நான்(?)

This entry is part 12 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

நானெனவும் யாரெனவும்
இருமை நிலையடைகிறது மனம்
முயன்று செய்த சாதனைகள்
நானெனப் பறைசாற்ற
இழந்துவிட்ட சந்தோஷம்
யாரெனக் கேட்கத் தூண்டுகிறது.

நானென நிலைக்கும் போதில்
சுயம் வெளிப்படுகிறது
நல்ல ஆதரவும் கிட்டாமல்
நாங்கூரமும் இட முடியாமல்
நடுக் கடலில் தத்தளிக்கிறது படகு
யாரெனக் குழம்பும் பொழுதுகளில்
கனத்த அமைதி கவிந்து
மனச் சலனங்களை மறக்கடிக்கிறது.

எத்தனை மூழ்கியும்
முத்தெடுக்க இயலாத வறுமையே
வாழ்வாய் வசப்படுகிறது.

என்னைப் பற்றிய குழப்பத்திற்கு
விடை காணாமலேயே
உலகக் குழப்பங்களைத்
தீர்க்க முற்படுகிறேன் நான்(?)

-சு.திரிவேணி,கொடுமுடி

Series Navigationவாக்குறுதியின் நகல்..ஒன்றாய் இலவாய்
author

சு.திரிவேணி

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *