தகவல் தாமதமாக கிடைத்த
வருத்தத்தோடு விசாரிக்கச் சென்றேன்.
நண்பரின் மனைவியிடம்
எப்படி நிகழ்ந்ததென்றேன்
தெருநாய்கள் துரத்த மிரண்ட
பசுவொன்று ஸ்கூட்டரில் சென்றவரை
சாலையோரப் பள்ளத்தில் தள்ளி
வயிற்றில் மிதித்திருக்கிறது.
முதலுதவிக்கு முன்பே மூச்சு நின்றுவிட்டது.
நோயில் விழாமல் பாயில் படுக்காமல்
யாருக்கும் தொல்லையில்லாமல்
மருந்து மாத்திரை மருத்துவச் செலவில்லாமல்
நொடிப்பொழுதில் நிம்மதியாய்
போய் சேர்ந்தார் உங்கள் நண்பர்.
மிகவும் நல்லவர். நல்ல சாவு
என்றார் நண்பரின் மனைவி.
துக்கத்துடன் வீடு திரும்பினேன்
—–லாவண்யா சத்யநாதன்