This entry is part 7 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

முத்தமொன்றில் மிதந்து வந்தது
தேனீச்சையொன்று
இலைகளின் பச்சையை உடலெங்கும் பூசிய
நிர்வாணத்தின் முன்
அது மயங்கிக் கிடந்தது
விரக தாப வலி பொங்கி விம்ம
ஸபாமர்வா தொங்கோட்டம் ஓடி
களைத்துப் போன அதன் இருப்பு
மெல்லிதழ்களின் வருடலுக்காய் யாசித்து
தன் தவாபை தொடர்ந்தது.
மூச்சுக்கும் மூச்சுக்குமிடையே
பிறந்ததொரு அதிசயக் களிப்பில்
தேன்மணத்தை நாவால் தடவி
வனாந்திர வெளியில் நீந்திச் சென்று
சுவனத்தின் வாசலைத் தீண்டியது.
கூடடைய வழியுண்டா
முத்தமென்பதை மரணமென்று புரிந்து கொள்ள
தேனீச்சைக்கு அனுபவம் போதவில்லை.

Series Navigationமரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்.கேள்வியின் கேள்வி