இரு குறுங்கதைகள்

This entry is part 5 of 19 in the series 19 ஏப்ரல் 2015

1.    கண்காணிப்பு – சிறகு இரவிச்சந்திரன்.
0
அவனுக்கு கொடுக்கப்பட்ட பணி கேட்கும்போது எளிதாகத்தான் இருந்தது. பள்ளி நாட்களில் இருந்தே மர்ம நாவல்களையும் சங்கர்லால் துப்பறியும் தமிழ்வாணன் கதைகளையும் படித்ததின் பாதிப்பு அவன் மனதில் ஆழமாக ஊறிக் கிடந்தது. பொருட்காட்சிக்குப் போனால், மற்ற பிள்ளைகளைப் போல அவன் திண்பண்டங்கள் கேட்ட்தேயில்லை. எப்போதும் கறுப்பு கண்ணாடி தான் வேண்டும். கூடவே ஒரு தொப்பி. அது அட்டையில் இருந்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகு அவன் சின்னதாக ஒரு மூங்கில் கம்பை வைத்துக் கொண்டு கூடத் திரிந்தான்.
யார் வீட்டிலாவது களவு போனால், அவனும் கூட்டத்தோடு கூட்டமாக அங்கே இருப்பான். சின்ன பூதக் கண்ணாடியுடன் தரையை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பான். தடயம் தேடுகிறானாம்.
இன்னும் கொஞ்ச நாளில் அவனுக்கு கைரேகை கண்டுபிடிக்கும் ஆசை வந்தது. அதனால் வீட்டில் இருந்த பவுடர் டப்பாவெல்லாம் காலி ஆயிற்று.
பள்ளி இறுதி வகுப்பின் போது ஒரு தெருநாயை வளர்த்து அதன் கழுத்தின் அவனது பழைய பெல்டைக் கட்டி இழுத்துக் கொண்டு மோப்ப வேட்டைக்கெல்லாம் போயிருக்கிறான்.
“ டே போலீஸ் பாண்டி வராண்டா “ என்று பகடி பேசுவார்கள் அவனது நண்பர்கள்.
“ எப்படியாவது போலீஸ்ல சேர்ந்து சிஐடி ஆபிசர் ஆவணும்டா .. “ என்று அவன் நண்பர்களோடு கதைத்த போது அவர்கள் சிரித்தார்கள்.
“ மொதல்ல பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ற வழியப் பாரு.. அப்பால போலிஸ் ஆவலாம்” என்று அவன் தந்தையும் முட்டுக்கட்டை போட்டார்.
பள்ளி படிப்பு முடிக்கும் முன்னரே தந்தை இறந்து போனதும், தாய் ஊரோடு போய் சேர்ந்ததும் அவன் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தன. மனதில் அடித்தளத்தில் நீறு பூத்த நெருப்பாய் இருந்த அவனது கனவைக் கிளறிக் கனலாக்கியவன் பிச்சை. பிச்சை அவனோடு ஒன்றாகப் படித்தவன். அவன் தந்தை ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக இருந்தார். அதனால் அவன் பள்ளிப் படிப்போடு அந்தப் பத்திரிக்கையில் சேர்ந்து விட்டான்.
பிச்சை பெரிய படைப்பாளி இல்லை. கொஞ்சம் சுத்தமாகத் தமிழ் பேசத் தெரிந்தவன். ஆனால் அந்தப் பத்திரிக்கையில் அவன் எழுத்து வேலை எதுவும் செய்யவில்லை. வெறும் பிழை திருத்தல் வேலைதான்.
“ பெரிய  எழுத்தாளருங்கராங்க! ள வுக்கெல்லாம் ல போட்டுத் தொலைக்கிறான். பலப்பல பெண்களுடன் எழுத வேண்டியதை பளப்பள பெண்களுடன்னு எழுதினா எப்படி அர்த்தம் மாறுது பாரு! சொல்ல முடியாது. அகாடமி விருது வாங்கிய ஆளாம். மண் வாசனையோட எழுதறானாம். அவனைப் பொதைச்சு மண் வாசனையை காட்டினாத்தான் நிறுத்துவான்.”
பிச்சைக்கு தமிழின் மேல் வெறி. அதை யாரேனும் குலைத்தால் வரும் கொலை வெறி!
“ இப்பல்லாம் துப்பறியும் வேலையை பத்திரிக்கைங்களே செய்யுதுங்க.. புலனாய்வுப் பத்திரிக்கைன்னு கேள்விப்பட்டிருப்பியே.. நக்கீரன், போலீஸ் செய்தி, ஜூ வி இதமாதிரி.. எங்க பத்திரிக்கையிலும் ஒரு துணைப் பத்திரிக்கையா புலனாய்வுப் பத்திரிக்கை ஆரம்பிக்கப் போறாங்க. சேர்றியா..? “
கையெழுத்து அழகாக குண்டு குண்டாக இருப்பதால், ஒரு சினிமா கதாசிரியரிடம் உதவியாளனாக இருந்து கொண்டிருக்கிறான் அவன். மூணு வேளை சாப்பாடு, பேட்டா, தங்குமிடம் என்று ஏகத்துக்கு வசதிகள். கிடைக்கும் சொற்ப ஊதியத்தை ஊருக்கு அம்மா பெயருக்கு அனுப்பி விடுகிறான். அதைத் தொலைத்து விட்டு இந்த வேலையில் நுழையலாமா? இது நமக்கு ஒத்து வருமா?
முடிவில் ஒரு மாதம் முயன்று பார்ப்பது என்று தீர்மானித்தான். கதாசிரியரிடம் ஊருக்குப் போவதாகவும், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் பொய் சொல்லிவிட்டு பிச்சையைத் தேடி பத்திரிக்கை ஆபிஸ¤க்குப் போனான்.
பிச்சை கண்ணாடி மேசையின் மீது அச்சடித்த காகிதங்களை வைத்து சரி பார்த்துக் கொண்டிருந்தான்.     “ வா அன்பு “ என்று முகமலர்ச்சியுடன் வரவேற்றான். அவன் என்று இதுவரை அழைக்கப்பட்ட அன்பு என்கிற அன்பரசன் உட்கார்ந்தான்.
“ இன்னா தீர்மானிச்சுட்டியா.. சேர்ந்துக்கறயா? “ என்றான் பிச்சை. அன்பு லேசாக தலையை ஆட்டினான்.
“ இரு எடிட்டர் இருக்கறாரான்னு பாக்கறேன்.. “ என்று வெளியேறினான். கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தான். “ இருக்காரு வெவரம் சொன்னேன். கூப்பிடறேன்னாரு என்னா சாப்டற காபியா டீயா ?”
தேனீர் குடித்து அரை மணிநேரம் ஆகிவிட்டிருந்தது. இன்னும் எடிட்டர் கூப்பிட்டபாடில்லை. இன்னேரம் சினிமாக் கம்பெனியாக இருந்தால் ஐந்து பக்கம் வசனம் எழுதியிருக்கலாம். “ அன்பு! சார் கூப்பிடறாரு “ என்ற பிச்சையின் குரல் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. “ ரைட்  சைட்ல மூணாவது கேபின்.. தட்டிட்டு உள்ளே போ ? “ அன்பு குழப்பமாக அவனைப் பார்த்தான். ‘ நான் என்ன ஆற்றங்கரையிலோ கடற்கரையிலோவா உட்கார்ந்திருந்தேன்.. தட்டிட்டு உள்ளே போ என்கிறானே? ‘
மூணாவது கதவு தேக்குமர ப்ளைவுட்டால் ஆனது. சராசரி உயரத்தில் ஒரு சதுரக் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது. அவனையறியாமல் அன்பின் கண்கள் அந்தக் கண்ணாடி சதுரத்தின் வழியாக நோக்கின. உள்ளே நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். பேசும்போது அவர் செய்யும் சேஷ்டைகளிலிருந்து, அவர் தன் காதலியுடனோ அல்லது மனைவியுடனோ பேசிக் கொண்டிருக்கவேண்டும். அவர் தொலைபேசியை வைக்கும்வரை காத்திருந்தான்.
“ என்னா இங்கேயே நிந்துக்கிட்டிருக்கே.. அவர் அப்படித்தான் போனை எடுத்தா வெக்க மாட்டாரு.. நீ தட்டுன்னேன் இல்ல “ என்று பிச்சை பின்னாலிருந்து குரல் கொடுத்தான். அவனே எட்டி கதவை இரண்டு முறை தட்டினான். பேசிக்கொண்டிருந்த நபர் நிமிர்ந்து பார்த்தார். ‘ வா ‘ என்பதுபோல் சைகை காட்டினார். பிச்சையைத் திரும்பிப் பார்த்தான் அன்பு. ‘ போ போ என்று வேகமாக தலையாட்டினான் பிச்சை.
0
அன்பு, கொரட்டூர் ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள குடியிருப்புகளின் முன்னால் காத்திருந்தான். அவனுக்கு ஐம்பது ரூபாயும் பணிக்கான விவரங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. பணி கேட்பதற்கு எளிமையாகத்தான் இருந்தது. அந்தப் பத்திரிக்கையின் எடிட்டர் அவினாஷின் காதலி அனிதா இருக்கும் வீடு எதிரில் இருந்தது. பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. அனிதா தனியாகத்தான் இருக்கிறாள். அனிதாவுக்கு இருபத்தி இரண்டு வயது. எடிட்டரின் வயதில் சரிபாதி.. அவினாஷ¤க்கு அவள் மேல் சந்தேகம். தான் இல்லாத வேளைகளில் அவளுக்கு வேறு ஒரு ஆடவனோடு உறவு இருப்பதாக.
அன்புக்கு கொடுக்கப்பட்ட பணி ஒரு வாரம் அவளைக் கண்காணிப்பதுதான். தினமும் மாலை ஏழு மணிக்கு அவன் வேலையை முடித்துக் கொண்டு பத்திரிக்கை ஆபிசுக்கு வந்து அவினாஷின் செல்பேசிக்கு விவரங்களைத் தரவேண்டும். மறுநாள் செலவுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். ஒரு வாரம் அவன் தரும் ரிப்போர்ட்டைப் பார்த்து, அவனுக்கு வேலை உறுதி செய்யப்படும்.
0
முதல் நாள் கொஞ்சம் பொழுது போவது கடினமாக இருந்தது. சினிமா கம்பெனியில் பேச ஆட்களுக்குப் பஞ்சமில்லை. இங்கே வெயிலில், டீக்கடையோரமோ அல்லது மரத்தடியிலோ, நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ, ஒரே வீட்டை வெறித்துப் பார்ப்பது, கடினமாக இருந்தது.
ஏழு நாட்களும் ஒரே மாதிரியான நிகழ்வுதான். மாற்றம் அனிதாவின் உடைகளில் மட்டுமே இருந்தது. அனிதா அழகாக இருந்தாள். ஒரு நாள் புடவையிலும், ஒரு நாள் சுடிதாரிலும், ஒரு நாள் ஜீன்ஸ் பேண்ட் சட்டையிலும் அசத்தினாள். அதே போல மாற்றமில்லாமல் நிகழ்ந்தது கட்டம்போட்ட சட்டையும், கார்டுராய் பேண்டும் தலையில் தொப்பியும், தாடியுமாக ஒருவன் வீட்டினுள் போவதும், பின் மாலை ஆறுமணிக்கு வெளியே வருவதும்தான்.
ரிப்போர்ட்டைப் படித்த அவினாஷ் சிரித்துக் கொண்டான். தன்னுடைய மாறுவேடம் தத்ரூபமாக இருப்பதும், அன்பு அதைக் கண்டுபிடிக்காததும், அவனுக்குத் திருப்தியை அளித்தது. அனிதாவை சந்திக்க செல்லும்போதெல்லாம் மாறுவேடத்தில்தான் அவன் சென்று கொண்டிருந்தான். பிரபல பத்திரிக்கையின் எடிட்டர், ஏற்கனவே திருமணமானவர், அனிதா என்றொரு இளம்பெண்ணை அதுவும் தன்னுடைய வயதில் பாதி வயது இருக்கும் ஒருத்தியை காதலியாக வைத்திருப்பது, போட்டி பத்திரிக்கைகளுக்கு அவலாகிவிடும் என்ற உண்மை அவருக்குத் தெரிந்தே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக இப்படியே கழிந்து கொண்டிருந்தது. இது வெற்றியடைந்திருப்பது அவினாஷ¤க்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அடுத்த வாரத்தில் அன்பு அந்தப் பத்திரிக்கையின் நிருபராக பணியில் அமர்த்தப்பட்டான். சினிமா கம்பெனியை விட கூடுதல் சம்பளம். அவன் கனவு கொண்டிருந்த வேலை. அவன் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான்.
0
“ ஆமா யாரோ ஒருத்தியோட வீட்டை கண்காணிச்சேன்னு சொன்னியே யார் வீடுடா அது? “ பிச்சை கேட்டான்.
“ அனிதான்னு ஒரு பொண்ணு.. நம்ம அவினாஷ் சாருக்கு சொந்தமாம்.. தனியா இருக்குது. வூட்டுக்கு யார் வராங்க போறாங்கன்னு பாக்க சொன்னாரு. ஏழு நாளும் ஒரே ஒரு தாடிக்காரன் மட்டும்தான் வந்தான். போனான். வேற யாரும் வரல. “
“ தாடிக்காரனா யார்ரா அது? “
“ நம்ம அவினாஷ் சார்தான் அது.. எத்தினி சினிமா பாத்திருக்கேன். ஒருத்தரு நடையும் உடல் மொழியும் வச்சிக்கிட்டே அவரு யாருன்னு சொல்லிட மாட்டேன். ஆனா சொந்தக் கார பொண்ணு வூட்டுக்கு அவரு ஏன் மாறு வேசத்துல வந்தாருன்னு புரியல.. அப்புறம் இன்னொண்ணு ஆறுமணிக்கு வெளியே போயிட்டு ஆறே காலுக்கு திரும்பவும் லுங்கி கட்டிக்கிட்டு வந்துட்டாரு. எனக்கு தெரியக்கூடாதுன்னு காலை சாய்ச்சு சாய்ச்சு வேற நடந்தாரு.. அதான் என்னான்னே புரியல! “

2.நொடிக்கொரு திருப்பம் – சிறகு இரவிச்சந்திரன்

காலையில் செட்டியார் வரச்சொல்லியிருந்தார். இரவு வேலை முடித்துவிட்டு வீடு சேர பதினொரு மணியாகிவிட்டது. சரசு நிரம்பவும் கவலைப்பட்டதாகச் சொன்னாள். ஆனால் அவளது தூக்கக் கண்களும் கலைந்த தலையும் அதைப் பொய் என்று பறை சாற்றியது.
“ பாசு “ சரசா அவனை எப்பவும் அவனை அப்படித்தான் கூப்பிடுவாள். சினமாக இருந்தாலும் சந்தோசமாக இருந்தாலும் இது மாறுவதே இல்லை. என்ன உணர்ச்சிக்கு ஏற்றவாறு குரல் கூடும் குறையும். அவ்வளவுதான்.
“ பாசு.. ஒன்னத்தான் “ குரல் கொஞ்சம் உயர்ந்தது. அவள் கோபம் தலைக்கேற ஆரம்பித்திருக்கிறது என்று அர்த்தம்.
“ அதென்ன பாசு.. எத்தினி தடவ சொல்லியிருக்கேன். பார்த்தசாரதின்னு பேரு.. அழகா பார்த்தின்னு கூப்பிடு.. எங்கம்மா அப்படித்தான் கூப்பிடுவாங்க.. இல்லே சாரதின்னு கூப்பிடு. என் சிநேகிதக்காரங்க அப்படி கூப்பிடுவாங்க.. அதென்ன அதுவுமில்லாம இதுவுமில்லாம ரெண்டாங்கெட்டத்தனமா பாசு.. “
“ எதுனா சொன்னா இப்பிடி சுள்ளுன்னு கோவம் வருதுல்ல.. அதான் பாசு.. நா சொல்றதக் கேளு.. இப்பத்தான் வேலை முடிஞ்சி வந்து படுத்திருக்கே.. நாலு அவுர்கூட ஆவல.. சரியா தூக்கம் இல்ல.. அசதிலேயும் பெரண்டு மேல படுக்கற.. அது அடங்கி இன்னா தூங்கியிருக்கப் போற.. அதான் இன்னிக்கு வேலைக்கு போவாத.. ரெஷ்டு எடுன்னு சொல்றேன்.. “
“ ரெஷ்டு எடுத்தா எவன் துட்டு தருவான்.. கோதை நாச்சியாருக்கு அடுத்த வாரம் பள்ளிக்கூடத்தில பணம் கட்டணும்.. தெரியுமில்ல “
“ ஒரு நா வேலைக்கு போவலன்னா ஓட்டாண்டியா ஆயிருவே “
“ ஆவ மாட்டேன் தான். ஆனா தெம்பு இருக்கறதுக்குள்ள சம்பாரிக்க தாவல “
“ நூத்துக் கெழவன் மாதிரி பேசற.. ஒனக்கு இன்னா வயசாவுது முப்பத்தி எட்டு.. இன்னும் எவ்வளவோ காலம் இருக்குது. கோதை ஒம்பதாங்கிளாஸ் படிக்குது. அது இன்னும் ஆறு வருசமாவது படிக்கும். அப்புறம் தான் கல்யாணம். அதுக்குள்ள சேத்துற மாட்டேன் “
சரசாவின் சிரிப்பு அவனைக் கட்டிப்போட்டது.
“ இரு செட்டியாரண்ட ஒடம்பு சொகமில்லன்னு சொல்லிட்டு வரேன் “
“ ஆங்! ஒடம்பு, சொகம் கேக்குதுன்னு சொல்லிட்டு வா “ என்று சொல்லி மறுபடியும் சிரித்தாள் சரசா.
0
பாசு என்றழைக்கப்பட்ட பார்த்தசாரதிக்கு பேருக்கேத்தவாறு சாரதி வேலை. வாடகை மகிழுந்துகளை ஓட்டுவதுதான் அவனுக்கு வேலை. பெரிய நிறுவனத்தில் அவனும் வேலையில் இருந்தவன்தான். அப்பொழுதெல்லாம் அவன் ஒரு சினிமா நட்சத்திரம் போலவே இருப்பான். மடிப்பு கலையாத உடைகள் அவனது உடலை அலங்கரிக்கும். அது நிறுவனம் கொடுக்கும் சீருடை என்றாலும் அதை சாயம் போகமல் துவைத்து, இஸ்திரி செய்து போட்டுக் கொள்வதில், அவன் மிகவும் கவனம் எடுத்துக் கொள்வான்.
பதினைந்து வயதில் ஆரம்பித்து இருபது சொச்ச வருடங்கள் உழைப்பு அவனுக்கு நிறுவனத்தில் ஒரு மேலாளர் அதிகாரத்தைக் கொடுத்திருந்தது. உரிமையாளரின் பத்துக்கும் மேற்பட்ட வண்டிகளுக்கு, அவனே பொறுப்பு. அலுவலக வண்டிகளை நிற்காமல் ஓடச்செய்ய வேண்டிய பொறுப்பும் அவனுடையதாக இருந்தது.
அவனிடம் வேலை செய்த ஓட்டுனர்களிலேயே வயதானவரும் நிதானமானவரும் கந்தசாமிதான். அறுபது வயதான முதியவர். அவன் வேலைக்குச் சேர்ந்த புதிதில் அவனுக்கு எல்லாமுமாக இருந்து எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவர் அவர். முதலாளி பிள்ளைகளுக்கு மதிய உணவு எடுத்துச் செல்லும்போது அவர்கள் படிக்கும் கான்வெண்ட் பள்ளிக்கு எதிரில் இருந்த மாநகராட்சி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அவரது பேத்தி சரசாவிற்கு மதிய உணவை, இவனைக் கொடுத்து வரச் சொல்வார் கந்தசாமி. சரசா, கந்தசாமியின் பெண் வயிற்று பேத்தி. காந்திமதி அவருக்கு ஒரே பெண். வட மாநிலத்தில் வேலைக்கு போன அவள் புருசன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டான். தனித்து விடப்பட்ட அவள், தகப்பனே கதியென்று சரசாவுடன் வந்து சேர்ந்து விட்டாள்.
இருபத்தி எட்டு வயதில் கணவனை இழந்து, ஆறு வயது மகளுடன் எத்தனை நாட்கள் வாழ முடியும் ஒரு பெண்ணால்.அதுவும் வசதியில்லாத சூழலில்! மனதைக் குழப்பும் மாயங்கள் நிறைந்த பூமி இது.
0
சுப்பிரமணியன் நிறுவனத்தில் ஒரு தேர்ந்த ஓட்டுனர். பத்து வருட உழைப்பு அவனுக்கு வாழ்க்கையில் ஒரு தன்னம்பிக்கையைக் கொடுத்திருந்தது. சொந்தமாக வண்டி ஒன்று வாங்கி வாடகைக்கு ஓட்டலாம் என்று முடிவு செய்தான். திருச்சி, மதுரை என்று போனால் சீக்கிரம் முன்னுக்கு வந்து விடலாம் என்று அவன் ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தான். ஒரே வருடத்தில் ஒரு வண்டியை மூன்று வண்டிகளாக்கி விட்டிருந்தான் அவன். சென்னைக்கு வந்த குடும்பம் ஒன்றினை, உறவினர் வீட்டில் இறக்கி விட்டு விட்டு, அனுமதி வாங்கிக் கொண்டு, அவர்களைப் பார்க்க வந்திருந்தான். கந்தசாமி வீட்டில் இல்லை. அவரது பெண் காந்திமதி அவனை அடையாளம் தெரியாமல் முழித்தாள்.
“ சுப்பிரமணிங்க.. அய்யா இல்லீங்களா.. நீங்க அவரு பொண்ணு காந்திமதிதானே? நார்த்லே இருந்தீங்களே?“
அவள் கதையைச் சுருக்கமாக அப்புறம் அவனுக்கு கந்தசாமி சொன்னார். அவன் மனது பிசைந்து வலித்தது. ‘ நல்லவர்களுக்கே சோதனை வருகிறதே?’
அதற்கப்புறம் சென்னை வரும்போதெல்லாம் காந்திமதியைச் சந்திக்கத் தவறுவதே இல்லை சுப்பிரமணி.
“ சின்னதா ஒரு மனை வாங்கி ஒரு ஓட்டு வீடு கட்டியிருக்கேன். எனக்கு சொந்த உபயோகத்துக்கு ஒரு பழைய வண்டி நா மொத மொதல்ல வாங்கினனே அதே வண்டி, அத வச்சிருக்கன். இப்ப தனியா ஆளுங்க போட்டுட்டேன். நான் வண்டி ஓட்டறதில்ல. மதுரை மீனாட்சி கோயில்லுக்கு பக்கத்துல ஆறுக்கு ஆறுன்னு ஒரு கடைய வளைச்சு போட்டு ஆபீஸ் போட்டுட்டேன். எந்நேரமும் அங்கதான் இருப்பேன். எனக்கு பொண்டாட்டியா புள்ளையா “
“ ஏன் கட்டிக்கறதுதானே.. ஆரு வாணாங்கறாங்க.. “ கந்தசாமி மகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார். காந்திமதியிடம் இப்போது பழைய சிரிப்பு மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டிருந்தது. இந்த முடிச்சு புதுசாகவும் இருக்கிறது. நன்றாகவும் இருக்கிறது.
“ அய்யா ஊன்னு சொல்லட்டும். ஒன்னையே கட்டிக்கத் தயார். “ சுப்பிரமணி போட்டு உடைத்தான். வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்த சரசா நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகத்தில் கலவரமா சந்தோசமா?
‘ நீ என்ன சொல்ற? ‘ என்பதுபோல் காந்திமதி சரசாவைப் பார்த்தாள். கந்தசாமியும் கோடி ரூபாய் கேள்விக்கான பதிலை எதிர்பார்ப்பது போல அவளைப் பார்த்தார்.
“ நீ மாமாவை கட்டிக்கிட்டு மதுரை போ.. நா தாத்தாவோட இங்கேயே இருக்கேன் “ அது குழந்தையின் பிடிவாதமா, தெளிவான தீர்வா?
சுப்பிரமணி சரசாவை அப்படியே அள்ளித் தூக்கிக் கொண்டான்.
0
காந்திமதி கல்யாணம் முடிந்து ஆறுவருடம் ஆகிவிட்டது. சரசா பட்டப்படிப்பு முடித்து வேலைக்கு போகப்போகிறாள். கந்தசாமியும் ஓய்வு பெறும் நிலைக்கு வந்து விட்டார். காந்திமதி மதுரையே கதி என்று கிடக்கிறாள். அவளுக்கு இன்னும் இரண்டு பிள்ளைகளாகி விட்டது. நிறுவன உரிமையாளர் மகன் சரசாவிற்கு வேலை போட்டு தருவதாக அழைத்து, அவளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால், அதைத் தட்டிக் கேட்கப்போன பார்த்தசாரதி மீது வீண் பழி சுமத்தப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டது, எதிர்பாராத திருப்பம்.
படிக்காதவன் என்றாலும் பலசாலி, பண்பாளன் என்பதால், அவனை மணம் செய்து கொள்ள சரசா முடிவு செய்தது கந்தசாமிக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது. ‘ பின்னால கொழப்பம் வராதுல்ல ‘ என்று பலமுறை கேட்டுக்கொண்டே அவர் திருமணத்திற்கு சம்மதித்தார். சாரதிக்கு கொஞ்சம்போல உறுத்தல் இருந்தது. இப்போது நிரந்தர வேலை இல்லை. எப்படி?
“ மதுரைக்கு வந்துடுங்க தம்பி.. எங்க வீட்டிலேயே தங்கிக்கிடுங்க. இப்ப எங்கிட்ட இருபது வண்டி இருக்குது. எதையாவது ஓட்டுங்க.. சம்பளம் கொடுத்துடறேன் “ சுப்பிரமணி ஆசையாக கூப்பிட்டான். ஒருவகையில் மாமனார் வீட்டு வேலை. ஒத்து வருமா?
சரசா கண்டிப்பாக சொல்லிவிட்டாள். “ வேலைக்கு போங்க.. ஆனா தங்கறதெல்லாம் வேணாம். தாய் பிள்ளைன்னாலும் வாழ்க்கை வேறதான்.. “ இப்படி பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டன. சரசா தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். கோதை நாச்சியார் ஒரே மகள். இன்னமும் அவர்களிடையே காதல் குறையவில்லை.
0
“ அய்யா! பார்த்தசாரதி! என்னா யோசனை? “
“ எவன் அவன் பார்த்தசாரதி? எம்பேரு பாசு “ என்று சிரித்தான் சாரதி.
0
 

 

Series Navigationசூட்டு யுகப் பிரளயம் வந்து விட்டது ! மாந்தர் செய்ய வேண்டிய கடமை என்ன ?அப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *