This entry is part 32 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

வாழ்க்கையின் வேளைதோறும்
நெகிழும் கிழிசல்களை தைக்கிற
சின்ன ஊசிக்கு சில நேரங்களில்
கனவு நூல்கூட கனமாகிறது

சிறு புள்ளியாய் மின்னும் ஒளிக்கு
இருண்ட பிரபஞ்சத்தின் திசைகளில்
பயணிக்க எத்தனிப்பதும்
இன்னும் பிரகாசிக்க முயல்வதும்
அகத்திற்குள்ளேயே முடிகிறது.

கிளைகளாய் வி¡¢யும்
மிக நீண்ட பாதைகளில் பயணமானது
எவ்வழியில் என்பதை தீர்மானிக்க
காலம் கற்றுத்தராதா என்ற
ஏக்கம் மேலிடுகிறது.

இலவம் பஞ்சாய் மெல்லியதான
இதயவெளியை ஆக்கிரமித்த
கால நெருப்பின் நிகழ்வுக் குஞ்சுகள்
ஊதிப்பெருக்கின்றன சாம்பலாக்க.

எங்கோ சில நேரம் காணாமல் போவதும்
இருந்தும் பல வேளைகளில் மறப்பதும்
பொடிப்பொடியாய் நொறுங்கும் சூழலிலும்
கவிதை மலர்ந்து மனதை காக்கிறது.

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடாரம் (கவிதை -42)ஐயனாரானாலும் யூ ஹுவாங் ஆனாலும்….