This entry is part 1 of 2 in the series 10 மார்ச் 2024

சசிகலா விஸ்வநாதன்

வாதத்திற்கு எதிர்வாதம் செய்யலாம்;
பயனுண்டு.

விதண்டா வாதத்திற்கு ஒரு முடிவுண்டா?

அது ஒரு நஞ்சுச் சுனை சுழல்.

நாள் தோறும் நான்   விவாதிக்கப்பட்டும்,
தண்டிக்கப்பட்டும்,
இருந்தும்,
உன் செயலோ, வார்த்தையோ
என்னை தகிக்கவில்லை
அறிவாயா ,நீர்?

சுவற்றில்  பட்டு தெறிக்கும் பந்து போல்…

பொங்கும் பால் மேல் தெளி நீர் என…
மறையும் மாயம்…

அவற்றை  நான் நன்றாக புரிந்தே
புறங்கையால் தள்ளிவிடுகிறேன்!

உள் மனம் கசிந்து
ஊசி முனையால்
குத்தும் வலி; எனக்கு
என  நினைத்து நீ மகிழலாம்.

தன் போக்கில் மேயும் மான்களிடம் புகைச்சல்  ஏன்?

நான் என் கொம்புகளை உயர்த்தாத வரை;

குரல் உயர்த்திப் பேசாதவரை ;

நீர் கால் அகட்டி நிற்கலாம்.

புறக்கணிப்பது ஒன்றே விதண்டா வாதத்திற்கு முடிவு.
இதுவே என் துணிபு.

Series Navigationயாத்திரை