மக்கள் நல வாழ்வுக்கான தேவையும் அளிப்பும்

This entry is part 4 of 40 in the series 26 மே 2013

 

  1. எழுத்தறிவித்தல்

School-1நாடு முழுவதும் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் 7 லட்சத்துக் கும் அதிகமான ஆசிரியப் பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டதாக 24.11.2012 தினமணி இதழில் செய்தி வெளியாகியிருந்தது. நன்கொடை பெற்றது, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் விளக்கம் கேட்டு 31 பள்ளிகளுக்கு மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் [ஸிபிஎஸ்ஸி] இந்த ஆண்டில் 31 பள்ளிகளுக்கு நோட்டீச் அனுப்பியுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத் துறை இணைய மைச்சர் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், பள்ளிகளில் நடைமுறையில் உள்ள மதிய உணவுத்திட்டம் தொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் 40 புகார்கள் மத்திய அரசுக்கு வந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார் அமைச்சர். முக்கியமாக, உணவுத்தரம் மோசமாக இருப்பதாகவே பெரும்பாலான புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரியவருகிறது.

 

எழுத்துவடிவில் தரப்பட்டும் புகார்கள் அவற்றை விட பன்மடங்கு அதிகமாகப் புகார்கள் பலதரப்பட்ட அச்சங்கள், அச்சுறுத்தல்கள் காரணமாக தரப்படாத நிலையில் இருக்கும் உண்மைநிலவரத்தையே குறிப்புணர்த்துகின்றன என்றால் மிகையாகாது.

 

‘மாடர்ன் பள்ளி’ என்று பெயர்ப்பலகையை மாட்டியிருக்கும் பல தனியார் பள்ளிகளில் போதுமான இட வசதியோ, வெளிச்சம், காற்று உள்ளே வருவதற்கான வாய்ப்போ, அடிப்படையான உள்கட்டமைப்பு வசதிகளோ இருப்பதில்லை. குறிப்பாக, மழலையர்-ஆரம்பப் பள்ளிகளில் நிலைமை இன்னும் மோசம்.

 

‘மக்கள் நல அரசு’ என்ற கோட்பாட்டின் கீழ் இயங்கிவர வேண்டிய மத்திய மாநில அரசுகள் தமது பள்ளிகளின் தரம், செயல்பாடு குறித்து போதுமான கவனம் செலுத்திவருகிறதா என்பது பெரிய கேள்விக்குறி. பதிவேடுகளெல் லாம் வெகு கவனமாகப் பராமரிக்கப்பட்டுவிடும். ஆனால், உண்மை நிலவரம் எப்படியிருக்கிறது? இதை தொடர்ந்த ரீதியில் கண்காணித்துவரவும், தவறுக ளைக் களைந்து தேவையான மாற்றங்களைக் கொண்டுவரவும், கல்விப் பணியில் ஆர்வங்கொண்டுள்ள சமூகப்பணியாளர்கள், கல்வியாளர் க ள், தொண்டுநிறுவனப் பிரதிநிதிகள், சட்ட வல்லுனர்கள், ஆசிரியப் பிரதிநிதிகள், பெற்றோர்களின் பிரதிநிதிகள், ஊடகப் பிரதிநிதிகள், மனித உரிமைக் குழுக்கள் போன்ற பல்வேறு பிரிவினரை, சமூக அக்கறையுள்ள மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய  கண்காணிப்புக் குழு, மதிப்பாய்வுக் குழு[க்கள்] நம்மிடையே இல்லவேயில்லை எனலாம். உண்மையான அக்கறையோடும், ஆதங்கத்தோடும், தவறுகளைச் சுட்டுவோர், மாற்றங்களைக் கோருவோர் அரசுகளால், முக்கியமாக அரசியல்வாதிகளால்  எதிரிகளாய் பார்க்கப்படும், அத்தகையோர் குரல்கள் ஒடுக்கப்படும் அவலநிலையே பெரும்பாலும் நிலவிவருகிறது.

 

தவிர, கல்வி இங்கே அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தில் இருப்பதும், ஆயாக்கள், ஆசிரியர்கள் பணிநியமனங்கள் பல அத்தகையோரின் செல்வாக் கின் அடிப்படையில், பரிந்துரையின் அடிப்படையில் நடத்தப்படுவதும், இந்தப் பணிக்கு இத்தனை தொகை கையூட்டாகத் தரப்பட வேண்டும் என்பது ‘எழுதப்படாத சட்டமாக அமுலில் இருந்துவரும் நிலையும், தரமான கல்வியும், கல்விச்சூழலும் கிடைக்க வழியில்லாத நிலையைப் பரவலாக ஏற்படுத்தியிருப்பதாக, கல்விப் பணியில் ஆர்வமுள்ள, சமூக அக்கறையுள்ள பலர் வருத்தத்தோடு கூறக்கேட்டதுண்டு. [நான் இத்தனை பணம் கொடுத்து இந்த வேலையில் சேர்ந்திருக்கிறேன். அதைத் திரும்ப எடுக்கமுடியும் என்ற நம்பிக்கையில்தானே சேர்ந்திருக்கிறேன்”, என்று உண்மையான ஆதங்கத்தோடு ஒரு பள்ளியைச் சேர்ந்த ஊழியர் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களைக் களவாடிய தன் செயலை நியாயப்படுத்தி ஆட்சியர் ஒருவரிடமே வாதிட்டதாக சில நாட்களுக்கு ம்ன்பு ஒரு செய்தியைப் படிக்க நேரிட்டது].

அரசுப்பள்ளிகளில் தரமான சத்துணவு வழங்கப்படவேண்டும் என்று தற்போதைய தமிழகஅரசு புதிய உணவு அட்டவணையைத் தயாரித்து அளித்துள்ளதாக செய்தி வெளியாகியது. இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், மாணாக்கர்களுக்கு சத்துணவு அளிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா, மாணாக்கர்களுக்கு தரமான உணவுப்பண்டங்கள் அளிக்கப்படுகின்றனவா என்பதையெல்லாம் உறுதியாகக் கண்காணிக்க என்ன ஏற்பாடுகள் அரசால் செய்யப்பட்டிருக்கின்றன? மழலையர் மற்றும் ஆரம்பப்பள்ளிகளில் குழந்தை களுக்காகத் தரப்படும் உணவுபொருட்கள் நல்ல முறையில் அவர்களுக்குக் கிட்டுவதில்லை என்ற புகார்களை ஏழைப்பெற்றோர்களிடமிருந்து நிறையவே கேட்கமுடிகிறது. ஆனால், சமூகத்தின் அடித்தட்டில் உள்ள இந்தப் பெற்றோர் கள் பள்ளிநிர்வாகத்தை எதிர்த்துக் கேள்விகேட்க அஞ்சுவது இயல்பு. பெற்றோர்களையும், ஆனால், பிள்ளைகளையும், மதிப்பழிப்பதே, கூனிக் குறுகச் செய்வதே நோக்கமாய் அவர்களை அலட்சியமாக, அச்சுறுத்துவதாய் நடத்தும் போக்கையும் பல அரசுப்பள்ளிகளில்[தனியார் பள்ளிகளிலும் தான்] கணிசமான அளவு ஆசிரியப்பெருமக்களிடம் காணமுடிவதாய் நம்மிடம் கிசுகிசுப்பாய் தெரிவிக்கும் பெற்றோர்கள் ஏராளம்.

 

ஆசிரியப்பணி மகத்துவம் நிறைந்தது. மழலையரை கவனிக்கும் ஆயாக்களின் பணியும் அத்தகையதே. ஒன்று முதல் ஐந்து வரையான வயதுகளில் ஒரு குழந்தை பெறும் மனப்பதிவுகள்  வாழ்நாளுக்கும் அதன் ஆளுமையில் தாக்கம் செலுத்த வல்லது என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். வளரும் பருவத்தில் குழந்தைகளுக்குச் சரியான கல்விச்சூழல் இருந்தால்தான் இலவசமாக, கட்டாயமாகத் தரப்படும் கல்வியால் அவர்கள் பயன் பெற முடியும். குழந்தைகளை மிரட்டிக்கொண்டே, மதிப்பழித்துக் கொண்டே அவர்களுடைய வளர்ச்சிக்கென அரசு தரும் சலுகைகளின் பலன் அவர்களுக்குக் கிடைக்கவொட்டாமல் செய்தவாறே ‘வளமான எதிர்காலத்’தை அவர்களுக்கும் அவர்கள் மூலமாக தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் எப்படி சாத்தியமாக்க முடியும்?

 

எனக்குத் தெரிந்த பெற்றோரொருவர் கூலிவேலை செய்யும் பெண்மணி. குழந்தையை அரசு மழலையர் பள்ளியில் விட்டுச்சென்றால்தான் அவரால் வேலைக்குச் செல்லமுடியும். ‘என் பிள்ளைக்கு இரண்டு வயது. நான் அவனைக் கொண்டுவிடச் செல்லும்போதெல்லாம் அவனைப்பற்றி என்னிடம் குறைகூறுகிறார்கள். என் எதிரிலேயே பிள்ளையின் தலையில் குட்டு கிறார்கள், கன்னத்தில் நறுக்கென்று கிள்ளுகிறார்கள். என் பிள்ளைக்கென நான் தரும் உணவுப்பெட்டியில் உள்ள தின்பண்டத்தை ஆயா தின்று விடுவதாய் குழந்தை தினமும் என்னிடம் அழுதுகொண்டே கூறுகிறான். குழந்தை சிறுநீர் கழித்துவிட்டாலோ அல்லது மலம் கழித்துவிட்டாலோ வாய்க்குவந்தபடி அதை வைகிறார்கள். முதுகிலும், தலையிலும் மொத்து கிறார்கள்”, என்று வருத்தத்தோடு தெரிவித்தவர் “இது குறித்து நான் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தரவோ, அந்த ஆயாவிடமே கேட்டுவிடவோ எனக்கு தைரியமில்லை. அதன் விளைவாக என் குழந்தைக்கு மேலும் அடி கிடைக்கும். சாதாரணமாகவே, போகும்போதும் வரும்போதும் இந்தச் சின்னக் குழந்தைகளின் தலைகளில் விளையாட்டாக நறுக்கென்று கை போன போக்கில் குட்டுவது அந்த ஆயாவின் வழக்கம். குழந்தைகளுக்கு விநியோகிப் பதற்காகக் கொண்டுவந்து தரப்படும் தின்பண்டங்களில் பெரும் பகுதியை ஆசிரியப்பெருமக்களும் ஆயாக்களும் எடுத்துக்கொண்டு மீதியைத்தான் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள்”, என்றும் வருத்தத்தோடு கூறினார்.

 

அரசியல்வாதிகளின் ஆதரவில், கையூட்டு கொடுத்து  இந்தப் பள்ளிகளில் பணியில் சேருபவர்களை நியாய-அநியாயம் தெரிந்த உயர் அதிகாரிகளாலும்  பெரிய அளவில் கண்டிக்க முடிவதில்லை. அநாதரவான அடித்தட்டுப் பெண்கள் தான் பெரும்பாலும் ஆயாக்களாகப் பணிபுரிபவர்கள், பாவம், அவர்களைப் பற்றி புகார் கூறி அவர்கள் வேலைக்கு உலைவைப்பது சரியா?’ என்ற மனிதநேய வாதத்தை முன்வைப்பவர்களும் உண்டு. ’அப்படியென்றால் அவ்வாறு  பணிநியமனம் செய்யப்படுபவர்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் உணவு விடுதிகளில் சமையல் செய்யும், பணி செய்யும் பணிகளில் அரசு நியமிக்கட்டுமே. தம் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பத் தெரியாத குழந்தைகள் மத்தியில் பணியாற்றும் யாரும் கூடுதல் பொறுமையோடும், பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டியது இன்றியமையாத தல்லவா? என்று ஆதங்கத்தோடு கேட்கிறார்கள் குழந்தைகளின் உரிமைக்காக, நலவாழ்வுக் காகப் பாடுபடுபவர்கள்.

 

முன்பு அறுபதுகளின் பிற்பகுதியிலும், எழுபதுகளின் ஆரம்பத்திலும் தமிழக கிராமங்களில் ஐ.நா குழந்தைகள் நல அமைப்பின் சார்பில் [UNICEF] –ன் ஆதரவில் இயங்கிவந்த குழந்தைகளுக்கான பால்வாடி களுக்கு வந்துசேரும் ஜெர்மன்-சில்வர் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், மெத்துமெத்தென்ற துவாலைகள், ஏராளமான விலையுயர்ந்த விளையாட்டுப்பொருட்கள் முதலியவற்றின் முக்காலே மூன்று வீசம் வந்த சில நாட்களிலேயேப்ளாக் டெவெலெப்மெண்ட் அதிகாரி போன்ற அதிகாரிகளின் வீட்டிற்கோ, ஊர்த் தலைவர் வீட்டிற்கோ பறந்துசென்றுவிடும். என்ன அநியாயம்-அயோக்கியத் தனம் என்று குமுறுவார்கள் குரலெழுப்பவியலா ஏழைப் பெற்றோர்கள்.

 

இவ்வாறு குமுறுவோரில் நல்லுள்ளம் கொண்ட, ஆசிரியப்பணியின் மகத் துவம் உணர்ந்த, சமூக அக்கறை நிறைந்த ஆசிரியப் பெருமக்களும் உண்டு. ஆனால், இவர்கள் ’பிழைக்கத் தெரியாதவர்கள், நம் பிழைப்பைக் கெடுப்ப வர்கள் என்ற வசையைத் தாங்கியவாறு உதிரிகளாக இருக்கும் அவல நிலையும் தொடர்கிறது.

 

சில வருடங்களுக்கு முன்பு ஒரு கல்லூரியில் மொழிபெயர்ப்பு தொடர்பான சிறப்பு வகுப்புகள் எடுக்கச் சென்றுகொண்டிருந்த சமயம் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பு பயின்றுவந்த மாணாக்கர்களில் ஒரு சிலர் பரிட்சையில் முப்பது பக்க விடைத்தாள்களைத் தந்தும் அதில் ஒரு வரி கூட இலக்கண சுத்தமாக அர்த்தமாகும் வகையில் இல்லாதிருப்பது கண்டு அதிர்ச்சியாக இருக்கும். அதாவது, அவர்களுக்கு விடைகள் நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால், அவர்களுடைய மொழித்திறன் அத்தனை பலவீன மாக இருந்தது. ஆங்கிலமொழி விஷயத்தில்தான் நிலைமை இப்படி என்றில்லை. பள்ளி மாணாக்கர்களில் – அரசுப் பள்ளிகளாகட்டும், தனியார் பள்ளிகளாகட்டும் கணிசமான எண்ணிக்கையில் தமிழ் மொழியே கூட திருத்தமாக எழுதப் படிக்கத் தெரியவில்லை. மொத்தமாக உருப்போட்டு, குத்துமதிப்பாகப் படித்துவிடுவதும் எழுதிவிடுவதும் எத்தனை கடினமான, மிகுந்த அயர்வூட்டும் பிரயத்தனம். ‘எங்கள் பள்ளியில் அப்படியெல்லாம் கிடையாதுன்றோ, அல்லது ‘எல்லாப் பள்ளிகளிலும் இத்தகைய சில மாணாக்கர்கள் இருப்பது இயல்புதான் என்று  சொல்லிவிடுவதோ, அத்த கைய மொழித்திறன் பலவீனமாயுள்ள அத்தகைய மாணாக்கர்களைக் கடிந்து கொள்வதோ, மதிப்பழிப்பதோ, பள்ளியை விட்டு வெளியேற்றிவிடுவதோ, பிரச்னைக்குத் தீர்வாகாது. மொழிப்பயிற்சியை மாணாக்கர்களுக்கு அளிப்பதில் தனிக்கவனம் செலுத்தப்படவேண்டியது அத்தியாவசியம்.

 

இன்றும் அரசுப்பள்ளிகள் பலவற்றில் குழந்தைகளுக்கான நூலகமும், கணினி மையமும் முறையாக அல்லது அறவே இயங்குவதில்லை என்று தெரியவருகிறது. மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மத்திய அரசாலும், மாநில அரசாலும் செயல்வடிவம் தரப்பட்டும் மேற்குறிப்பிட்ட தரமான முன்முயற்சிகள் இலக்குப் பயனாளிகளான சமூக அடித்தட்டு மாணாக்கர்களை எட்டாததற்கு யார் பொறுப்பு? ஒருவகையில் நாமனை வருமே இந்த அவல நிலைக்குக் கூட்டுப்பொறுப்பாளிகளே.

 

ஆரம்பக் கல்வி முதல் மேநிலைப்பள்ளிக் கல்வி வரை இலவசமாக, கட்டாயமாக அரசால் தரப்பட்டுவரும் இந்நாளில் இந்தியாவில், குறிப்பாக நமது தமிழகத்தில் நிலவும் கல்விச்சூழல் குறித்து கவனம் செலுத்த வேண்டியது சமூக அக்கறையுள்ள நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும். அடித்தட்டு மக்களுக்காகக் குரல் கொடுக்கும் அரசியல்       கட்சிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. குழந்தைகள் ‘வாக்கு வங்கிகள் அல்ல என்பதுதான் இந்த அலட்சியத்திற்குக் காரணம் என்று சொல்லலாமா, தெரியவில்லை. எனில், மாநிலத்தில் கல்விச் சலுகைகள் பள்ளிமாணவர்களுக்கு சரிவரக் கிடைக்கின்றனவா, உகந்த கல்விச்சூழல் நிலவுகின்றதா என்பதில் கவனம் செலுத்த அனைத்துக் கட்சிகளும், கல்வி என்ற விஷயத்தில் அரசியல் ஆதாயம் தேட முயலாமல் முன்வரவேண்டும்.

 

குழந்தையிடம் சுயசார்பு, தன்மதிப்பு, கூட்டுறவுப்பண்பு, தரமான வாழ்வு மதிப்புகள், வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள், நற்சிந்தனைகள், நல்ல பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை  வளர்ப்பதையும்,  குழந்தைகள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்ற கண்ணோட்டத்தை, கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மழலையரை மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வரச் செய்வதையும், பயிலச்செய்வதையும் நோக்கமாகக்கொண்டு பல வருடங்களுக்கு முன்பு இத்தாலியைச் சேர்ந்த மாண்டிசோரி அம்மையாரால் உருவாக்கப்பட்ட இந்தக் கல்வித்திட்டம் காலப்போக்கில் (ஒருவேளை ஆங்கிலத்தில் கிடைத்த காரணத்தாலோ என்னவோ) வசதிபடைத்த குழந்தைகளுக்கு மட்டுமானதாய் மாறிவிட்டது வருந்தத்தக்கது. எனில், இன்று சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் மாண்டிசோரி கல்வித்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மாண்டிசோரி கல்வித்திட்ட முறை யில் பயிலும் மழலையரிடம் வரவேற்கத்தக்க மாற்றம் தெரிவதாகக் கேள்விப்படும்போது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. இந்தக் கல்வித்திட்டம் தமிழகம் முழுமைக்கும், ஏன் இந்தியா முழுவதும்கூட, அடுத்தடுத்த வகுப்பு களுக்கும்கூட விரிவுபடுத்தப்படவேண்டியது ஒரு தொலைநோக்குப் பார்வை யோடு எடுக்கப்பட்ட முடிவாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

 

ஆசிரியர்-மாணவர்-பெற்றோர்-பள்ளிநிர்வாகம்-சமூகஆர்வலர்கள்-அரசுப்பிரதி நிதிகள்-அரசியல்வாதிகள்-துறைசார் வல்லுநர்கள்-மனிதஉரிமைஆர்வலர்கள் என பலதரப்பினரும் ஒருங்கிணைந்து நிலவும் கல்விச்சூழலை மேம்படுத்தத் தேவையான ஆலோசனைகளைத் தரவேண்டும்; நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணியில் ஊடகங்களும் பெரும் பணியாற்ற முடியும். இத்தகைய பல பிரிவினரை உள்ளடக்கிய வல்லுநர் குழுக்கள் உருவாக்கப்பட்டு அதில் அரசியல் தலையீடில்லாமல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; அவற்றின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்படும் ஆலோசனைகளையும், ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கல்விப்பணியின் மகத்துவம் குறித்து அந்தத் துறையில் பணி புரிவோருக்கு தொடர்ந்த இடைவெளியில் ‘விழிப்புணர்வுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும். மழலையருக்கு, மாணாக்கர்களுக்கு நல்ல முறையில் கல்வி கற்பிக்கத் தகுந்த வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு தொடர்புடைய அனைத்துத் தரப்பினரிடமும் பரவலாக்கப்பட வேண்டும்.

 

குழந்தைகளைப் பலவகைகளிலும் மதிப்பழிப்பதும், குச்சி கொண்டு அச்சுறுத் துவதும்,அடக்கியொடுக்குவதும், மனப்பாடம்செய்து ஒப்பிப்பதும் எழுதுவதுமே திறமை என அவர்களுக்கு மூளைச்சலவை செய்வதும், குழந்தைகளின் இயல்பான ஆளுமையைச் சிதைப்பதும் முழுவளர்ச்சி பெற்ற சமுதாயம் உருவாக வழிவகுக்காது என்பதை நாம் உணரவேண்டியது அவசியம். அரசுகள் அளித்துவரும் கட்டாய இலவசக்கல்வி வருங்கால இந்தியாவைச் செதுக்கப்போகும் இன்றைய குழந்தைகளுக்கு முழுப் பயனையும் அளிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் சுயலாபம் கருதாது சமூக அக்கறையோடு அனைத்துத் தரப்பினரும் மேற்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

 

 

 

 

 

2. சுத்தம்-சுகாதாராம் பேணல்:

 

pay and use toiletsஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான UNICEF  சார்பாய் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையொன்றின்படி, சுத்தமான தண்ணீரைப் பருகாத, பயன்படுத்தாத காரணத்தால் உலகில் நாள்தோறும் 1800 சிறுகுழந் தைகள் இறந்துவருவதாகவும், அதில் இந்தியாவில் மட்டும் 500 குழந்தைகள் நாள்தோறும் உயிரிழப்பதாகவும் தெரியவருகிறது. இந்த இறப்புவிகிதத்தில் உலகிலேயே நம் நாட்டிற்கு முதலிடமோ இரண்டாவது இடமோ கிடைத் திருக்கிறது. எத்தனை அவலமான உண்மை இது!

ஓரிரு வாரங்களுக்கு முன் எதேச்சையாக தந்தி தொலைக்காட்சியில் காண நேர்ந்த நிகழ்ச்சியொன்றில் தூய்மையான குடிநீராக நாம் நம்ப வைக்கப்பட்டி ருக்கும் ’கேன் வாட்டர்’ உண்மையில் சுத்தம் குறைவனதே என்றும், இந்த ‘மினரல் வாட்டர்’ விற்பனை செய்யும் நிறுவனங்களில் முறையான உரிமம் பெறாமல் நடத்தப்பட்டுவருபவை ஏறத்தாழ 2000 அளவு இங்கே இருப்ப தாகவும், உரிமம் பெற்று நடத்தப்பட்டுவருபவைகளிலும் பல சரியானபடி சுத்திகரிக்கப் படாத தண்ணீரையே தருகின்றன என்றும், வீடுகளில் விநியோ கிக்கப்படும் ‘ப்ளாஸ்டிக்’கினால் ஆன தண்ணீர்குடுவையை உண்மை யில் இரண்டு தடவைக்கு மேல் பயனபடுத்தலாகாது என்றும், ஏனெனில், அவ்வாறு பயன் படுத்தினால் குடுவையின் ப்ளாஸ்டிக் நீரில் சேர்ந்துவிடும் என்றும், ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் குடுவைகளைப் பொறுத்தவரை மேற்படி மேற்படி கவனம் செலுத்தப் படுகிறதா என்பது மிகவும் சந்தேகமே என்றும் ஆதாரபூர்வமான தரவுகளுடன் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு.தேசிகன் எடுத்துரைத்தது இங்கே நினைவுகூரத் தக்கது.

மேலும், தண்ணீர் வழியாகப் பரவும் நோய்கள் இந்தியாவில் மிகவும் அதிகம் என்றும் தெரியவந்திருக்கிறது. கைகளைக் கழுவும் பழக்கம் இல்லாமையும், கழிப்பறைகள் சுத்தமாக இல்லாமையும் மக்களின் உடல்நலனைப் பலவகை யிலும் பாதித்துவருகின்றன என்றும் ஆய்வுபூர்வமான ஆய்வறிக்கை கள் தெரிவிக்கின்றன. வீதியில் மலங்கழித்தல், சிறுநீர் கழித்தல் சுகாதாரக் கேட்டிற்கு முக்கியக்காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், வீடுகளிலும் சரி, வீதிகளிலும் சரி, பள்ளிக்கூடங்கள். வணிக வளா கங்கள், ரயில்நிலையங்கள், ஏன், மருத்துவமனைகளிலும் கூட கழிப்பறை வசதி என்பது மிகவும் கடைசிபட்சமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கும் நிலையைத்தான் நம்மைச்சுற்றிப் பரவலாகக் காண முடிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சார்ந்திருக்கும் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்’ உறுப்பினர்களோடு சேர்ந்து தில்லியில் நடந்த ஒரு அகில இந்திய மாநாட்டிற்குச் சென்றபோதும் திரும்பிவரும் போதும் ரயிலிலும் ரயில் நிலையங்களிலும் இந்த அவலநிலையை சுத்தம்-சுகாதாரம் பேணல் குறித்த உச்சபட்ச அலட்சியத்தைக் கண்கூடாகக் காண நேர்ந்தது;அனுபவிக்க நேர்ந்தது. சமீபத்தில் ரயில் பயணத்தின் போது கழிப்பறை சுத்தமாக இல்லாததால் பயணத்தில் அனுபவிக்கவேண்டியிருந்த  நரகவேதனையை ஒரு வாசகர் டெக்கான் க்ரானிக்கிள் செய்தித்தாளில் பதிவு செய்திருந்தார். பதிவுசெய்வதும் புகார்செய்வதும் ஒருசிலரே. பெரும்பாலோர் தினசரி வாழ்வின் நெரிசலில் இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு போவதுதான் நடக்கிறது.

வீதிகளில் எங்காவது அங்கொன்றும், இங்கொன்றுமாக அமைந்திருக்கும் ‘இலவசக் கழிப்பறை’களில் உள்ளே நுழையமுடியாத அளவு துர்வாடையும் அசுத்தங்களும் நிரம்பியிருக்கும். சிறுபிள்ளைகள் மட்டுமல்லாமல் வளர்ந்த ஆண்களும் சாலையோரம் சர்வசாதாரணமாக சிறுநீர் கழித்துக்கொண்டிருப் பார்கள். பெண்களுக்குத்தான் திண்டாட்டம். ‘கட்டணக் கழிப்பறைகள்’ அமைப் பது நியாயமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அப்படி அமைக்கப்பட்டிருப் பவையும் போதுமான அளவு சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருகின் றனவா என்ற கேள்வியும் தேவையாகிறது. இந்தத் தருணத்தில் சென்னை திருவல் லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் தொண்டுநிறுவனம் ஒன்றால் பராமரிக் கப்பட்டுவரும் ‘இலவசக் கழிப்பறை வசதி’ எத்தனை அருமையாக, தூய்மையாகப் பராமரிக்கப்பட்டுவருகிறது என்பதையும் நினைத்துப்பார்க்கா மல் இருக்க முடியவில்லை.

மக்கள் நல அரசுகள் ஆர்வமுள்ள தொண்டுநிறுவனங்களின் பணியையும், பங்கேற்பையும் பயன்படுத்திக்கொண்டு பல நோய்களின் பிடியிலிருந்து மக்களைக் காக்க வல்ல ‘சுகாதாரமான தண்ணீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் மக்களுக்குக் கிடைக்கச் செய்யும் முயற்சிகளை முழு முனைப்பாக மேற்கொள்ள வேண்டியது இன்றைய இன்றியமையாத் தேவை.

Series Navigationஆண்டாண்டு தோறும் பருவ காலத்தில் அமெரிக்க மாநிலங்களைத் தாக்கிப் பேரழிவு செய்யும் அசுரச் சூறாவளிகள் [Tornadoes]நாள்குறிப்பு
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *