வளவ. துரையன்
![](https://puthu.thinnai.com/wp-content/uploads/2023/12/e3b548d6-0864-4f74-b707-a9759f6406f0.jpeg)
அந்த முச்சந்திக்கு
வேறு வேலையில்லை.
எல்லாரையும்
முறைத்துப் பார்க்கிறது.
யாராவது அறுந்ததை
எடுத்து வருவார்களா என
எல்லாக்கால்களையும்
பார்ப்பவரை
போட்ட பஜ்ஜி வடை
போணியாகி விற்றுவிடாதா
என்றேங்கும்
பொக்கைவாய்க் கிழவியை
ஒற்றை மாட்டுவண்டியை
இழுக்க முடியாமல்
அடிகள் வாங்கி
இழுக்கும் காளையை
அம்மாவிடம் குச்சி ஐஸ் கேட்டு
அடம்பிடிக்கும்
அறியாச்சிறுவனை
அனைத்தையும்
பார்த்துப் பார்த்து
அதுவும் வாழ்வினைக்
கற்றுக் கொள்கிறது.