This entry is part 4 of 8 in the series 24 மே 2026

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

……………………………………………………………………………………………………..

விரிந்து பரந்திருந்த வளாகத்தில்

வேலையில் மும்முரமாய் வேகவேகமாய் எண்ணிக்கொண்டிருப்போர்

கேட்கக்கூடுமோ – தெரியவில்லை……

மனங்கன்னிப்போகுமொரு சன்னக் குரல் அழுகை

மரங்களடர்ந்த ஒரு பாழின் பின்னணியிசையாய்

அங்கே முணுமுணுப்பாய் முனகலாய்

மிதந்தபடியிருக்கிறது…

அதிகாரவெறியில் இயங்கும் காமுகர்களின் கைகளில்

கதியற்றுப்போய் குறுகிப்படுத்திருக்கும்

எந்தச் சிறுபெண்ணும் கன்னித்தெய்வம்தான் என்பதை

பாவம், போதைப் பிதாமகர்கள்அறியமாட்டார்கள்.

குரல்வளை கீறிப் பெருகலாகும் குருதியைக் குடிப்பதற்காய்

அந்த மர உச்சிக்கிளைகளில் அல்லது அடிமரத்துக்குள்

அருவமாய்க் குந்திக்கொண்டும்

தொங்கிக்கொண்டும் காத்திருக்கு மவர்கள்

ஆவியாகவோ, நடைப்பிணமாகவோ

அலைந்துகொண்டிருப்பவர்கள்

காத்துக்கொண்டிருக்கிறார்கள்

நியாயத்தீர்ப்பு நாளுக்காய்…

Series Navigation சிறுகதையின் ஓசைபோர்களும் மன்னர்களும் சாமான்ய மக்களும்