Posted in

சில கவிதைகள்

This entry is part 4 of 19 in the series 1 நவம்பர் 2020

 

ஏன் 

இன்றைய செயல்களை

வெறுக்குமென் தனிமை

பழங்கால நினைவுகளை

ஆரத் தழுவிக்

கொள்வதேன்?

****

நான் 

நான் கூட்டங்களுக்குப் போவதில்லை. மூச்சு முட்டும்.

மேடை மேல் ஏறிப் பேச மாட்டேன். வாய் குழறும்.

பரிசுகள் கிடைத்ததில்லை.

மார்க்கெட்டிங் வராதென்று காலேஜிலேயே பி.காம்தான்.

நெருங்கிய நண்பர்கள் உண்டு. ஆனால் 

குழு என்றால் விரோதியாகி விடுவேன்  என்கிறார்கள்

நீங்கள் என்னை

யாரையும் வானளாவப் புகழ்ந்தோ,

பரிசுகள் வாங்கியோ ,

பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோவுடனோ

பார்த்திருக்க முடியாது.

நான்

நீரிலிருந்து தள்ளி வைக்கப்பட வேண்டிய மீன்.

அல்லது 

இறகுகளை வெட்டித் தள்ளிவிட வேண்டிய  கிளி.

ஏனென்றால் 

நான் 

எழுத்தாளன் என்னும் எழுத்தாளன்.

உரசல்கள் 

“குரைக்காதே 

எப்போது பார்த்தாலும்” என்றேன் 

எரிச்சலுடன் நாயைப் பார்த்து.

“ஆமாம்” என்றது நாய்.

“எப்போது பார்த்தாலும்

 என்னைப் பார்த்து நீ

குரைப்பதை நிறுத்து.”

நாள் முழுக்கப்

பூனைக்குப்

பாடம் எடுத்தேன்

‘யாரும் அறியாமல்

திருடுவது தவறென்று.’

இரவில்

அம்மா எனக்கு வைத்திருந்த

பாலை

டைனிங் டேபிளில் இருந்த

டவராவிலிருந்து

நக்கிக் குடித்துக் கொண்டிருந்தது

நான் பார்ப்பதைப்

பார்த்தபடி.

Series Navigationதி.ஜானகிராமன் சிறுகதை“பசி ஆறிற்று”நினைவுகளால் வருடி வருடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *