This entry is part 5 of 13 in the series 12 மார்ச் 2023

சொற்கீரன்

கண்பொரி கவலைய வெஞ்சுர நீளிடை

நில்லா செலவின் நீடுபயில் ஆறு

கடந்து உழலும் கதழ்பரி செல்வ!

கூர் உளி குயின்ற பலகை நெடுங்கல்

வரி ஊர்பு நவின்ற வன்படு செருவின்

குருதி கொடிய நெளிகால் ஓடி

காட்சிகள் காட்டும் முரசுகள் முரலும்.

இறந்தவை இறந்தபோல் நடந்தவை நடந்தபோல்

நளி இரு துன்வெளி அழல் ஊழ்க்காற்றின்

இடைபோழ்ந்து இயலிய காட்டும் ஆங்கண்.

மள்ளற் களியர் மணிநிறக் காட்டில்

மரைகொல் அம்பின் வெறிஅயர் கூட்டும்.

ஆறுபடுவோர் உயிரும் பறிக்கும்

ஆறலை  வில்லியர் வெரூஉத் திரிதர‌

புறப்பொருள் தேடி அஞ்சல் தவிர்த்தாய்.

அகப்பொருள் ஆர்த்த நின் ஆயிழை ஒருபால்

நெறி இழை சூடி நெய்க்குரல் நீவி

நின் மீள்வழி நோக்கும். நல்லாள் தழீஇய‌

நெடுவிழி இமைப்பில் சிமைய வில் வாங்கி

வீழ்ந்து பட்டன்ன சிறைப்புள் போலும்

நனந்தலை யாத்து அஞ்சினை தவறி

யாது உற்றனை அடு துயர் இவணே.

Series Navigationநனவை தின்ற கனவு.தேடல்