்ள குதிரை லாயத்தில் நுழைந்தது. அங்கு படுத்துப் புரண்டதால் புற்களினால் செய்யப்பட்ட அந்த லாயம் எங்கும் நெருப்பு ஜுவாலை எழுந்தது. லாயத்தில் கட்டியிருந்த குதிரைகளில் சிலவற்றின் கண்கள் பிதுங்கி இறந்தன. சில கட்டுகளை அறுத்துக்கொண்டே எல்லோரையும் துன்பத்தில் ஆழ்த்தின.

இந்தச் சமயத்தில் அரசன் துக்கத்துடன் சாலிஹோத்திரரின் மிருக  சாஸ்திரத்தை அறிந்த மிருக வைத்தியர்களை அழைத்துக் கேட்டான். ‘’இந்தக் குதிரைகளின் நெருப்புப் புண்ணை ஆற்றுவதற்கு ஏதாவது மருந்து சொல்லுங்கள்’’ என்று. அவர்களும் சாஸ்திரத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார்கள்: ‘’பிரபுவே, இந்த விஷயத்தில் பகவான் சாலிஹோத்திரர் சொல்கிறார்:

குதிரைகளின் சுட்ட புண்ணிற்கு குரங்குகளின் கொழுப்பைத் தடவினால் சூரியோதயத்தால் இருள் நீங்குவது போல் சுட்ட புண்கள் உடனே ஆறும். அவை இந்த வியாதியால்  நாசமாவதற்கு முன்பு இந்த வைத்தியதைச் செய்யுங்கள்’’ என்றனர்.

அரசனும் அதைக்கேட்டு குரங்குகளைக் கொல்ல உத்தரவளித்தான். அதிகம் சொல்வானேன்? அவை யாவும் கொல்லப்பட்டன. குரங்குக் கூட்டத் தலைவனோ அந்த குலநாசத்தை நேரில் தன் கண்களால் பார்க்கவில்லை. ஆனால் பராபரியாகக் கேட்டு அதைச் சகிக்கவில்லை.

எவ்விதமெனில்:

வம்சத்தின் பேரில் ஒருவன் கெடுதல் செய்து அந்த எதிரியை பயத்தினாலோ, பேராசையாலோ மன்னித்தால்  அவனைப் புருஷர்களில் கடை கெட்டவன் என்று அறிவாயாக!

பிறகு அந்தக் கிழக் குரங்கு தாகத்தால் பீடிக்கப்பட்டு எங்கேயே சுற்றும்பொழுது தாமரைகள் நிறைந்த ஒரு ஏரியை அடைந்தது. அங்கு கூர்ந்து நோக்கிய பொழுது அங்கு குளத்தினுள் செல்லும் காலடிகளைப் பார்த்ததேயல்லாமல், திரும்பும் காலடிகளைக் காணவில்லை. அப்பொழுது அது எண்ணிற்று: நிச்சயம் இந்த ஜலத்தினுள் துஷ்ட ஐந்து ஏதாவது இருக்க வேண்டும். அதனால் தாமரைத் தண்டை எடுத்து வெகு தூரத்திலிருந்தபடியே ஜலத்தை அதன் மூலம் உறிஞ்சிக் குடிக்கிறேன்’’ என்று. அவ்விதமே செய்தபொழுது அதன் நடுவிலிருந்து ரத்தினமாலையால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தை உடைய ஒரு ராக்ஷஸன் வெளிவந்து அதனிடம் சொன்னான்: ‘’ஏய், யார் இந்த ஜலத்தில்  நுழைகிறார்களோ அவனைச் சாப்பிடுபவன் நான்.  ஆனால், உன்னைவிட அதிகக் கூர்மையான புத்தியுள்ள மற்றொருவனை நான் பார்த்ததில்லை. நீ இப்படிப்பட்ட வழியாக ஜலத்தைக் குடிக்கிறாய். அதனால் நான் திருப்தி அடைந்துள்ளேன். அதனால் உனக்கு விருப்பமானதைக் கேள்’’ என்றான்.
குரங்கு கேட்டது, ‘’எவ்வளவு உன்னால் சாப்பிட முடியும்?’’ என்று. அவன் சொன்னான்: ‘’ஜலத்தில் நுழைந்தவர்கள் நூறு. ஆயிரம், பத்தாயிரம், லக்ஷமானாலும் சாப்பிடுவேன். வெளியிலோ நரி கூட என்னை ஜெயித்து விடும்’’ என்று.

குரங்கு சொல்லிற்று: ‘’எனக்கு அரசனோடு ஒரு பெரிய துவேஷ இருக்கிறது. நீ எனக்கு இந்த ரத்தினஹாரத்தைக் கொடுத்தால் நான் அந்த அரசனைப் பரிவாரங்களுடன் வாக்குச் சாதுர்யத்தால் மோகிக்கச் செய்து ஏரியில் நுழைய வைப்பேன்’’ என்று. உடனே ராக்ஷஸனும் அதனிடம் ரத்தினமாலையைக் கொடுத்தான்.

வானரமும் ரத்தினஹாரத்தால் அலங்கரிக்கப்பட்ட கழுத்துடன் மரங்களிலும் மாளிகைகளிலும் சுற்றிற்று. ஜனங்களும் அதைப் பார்த்துக் கேட்டனர். ‘’ஏ குரங்குக் கூட்டத்தின் அதிபதியே, எங்கு நீ இவ்வளவு காலம் சென்றிருந்தாய்? எங்கிருந்து உனக்கு இப்படிப்பட்ட ரத்தினஹாரம் கிடைத்தது? பிரகாசத்தால் அது சூரியனைக்கூட வெல்கிறது’’ என்று.

குரங்கு சொல்லிற்று, ‘’ஒரு காட்டில் குபேரனால் நிர்மானிக்கப்பட்டு நன்றாக மறைக்கப்பட்ட ஒரு ஏரி இருக்கிறது. அதில் ஞாயிற்றுக்கிழமையன்று காலை சூரியன் பாதி உதித்திருக்கும்பொழுது எவன் முழுகுகிறானோ அவன் கழுத்து குபேரனின் அருளால் இப்படிப்பட்ட ரத்தின ஹாரத்தால்  அலங்கரிக்கப்பட்டு வெளியே வருகிறான்’’ என்று.

பிறகு அரசனும் ஜனங்கள் மூலம் அதைக்கேட்டு அந்தக் குரங்கை அழைத்துக் கேட்டான். ‘’ஏ குரங்குக் கூட்டத் தலைவனே, இது உண்மையா?’’ என்று. குரங்கு சொல்லிற்று: ‘’அரசே, இதோ, உங்கள் எதிரிலேயே என் கழுத்திலுள்ள ரத்தினஹாரம் உங்களுக்கு ருசுவாகிறது. உமக்கும் இதனால் உபயோகம் உண்டானால் அப்பொழுது என்னுடன் யாரையாவது அனுப்பும். அவனுக்குக் காட்டுகிறேன்.’’

க் கேட்டு அரசன் சொன்னான், ‘’அவ்விதமெனில், நானே பரிவாரங்களுடன் வருகிறேன். அதனால் நிறைய ரத்தின ஹாரங்களை அடைவேன்’ என்று. குரங்கு ‘’அரசே, அதுவே தகுதியானது என்று சொல்லிற்று. பிறகு அரசன் பரிவாரத்துடன் ரத்தினஹாரப் பேராசையால் புறப்பட்டான். குரங்கையும் பல்லக்கில் உள்ள அரசன் தன் மடியில் ஏற்றிக்கொண்டு அதற்கு மரியாதை செய்துகொண்டே சென்றான்.

இவ்விதம் சரியாகத்தான் சொல்லப்படுகிறது.

பணமும் கல்வியுமிருந்துங்கூட பேராசையால் ஜனங்கள் மூடர்களாகி செய்யத் தகாததில் ஈடுபடுகின்றனர். செல்ல முடியாத இடத்திலும் செல்கின்றனர்.

நூறு உள்ளவன் ஆயிரத்தையும், ஆயிரம் உள்ளவன் லக்ஷத்தையும லக்ஷ¡திபதி ராஜ்யத்தையும், ராஜ்யத்திலிருந்து ஸ¤வர்க்கத்தையும் விரும்பு கின்றனர்.

வயது வந்தால் மயிர் உதிர்கிறது. பற்களும் வயதானால் விழுகிறது. கண்களும், காதுகளும் வயதை அடைகிறது. ஆனால் பேராசை மட்டும் முதுமையை அடைவதில்லை.

விடியற்காலையில் அந்த ஏரியை அடைந்தனர். வானரம் அரசனிடம் சொல்லிற்று. ‘’தேவ, இப்பொழுது சூரியன் பாதி உதயமாகி இருக்கும்பொழுது நீரில் முழுகுபவர்களுக்குச் சித்தி ஏற்படும் என்று பரிவாரங்கள் எல்லோருக்கும் சொல்லுங்கள். அவர்கள் ஒரே கூட்டமாக நுழையட்டும். நீங்கள் மட்டும் என்னுடன் முழுகவேண்டும். நான் முன்பு பார்த்து வைத்திருக்கும் இடத்தை அடைந்து உமக்கு நிறைய ரத்தின மாலைகளைக் காட்டுவேன்’’ என்றது. பிறகு அந்தப் பரிவாரம் முழுவதும் நீரில் மூழ்கின. ராக்ஷஸனும் அவர்களை விழுங்கினான்.

அவர்கள் நேரமாக்குவதால் அரசன் குரங்கினிடம், ‘’ஏ குரங்குக் கூட்டத் தலைவனே! இது என்ன, என் வேலையாட்கள் ஏன் நேரமாக்குகின்றனர்?’’ என்று கேட்டான்.

அதைக்கேட்டு குரங்கு வேகமாக மரத்தில் ஏறிக்கொண்டு அரசனிடம், ‘’ஏ கெட்ட அரசனே ஜலத்தில்  உள்ள ராக்ஷஸன் உன் பரிவாரத்தை விழுங்கி விட்டான். என் குலத்தை நீ நாசம் செய்த காரணத்தால் உன்மேல் ஏற்பட்ட துவேஷத்தை நான் தீர்த்துக்கொண்டேன். அதனால், செல்! நான் உன்னை எஜமானர் என்று மதித்து அதில் முழுகவிடவில்லை.

எவ்விதமெனில்,

நன்மை செய்தவனுக்குத் திரும்ப நன்மையும், ஹிம்ஸை செய்தவனுக்குத் திரும்ப ஹிம்ஸையும் செய்! எவன் துஷ்டனோ அவனுக்குக் கெடுதல் செய்வதில் ஒருவிதமான தவறையும் நான் காணவில்லை.

நீ என்னுடைய குலத்தை நாசம் செய்தாய். நான் உன்னுடையதை நாசமாக்கினேன்’’ என்றது.

அதைக்கேட்டு அரசன் துக்கத்தினால் பீடிக்கப்பட்டு வேகமாக வந்த வழியே திரும்பினான். அந்த அரசன் சென்றவுடன், ராக்ஷஸன் மிகுந்த திருப்தியுடன் ஜலத்திலிருந்து வெளிவந்து சந்தோஷத்துடன்,

குரங்கே, நல்லது, வெகு நல்லது. எதிரியைக் கொன்றாய்! நண்பனை அடைந்தாய்! தாமரைத் தண்டால்  ஜலத்தைக் குடித்ததால்  ரத்தின மாலையை அழுக்காக்கவில்லை.

என்று சொன்னான். அதனால்தான், ‘’அவன் அனர்த்தத்தைப் பாராமல்… என்று சொல்லுகிறேன்’’ என்றான். சுவர்ணசித்தன். அவன் மேலும் பேசுகையில், “என்னை அனுப்பு. நான் வீட்டிற்குச் செல்கிறேன்” என்றான். சக்ரதரன் கேட்டான் ‘’எப்படி என்னை இந்த நிலையில் விட்டுவிட்டுச் செல்வாய்?

எவன் ஆபத்திலுள்ள நண்பனை விட்டு கடின மனதுடன் செல்கிறானோ அந்த நன்றிகெட்ட பாவியானவன் நிச்சயம் நரகத்தை அடைகிறான்.

என்று சொல்லப்படுகிறது’’ என்றான்.

அப்போது சுவர்ணசித்தன், நீ சொல்வது உண்மைதான். செல்லக்கூடிய இடத்தில் அவனுக்கு ‘’நீ சொல்வது உண்மைதான். செல்லக்கூடிய இடத்தில்  அவனுக்கு விடுக்கச் சக்தியிருக்கும்பொழுது விட்டுவிட்டுச் சென்றால் சரி. இதுவோ மனிதர்களால் அடைய முடியாத இடம், உன்னை விடுவிப்பதற்கும் ஒருபொழுதும் எனக்குச் சக்தி ஏற்படாது. மற்றொன்று, அவ்வப்பொழுது அந்த சக்கரத்தின் வேதனையால் உன் முகத்தில் வேதனையைப் பார்க்கிறேனோ எவ்வப்பொழுது ‘எனக்கு ஒருபொழுதும் இப்படிப்பட்ட அனர்த்தம் ஏற்படாது. அதனால் நான் இந்த இடத்தை விட்டுச் சீக்கிரமாகச் சென்று விடுவேன்’ என்று அறிவேன்.

இவ்விதம் சொல்வதில் நல்ல நியாயமிருக்கிறது:

குரங்கே உன் முகத்தில் இப்படிப்பட்ட குறிகள் தோன்றுவதால் நிச்சயம் நீ சந்தியால் பீடிக்கப்பட்டிருக்கிறாய். எவன் ஜெயிக்கிறானோ அவனே வாழ்கிறான்.

என்றான் சக்ரதரன் ‘’அது எப்படி?’’ என்று கேட்க, அவன் சொன்னான்:

ராக்ஷஸனும் சந்தியும்

ஒரு ஊரில் பத்ரசேனன் என்று பெயருடைய அரசன் இருந்தான். அவனுக்கு எல்லா வக்ஷணங்களும் பொருந்திய ரத்தினாவதி  என்ற பெண் இருந்தாள். அவளை யாரோ ராக்ஷஸன் அபகரித்துச் செல்ல விரும்பினான்.  தினந்தோறும் இரவில் வந்து அவளை நிந்திப்பான். ஆனால் மந்திரத்தினால் வரைந்த படத்தினுள் அவள் இருந்ததால் அவளை அபகரிக்க முடியவில்லை. அவளும் சுகத்தை அனுபவிக்கும்பொழுது ராக்ஷஸன் வந்துள்ள அவஸ்தையை, நடுக்கம் ஜுரம் முதலியவற்றால் அனுபவித்தாள். இப்படியே காலம் செல்கையில் ராக்ஷஸன் வீட்டின் ஒரு மூலையில் நின்றுகொண்டு ராஜ குமாரிக்குக் தன்னைக் காண்பித்தான். அப்பொழுது அவள் தோழியிடம்  ‘’ஸகி, பார், சந்திவேளையில் ராக்ஷஸன் தினந்தோறும் இங்கு வந்து துன்புறுத்துகிறான். அந்த துராத்மாவைத் தடுப்பதற்கு ஏதாவது வழி உண்டா?’’ என்று கேட்டாள்.

அதைக்கேட்டு ராக்ஷஸன் எண்ணினான்: ‘’நிச்சயம் நான் எப்படியோ அப்படியே சந்தி என்று பெயருடைய வேறு யாரோ இவளை அபகரித்துச் செல்வதற்காக வருகிறான் போலிருக்கிறது. ஆனால் அவனுக்கும் அபகரிக்கச் சக்தியில்லை. அதனால் இப்பொழுது நான் குதிரை உருவை எடுத்துக்கொண்டு, குதிரைகளுக்கு நடுவில் மறைந்துகொண்டு அந்த சந்தி ‘எப்படிப்பட்ட உருவமுள்ளவன்? அவன் சக்தியென்ன?’ என்று அறிகிறேன்’’ என்று எண்ணினான். அவன் அவ்விதமே செய்தபொழுது இரவுவேளையில் அரசனுடைய அரண்மனையில் யாரோ குதிரைத் திருடன் ஒருவன் நுழைந்தான். அவனும் எல்லாக் குதிரைகளையும் பார்த்துவிட்டு அந்த ராக்ஷஸக் குதிரையே மிகவும் நன்றாக இருப்பதைப் பார்த்து கடிவாளத்தை அதன் வாயில் போட்டு ஏறிக்கொண்டான். இந்தச் சமயத்தில் ராக்ஷஸன்  ‘’நிச்சயம் இவன்தான் அந்த சந்தி என்பவன். என்னைப் போக்கிரி என்று மதித்து கோபத்தினால் கொல்வதற்கு வந்துள்ளான். அதனால் என்ன செய்வது?’’ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும்பொழுது அந்தக் குதிரைத் திருடன் சவுக்கால் அடித்தான். பிறகு பயத்தால் நடுங்கும் உள்ளத்துடன் ராக்ஷஸன் ஓடுவதற்கு ஆரம்பித்தான். திருடனும் வெகுதூரம் சென்று கடிவாளத்தை இழுத்து அதை நிறுத்துவதற்கு ஆரம்பித்தான். ஆனால் அது குதிரையாக இருந்தால்தானே கடிவாளத்தைக் கவனிக்கும்? அதுவோ இன்னும் அதிக வேகமாகச் சென்றது.

அப்படி கடிவாளத்தை இழுப்பதைக் கவனியாமல் அது இருப்பதைப் பார்த்துத் திருடன் எண்ணினான்: ‘’ஐயோ’ குதிரைகள் இவ்விதம் இருக்காது. அதனால் நிச்சயம் இது குதிரை உருவிலுள்ள ராக்ஷஸனாகத்தான் இருக்க வேண்டும். அதனால் புழுதி நிறைந்த பூமியை எப்பொழுது பார்க்கிறேனோ அப்பொழுது நான் விழுந்து விடுகிறேன். வேறு விதத்தில் எனக்கு வாழ்வு கிடைக்காது’’ என்று திருடன் யோசித்தான். இவ்விதம் எண்ணிக்கொண்டே திருடன் இஷ்ட தெய்வத்தைத் தியானிக்கும்பொழுது, குதிரைத் திருடனை இழுத்துச் செல்லும் ராக்ஷஸக் குதிரை ஒரு ஆலமரத்தின் கீழ் சென்றது. திருடனும் ஆலம் விழுதைப் பிடித்துக்கொண்டு அங்கேயே தங்கினான். அப்பொழுது இருவரும் தனித்தனியாக ஆனதால் இருவருக்கும் தங்கள் உயிர்மேல் நம்பிக்கை திரும்பி மிகவும் சந்தோஷமடைந்தனர்.

ஆனால் அந்த மரத்தில் ராக்ஷஸனின் நண்பனான ஒரு குரங்கு இருந்தது. அது ஓடும் ராக்ஷஸனைப் பார்த்துக் கூவியது: ‘’ஏன் இப்படி பயத்தைக் கற்பனை செய்துகொண்டு ஓடுகிறாய்? உனக்கு ஆகாரமான இவன் மனிதனன்றோ? அதனால் இவனை விழுங்கு’’ என்றது. ராக்ஷஸன் அந்த வார்த்தையைக் கேட்டு தன் சுய ரூபத்தை எடுத்துக்கொண்டு பயந்த உள்ளத்துடனும், மங்கிய புத்தியுடனும் திரும்பினான். அந்தத்  திருடனும் குரங்கு அவனைத் திருப்பி அனுப்பியுள்ளது என்று அறிந்து கோபமடைந்து உயர உட்கார்ந்திருக்கும் குரங்கின் தொங்கும் வாலை  பலம் கொண்ட மட்டும் கடிக்க ஆரம்பித்தான். அவன் ராக்ஷஸனைவிடப் பலசாலி என்று எண்ணி பயத்தால் குரங்கு வாய்திறந்து ஒன்றுகூடச் சொல்லவில்லை. ஆனால் வலியால் இறுகக் கண்களை மூடிக்கொண்டு பற்களையும் நறநறவென்று கடித்துக் கொண்டிருந்தது. ராக்ஷஸனும் அது அவ்விதம் இருப்பதைப் பார்த்து இந்தச் செய்யுளைச் சொன்னான்:

குரங்கே, உன் முகத்தில் இப்படிப்பட்ட குறிகள் தோன்றுவதால் நிச்சயம் நீ சந்தியால் பீடிக்கப்பட்டிருக்கிறாய். எவன் ஜெயிக்கிறானோ அவனே வாழ்கிறான்.

என்றான்.

சுவர்ணசித்தன் மறுபடியும் சொன்னான்: ‘’என்னை அனுப்பு, என் வீட்டை அடைகிறேன். நீ இங்கு இருந்துகொண்டு உன் வணக்கமற்ற தன்மையாகிற மரத்தின் பலத்தை அனுபவித்துக்கொண்டிரு’’ என்றான்.

சக்ரதரன், ‘’நீ சொல்வது காரணமற்றது.

வணக்கமற்றவனோ, இல்லையோ, விதிவசத்தால் மனிதர்களுக்கு நன்மையோ தீமையோ ஏற்படுகிறது.

குருடனும், கூனனும், மூன்று மார்புகள் உள்ள அரச குமாரியும்போல் யாருக்கு விதி சாதகமாயுள்ளதோ அவர்கள் வணக்கமற்றிருந்தாலும் வணக்கமுள்ளவர்களாகின்றனர்.’’

என்றான்.

சுவர்ணசித்தன் ‘’அது எப்படி?’’ என்று கேட்க, சக்ரதரன் சொன்னான்:

Series Navigationமுன்குரானிய சமயப்பிரதிகளில் ஏகம்அசிங்கம்..
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *