Posted in

சான்றோனாக்கும் சால்புநூல்கள்

This entry is part 7 of 28 in the series 22 மார்ச் 2015

 

பாவலர் கருமலைத்தமிழாழன்

 

கிழிந்திட்ட   துணிதன்னைச்   செம்மை   யாக்கக்

கிழிச்சலினைத்   தைக்கின்ற   ஊசி   போல

கிழிந்திட்ட   மனந்தன்னை   நல்ல நூல்கள்

கீழ்வான   வெளிச்சம்போல்     செம்மை   யாக்கும்

வழிமாறிப்   போகின்ற நீர்த   டுத்து

வளமாக   மாற்றுகின்ற   அணையைப்   போன்று

விழிமறைக்கும்   அறியாமை   இருளை   ஞான

விளக்கேற்றிப்   போக்குவதும்   நூல்கள்   தாமே !

 

அறிவுதனை   வளர்க்காமல்   விலங்கைப்   போல

அலைவதுவும்   தின்பதுமே   வாழ்க்கை   யன்று

அறிவிலியும் வாழ்கின்றான்   அந்த   வாழ்க்கை

அறிஞர்கள்   போற்றுகின்ற   வாழ்க்கை   யாமோ

நெறியோடும்   பண்போடும்   வாழ்வ   தற்கும்

நேர்செயல்கள்   சிந்தித்தே   ஆற்று   தற்கும்

அறிவார்ந்த   நூல்களினைப்   படிக்க   வேண்டும்

அதன்வழியில்   நடப்பதற்கே   முனைய   வேண்டும் !

 

நூல்கள்தாம்   நமக்குற்ற   நல்ல   நண்பன்

நூல்கள்தாம்   சூழ்ச்சிசெய்யா   உண்மை   நண்பன்

ஆல்விழுது   அடிமரத்தைக்   காத்தல்   போல

அருநூலே   நம்வாழ்வைக்   காத்து   நிற்கும்

கால்உடலைத்   தாங்கிவழி   நடத்தல்   போல

கற்றிட்ட   நூல்கள்தாம்   வழியைக்   காட்டும்

சால்புதரும்   சிறப்பான   நூல்கள்   கற்றே

சாகாத   சான்றோராய்ப்   புகழில்   வாழ்வோம் !

Series Navigationஎழுத்துப்பிழை திருத்திஎன்னைப்போல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *