பல்லியை நம்பி

This entry is part 13 of 19 in the series 25 ஜூன் 2023

 

ஆர் வத்ஸலா

பல்லியை நம்பி

வாழ்கிறான் அவன்

ஏதோ ஒரு நப்பாசையில்

முன்பு அப்படி இல்லை

காத்துக் கொண்டிருக்கிறான்

என்றாவது

அது தன் தலையில் விழும் 

என்று

உச்சந்தலையில் விழுவது அசாத்தியம்

ஆகவே இரண்டாம் பட்சமாக

நெற்றியில் விழலாம்

எந்த பாகமும் சரி

சாஸ்திரம் எல்லாவற்றிலும்

கொஞ்சம் முன்பின் தானே

பலிக்கிறது

மனைவி வருகிறாள் தினமொரு முறை

கண்ணீர் வடிக்க

மகன் அவ்வப்போது ஆயாசத்துடன்

அவனுக்கு பணி பளுவாம்

மகளுக்கு மனசு தாங்க முடியாததால்

மருமகன் தடுக்கிறானாம்

பேசிக் கொண்டார்கள்

கால்கள் நீட்டியபடி

ஒரே நிலையில்

அவன் விழுந்த நாள் முதல்

வாய் இறந்து விட்டது அன்றே

காது துல்யம் 

ஆனால்

அது அவர்களுக்குத் தெரியாது 

இப்போதெல்லாம் அவனுக்குப் பிடித்த பாட்டு 

போடுவதை நிறுத்தி விட்டார்கள்

கண் திறக்க முடிந்தாலும் 

பார்வை 

நிலை குத்தி இருப்பதால்

பார்வையில்லை என

நினைக்கிறார்கள் 

நாற்றமெடுக்கிறதென

மனைவி கத்திய பிறகு 

ஒழுங்காக உடம்பு துடைத்து விடுகிறாள் செவிலி 

அடுத்த ஒரு மாதத்திற்கு 

மூச்சுக் குழாயையும்

உணவூசிக் குழாயையும்

பிடுங்கியெறிய

துடிக்கின்றன

அவனது செத்த கைகள் 

மூளை உயிருடன் –

ஆதலால் பிடுங்க

அவர்களுக்கு அனுமதி இல்லை

வாழ்கிறான் அவன் 

மல்லாந்துப் படுத்து

பல்லியை நம்பி

முடமாய் மூடமாய்

Series Navigationமுதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 1வலி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *