Posted in

ஒரு சொட்டு கண்ணீர்

This entry is part 20 of 21 in the series 23 நவம்பர் 2014

ருத்ரா இ.பரமசிவன்

அந்த ஆயிரம் ஆயிரம் பிணங்களுக்காக
என்னால் முடிந்தது…….

தென்னை மரங்கள் தலை சிலுப்பும்
அந்த சின்னத்தீவில்
எறும்புகளுக்கு கூட நோவும் என்று
மயில் பீலிகள் கொண்டு செய்யப்பட
துடைப்பம் கொண்டு கூட்டப்படும்
புத்த விகாரைகள் அன்பை ஒலிக்கும்
அந்த பூமியில்
தமிழ் மொழி
எலும்புக்குப்பைகளாய்
எருவாகிப்போனதற்கு
என்னால் முடிந்தது …..

இங்கே காலி டப்பாக்கள்
தட்டி கொட்டி
விடுதலை கீதம் என்று
வீண் ஒலிகளை
கிளப்பிக்கொண்டு கிடக்கையில்
என்னால் முடிந்தது …..

தேர்தல் கால
பணங்காய்ச்சி மரக்காட்டுக்குள்
வாக்குறுதிகளின் மராமரங்களில்
அம்பு பட்டு அமுங்கிப்போன
குரல்வளைகளில் நெறிக்கப்பட்ட நிலையில்
என்னால் முடிந்தது …..

தமிழ்
இங்கே மரத்துப்போனது.
தமிழ்
இங்கே மரித்துப்போனது .
தமிழ்
இங்கே மக்கிப்போனது
என்ற அவலங்களினூடே
என்னால் முடிந்தது…
அந்த
ஒரு சொட்டுக்கண்ணீர் மட்டுமே.

Series Navigationகடவுளும் கம்பியூட்டர்ஜியும்தொடுவானம் 43. ஊர் வலம்

One thought on “ஒரு சொட்டு கண்ணீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *