This entry is part 2 of 4 in the series 3 மே 2026

                                         முனைவா் பெ.கி.கோவிந்தராஜ்

கௌரவ விரிவுரையாளர்

தமிழ்த்துறை

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

சேர்க்காடு, வேலூர். 632 115

செல் 9940918800

Pkgovindaraj1974@gmail.com

முன்னுரை

மண்ணில்  விதைத்த விதை விருச்சமாய் வளர்ந்து மக்களுப் பல நன்மையே செய்கின்றன. செடி, கொடி, மரங்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு பலனை நமக்கு அளித்து வருகின்றன. இலை, பூ,  காய், கனி என அனைத்தும். உயிர்கள் வாழ் துணையாக நிற்கின்றன. ”இலையின் உண்டாகக் கூடிய கசப்பு, உவர்ப்பு துவர்ப்பு கார்ப்பு” போன்ற சுவைகள் உணர முடிகின்றது. இச்சுவையானது பல்வேறு மருத்துகுணங்கள் உள்ளடக்கியதாகவும் விளங்கின்றன.  அவ்வகையில் கார்ப்பும் சுடைய வெற்றிலை  பாக்கு  தமிழரின் பண்பாட்டோடு கலந்த பொருளாக இருந்து வருகிறது. தெய்வ வழிப்பாட்டிலும் திருமணம் முதலிய நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை பாக்கு முக்கிய இடத்தைப் பெறுகிறது. வெற்றிலை பாக்கு மகிழ்வுக்குரிய ஒன்றாக இன்ப உணர்ச்சியைத் தூண்டும் ஒன்றாக தமிழரின் அகவாழ்வில் கலந்திருந்திருகிறது. இத்தகைய பாரம்பரித்தை விளக்கி நிற்கும் வெற்றிலை பாக்குக்கு முதல் மரியாதையாக மங்கல நிகழ்ச்சிகளில் தாம்பூம்லம் என்ற பெயரில் முதன்மையாக  வைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட வெற்றிலை பாக்கு சங்க இலக்கியத்தில்  எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் ஆராய்ப்படுகிறது.

இலக்கியத்தில் வெற்றிலை பாக்கு

           வெற்றிலை பாக்கு போடும் பழக்கம்  மக்களிடையே சங்க காலத்துக்குப் பின தோன்றியதாக இருக்கலாம் என்று வரலற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கூறியுள்ளார்(தென்னிந்திய வரலாறு ப. 213) ஆனால் சங்க இலக்கியங்களில் வெற்றிலை பாக்கு போடுவது பற்றி குறிப்புகள் நிறையக் காணப்படுகின்றன. பத்துப்பாட்டில் ஒன்றான மதுரை காஞ்சியில் வெற்றிலை சுண்ணாம்பு விற்பவர்கள் மதுரை நகரில் இருந்தார் என்பதை “ நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்(401) என்று குறிப்பிடுகிறது. இதற்கு நச்சினார்க்கினியர் ”வளர்ந்த கொடியீன்ற வெற்றிலையினை உடையாரும் சங்கு கடுதலால் உண்டான சுண்ணாம்பை உடையாரும்” என்று உரை விளக்கம் தந்துள்ளார்.

          பண்டைத் தமிழகத்தில் அரசருடன் இருந்த ஒரு குழு  எண்பேராயம் என்று குறிப்பிடப்டுகிறது. இந்தக் குழுவின் வெற்றிலை, பாக்கு  வைத்திருக்கும் ஒருவரும்  அடங்குவர். “எண்பேராயம் என்பதற்கு விளக்கம் எழுதிய  சிலப்பிதிகார  அரும்பத உரையாசிரியர் “சந்து பூக்கச் சாடை பாக்கிலை கஞ்சுகநெய் ஆய்ந்த விவரெண் மராயத்தார்”  ( இந்திர விழா விழவூரெடுத்த காதை – 157) என்று எண்வகை நபர்களைக் குறிப்பிடுகிறார். இதில் “பாக்கிலை வைத்திருப்போருர் ஒருவர் இவரை  அடைப்பைக்காரன் என்று  அழைக்கப்பட்டனர். இதிலிருந்து வெற்றிலை பாக்கு தமிழ் வாழ்வில் எவ்வளவு முக்கிய பாங்கு பெற்றிருந்தது என்பதை அறியமுடிகிறது.

          வெற்றிலை பாக்கு போடுவது ஆண், பெண் உறவில் இன்பத்தை மிகுவிக்கும் ஒன்றாக மிக நீண்ட காலமாகக் கருதப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் உணவு உண்ட பின் கணவினுக்கு மனைவி வெற்றிலை  மடித்துக் கொடுக்கும் பழக்கம் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த பழக்கம் தமிழர்களிடையே பழங்காலத்திலிருந்தே இருந்துள்ளது. கோவலனுக்கு கண்ணகியும் மதுரைக்கு வந்து புறஞ்சேரியில் மாதிரி என்னும் இடையர் குலப் பெண்ணின் வீட்டில் தங்கியிருந்த இரவில் உணவு உண்டபின் கோவலனுக்கு கண்ணகி வெற்றிலை பாக்கு மடித்துக் கொடுக்கிறாள். அவர்கள் இருவரம் சேர்ந்து இருக்கின்ற கடைசிநாள் அதுதான்  இங்கு இளங்கோவடிகள்

“உண்டு இனி திருந்த உயிர்பே ராளற்

அம்மென் திரைலோடு அடைக்காயீத்த

மையீரோதியை வருகெனப் பொருந்தி”

(கொலைக்களக்காதை  54-56)

 என்று குறிப்பிட்டுகிறார். “திரையல்“ என்று வெற்றிலையும்,  அடைக்காய் என்பது பாக்கு யும் உண்டு அவர்கள் மகிழ்வாக இருந்தனர் என்பதை குறிப்பாக உணர்தியுள்ளார்.

          மணிமேலையில் கச்சிமா நகர்புக்க காதையில் (241-243) கூறப்படடுள்ளது. திருவாய்மொழியில் ( 6-7) உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்” என்கிறார் நம்மாழ்வர்.

          சீவகசிந்தாமணியின் காவியத் தலைவன் சீவகன் விமலையாரிடம் புணர்ச்சி வேண்டுவதைக் குறிப்பால் உணர்த்தும் விதமாக வெற்றிலை மடித்துக் கொடுப்பதற்காக வெளைத் தொட்டான் என கூறப்படுகிறது. பாசிலை சுருட்டி மைந்தன் கொடுகிய (பா. 1987) இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர்

“வெற்றிலை மடித்துக்

கொடுத்தற் கென்றது இடக்கர்”

என்று கூறுகிறார். நேரடியாகச் சொல்ல வேண்டிய செய்தி அநாகரிமாக இருக்கும் சமயங்களில் அதை மறைமுகமாகச் சொல்லும் முறையை தமிழ் இலக்கண நூல்கள் இடக்கர் எனக் கூறும். கம்பராமாயணத்தில் ஒரு காட்சி அசோக வனத்தில் தனிமையில்  வாடிக்கொண்டிருக்கும் சீதையின் எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்யும் கம்பர் “ இராமனுக்கு யார் வெற்றிலை பாக்கு மடித்துக் கொடுப்பார்கள் ” என்று  தனது இயலாமையை எண்ணி சீதை மனம் நொந்து போவதாகக் கூறுகிறார். “அந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும்” என்று  அழுங்கும் (காட்சிப்படலம்-15) இராமனைச் சேர்ந்து இன்பம் துய்க்கமுடியாத தனது நிலைமையை இச்செய்தி மறைமுகமாகவும் கூறுவதாக அமைகிறது. காவியப் புலவனின் சிறப்பு இதில்தான் அடங்கியுள்ளது. தமிழரின் பண்பாட்டுப் பாரம்பரியத்தைச் சரியான முறையில் காவியத்திலே பயன்படுத்தியுள்ளார் கம்பர்.

          மேலும், சிலப்பதிகாரத்தில் இந்திர விழா ஊரெடுத்த காதையில் “சந்த பூக்கச் சாடை பாக்கிலை செய் ஆய்ந்த விவரெண்”  (பா. 157)என்ற வரிகள் வெற்றிலையின் மகிமையை வெளிப்படுத்துக்கிறார் இளங்கோவடிகள்.

கலிங்கத்துப்பரணி போர்க்களம் காட்சியில் மிகுதியாக உண்டதால் உணவு செரிமானத்திற்காகப் பேய்கள் தாம்பூலம் போட்டுக் கொண்டன என்கிறார் செயங்கொண்டார்  “பெருக்கத் தின்றீர் தாம்பூலம் பிழைக்கச் செய்தீர்(பா.585)

தமிழர் பண்பாட்டில் அகத்துறையில் வெற்றிலை பாக்குப் பெற்றுள்ள இடம் பழங்காலத்திலிருந்து இன்று வரை தொடர்கிறது.

வெற்றிலை காரணம்

          சங்க காலத்தில் இரண்டு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் தங்களின் ஆடுகளைக் காட்டில் எங்கு கொண்டுப்போய்விட்டாலும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அந்த ஆடுகள் மீண்டும் மீண்டும் சென்று மேய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன. ஒருமுறை இரண்டு சிறுவர்களுக்கும் ஆடுகள் வழக்கமாக நிற்கும் இடத்திற்கு யார் முதலில்  செல்வது என்பது போட்டியாக நடந்தது. ஒரு சிறுவன் ஆடு நிற்கும் இடத்திற்கு வேகமாக ஓடிச்சென்று  அங்கு பக்கத்தில் படர்ந்திருக்கும் கொடியிலுள்ள இலையைப் பறித்து நான்தான் வெற்றிப்பெற்றேன் என்றான். வெற்றிப்பெற்ற சிறுவன் ஊருக்குள்ளே  சென்று வெற்றிப்பெற்றமைக்கு அடையாளமாகத் தன்கையில் வைத்திருந்த இலையைக் காண்பித்தான். அதைப்பார்த்த பெரியோர்கள் நீ வெற்றிப் பெற்றதால் வெற்றி இலை வெற்றிலை எனக் கூறியுள்ளார். மேலும் வெற்றிலையைச் சாப்பிட்ட ஆடுகளுக்கு  எந்தொரு நோயும் வராமல் இருப்பதைக் கண்டு அவர்களும் சாப்பிடலாயினர். பொதுவாக வெற்றிலை மலேசியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது என்பார்கள்.

வெற்றிலையின் வகைகள்

வெற்றிலையின் வகைகள் இலையின் வடிவம் அளவு, தன்மை மற்றும் சுவை ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றிலை கொடியானது கார்பாகு, சென்னோர், தெள்ளாக்கு, பங்களா மற்றும் கல்லி பட்டி அசாம்பட்டி, ஆவணி பான், காசி தேசி பான் , கல்கத்தா பங்களா போன்றவையாகும். மேலும்,வெற்றிலை அதன் நிறம், சுவை  மற்றும் மருத்துவக் குணங்களின் அடிப்படையில் பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. கற்பூரி, நாட்டுக்கொடி, பச்சைகொடி மற்றும் கம்மாறு வெற்றிலை(கருப்பு வெற்றலை) ஆகிய பிரபலமான வகைகள்.

  • வெள்ளை வெற்றிலை என்றே கற்பூர் வெற்றலை – இளம் பச்சை நிறத்தில் இருக்கும். கற்பூர் மணம் கொண்டது பெரிய தாமரை இலை வடிவில் இருக்கும்.
  • நாட்டுக்கொடி அல்லது பச்சைக்கொடி – காரமான சுவை கொண்டவை.
  • கம்மாறு வெற்றிலை அல்லது கருப்பு வெற்றிலை – தடிமனான கரும்பச்சை நிறத்தில் இருக்கும். கருப்பு நிறமுடைய இலைகள்.
  • பங்களா வெற்றிலை –அகலமான இலைகள் கொண்டது.
  • காப்பு வெற்றிலை – பளிச்சென்று மின்னுவது போல் இருக்கும்(தங்க நிறத்தில் இருக்கும்)
  • பே கருப்பு வெற்றிலை  – கருப்பு அதிகமுள்ள பச்சையாக இருக்கும்

வெற்றிலை பாக்கு நன்மைகள்

           உலகில் பல்வேறு இலைகள் இருப்பினும் இவ்வெற்றிலைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தாக  piper Batle  என்கின்ற தாவரவகையாகும். மிளகு வரிசை மிளகுக்குடும்பத்தைச் சேர்ந்தது. வெற்றிலை செரிமாணத்திற்கு முக்கிய  பொருளாக உள்ளது. மலச்சிக்கலை நீ்குதல் கபம் மற்றும் இருமலைக் குறைத்தல், வாய் துர்நாற்றத்தை தடுத்தல், மூட்டு வலியைப் போக்குதல், நுண்ணுயிர் எதிர்ப்பு, நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துதல் மற்றும் மன அழுத்தத்தைக்  குறைத்தல்  போன்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது சாறு இருமல், சளி  மற்றும் மூச்நுக்கழாய்  அழற்சிக்கு நல்ல மருந்து. இதை ண்டால் நரம்பு மண்டலத்திற்கு பலம் கொடுத்து மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது. தலைவலியின் இதை நெற்றியில் பற்றாக  போடலாம்.

முடிவுரை

          தமிழர் பண்பாட்டில் வெற்றிலை மங்கலப் பொருளாகக் கருதப்பட்டது. திருமண விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் வழங்கப்படுகிறது. விருந்தினர்களை வரவேற்று வெற்றிலை பாக்கு கொடுத்து உபசரிக்கும் முறை இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலால்(அசைவம்) உணவு உண்பவர்கள் வெற்றிலை காப்பு அதிகமாக  விரும்பினர். ஏன் நேர்மை தவறாமல் இருப்பதற்கு வெற்றிலை மீது சத்தியம் வாங்கும் பழக்கம் தமிழகத்தில் இன்றளவும் உள்ளது இத்தகைய சிறப்புடையது  வெற்றிலை. தமிழர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சுபகாரியத்திற்கும் சடங்கு சம்பிரதாயத்திற்கும்  இடம் பெறுகிறது வெற்றிலை பாக்கு.

பயன் பட்ட நூல்

புலியூா்க்கேசிகன் (தெளிவுரையுடன்)            சிலப்பதிகாரம்                             

                                                                    பாரி நிலையம்

                                                                    184, பிராட்வே

                                                                    சென்னை – 108           

முனைவா் கு. வெ. பாலசுப்பிரமணியன்                மதுரைக்காஞ்சி (மூலமும் உரையும்)

                                                                   நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்

                                                                   41 – பி,சிட்கோ இண்டஸ்டிரியல்

                                                                   எஸ்டேட்

                                                                   அம்பத்தூா், சென்னை – 600 098

                                                                   பதிப்பு 2004

டாக்டர் பூவண்ணன்                                        கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும்

                                                                   வர்த்தமாணன் பதிப்பகம்

                                                                   15, சரோஜினி தெரு

                                                                   தியாகராய நகர், சென்னை – 600617

Series Navigationஅடுப்பு வெப்பம்வியட்நாம்… அன்றும், இன்றும்…