This entry is part 5 of 40 in the series 26 மே 2013

 

 

அந்த வீட்டைக் கடந்து

போக முடியவில்லை

மாமரத்தைப் பற்றி

விசாரிக்க யேணும்

படியேறி விடுகிறேன்

மைனாக்களுக்கும்

அணில்களுக்கும்

அடைக்கலம் தந்த

விருட்சம்

வேரோடு விழுந்து

கிடக்கிறது

கொல்லையில் மாமரம்

இருக்குல்ல

அந்த வீடுதான் என்று

வீட்டுக்கு விலாசம்

தந்த மரம்

தச்சன் கைகளுக்கா போவது

ரேஷன் அட்டையில்

பெயரில்லை மற்றபடி

அம்மரம் அந்த வீட்டின்

உறுப்பினர் தான்

பச்சை இலைகள்

ஓரிரு நாளில் சருகாகிவிடும்

காய்ந்த குச்சிகள்

அடுப்பெரிக்க உபயோகப்படும்

மரம் வீட்டின்

உத்தரமாகிவிடும் என்றாலும்

காணத்தான் நேருகிறது

மெரீனாவில்

சுண்டல் மடிக்கப் பயன்படும்

கவிதை தொகுப்புகளையும்

கோயிலில்

விபூதி மடிக்கப் பயன்படும்

கையெழுத்துப் பிரதியையும்.

 

 

 

 

 

 

ப.மதியழகன்

Series Navigationமக்கள் நல வாழ்வுக்கான தேவையும் அளிப்பும்பீதி