பெய்யெனப் பெய்யும் மழை – வெண்பாக்கள் 

This entry is part 7 of 13 in the series 14 பெப்ருவரி 2021

 

நாகேந்திர பாரதி 

————————————————————————–

( நவீன விருட்சம் நிகழ்வில் ‘பெய்யெனப் பெய்யும் மழை ‘ என்ற ஈற்றடி கொடுக்கப்பட்டு எழுதி வாசித்த வெண்பாக்கள் )

 

குறள் வெண்பா 

—————————

தொய்விலா  எண்ணம் துணையெனக் கொண்டிடில் 

பெய்யெனப் பெய்யும் மழை 

 

சிந்தியல் வெண்பா 

——————————–

துய்ப்பதும் தூர்ப்பதும் ஏய்ப்பதும் நோக்கமாய் 

எய்வது என்றே இருந்திடில் எப்படிப் 

பெய்யெனப் பெய்யும் மழை 

 

இன்னிசை வெண்பா 

——————————

எய்திடும் அம்பு இழுத்திடும் வில்லிடம் 

செய்தியைக் கேட்டுச் ‘சிடுக்’கெனப் பாய்தல்போல் 

மெய்யதிர் மின்னல் இடியிடம் சொல்லிட 

பெய்யெனப்   பெய்யும் மழை  

 

ஒரு விகற்ப நேரிசை வெண்பா 

———————————————————-

பொய்யெனப் போனதும் மெய்யென மாறலாம் 

மெய்யென மீண்டதும் மாறிடலாம் – செய்வதில் 

மெய்யதன்  மேன்மை மிளிர்ந்திடும் காலத்தில் 

பெய்யெனப் பெய்யும் மழை 

 

இரு விகற்ப நேரிசை வெண்பா 

——————————————————

வலியும் வருத்தமும் வாட்டிடும் கோலம் 

அழியும் நிமிடத்தின் ஆழம் -கழிகின்ற 

மெய்யதன் உண்மை மினுக்கிடும்   கண்ணீரில் 

பெய்யெனப் பெய்யும் மழை 

 

பஃறொடை வெண்பா 

————————————  

கொய்த மலருக்குக் கூந்தல் செடியாக 

செய்த நிலவொன்று சேர்ந்த முகமாக 

பொய்கைத் தகதகப்பைப்  பூண்ட உடலாக 

செய்கைச் சிறப்பெல்லாம்  செந்தமிழ்ச் சொல்லாக  

நெய்யாகத் தேனாக நெஞ்சாக நின்றவளே 

பொய்யாகிப் போனதனால் பூத்திட்ட கண்ணீரும் 

பெய்யெனப் பெய்யும் மழை 

 

——————————————-நாகேந்திர பாரதி 

 

Series Navigationஉலக நடை மாறும் ஒரு கவிதை எழுத வேண்டும் !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *