உழைத்துச்
செத்த மாட்டின்
தோலையும் உரித்து
விற்றுவிடுவான் மனிதன்
***
உலர்ந்து
உதிர்ந்த இலை
ஆற்றோடு நகர்ந்து
ஒரு கட்டெறும்பைக்
கரைசேர்க்கிறது
***
எந்தச் செயற்கை
நுண்ணறிவுக்கும் எட்டாது
ஒரு சிலந்தியின்
தொழில்நுட்பம்
***
எல்லாப் பறவைகளும்
எங்கு பறந்தாலும்
இரவில் அடைவது
சொந்தக் கிளையில்தான்
***
ஒரு சேதியைச்
சொல்லத்தான்
புயலாக வருகிறது
தென்றல்
***
விதையை ஊன்றவும்
களையைப் பிடுங்கவும்
தெரிந்தவனே
உண்மை விவசாயி
***
புழுவை வெறுக்காதீர்
அது நாளைய
வண்ணத்துப் பூச்சி
***
பறக்கத் தெரியும்வரை
பசியாற்றினேன் என்று
எந்தக் காகமும் தன்
குஞ்சுக்குச் சொல்லாது
***
பொன்னின் வலிமைக்கு
கொஞ்சம் செம்பு தேவை
***
சத்தான பூட்டுகளை
தப்பான சாவிகளால்
திறக்கவே முடியாது
***
எதற்கும் உண்டு
மாற்று ஏற்பாடு
மரணம் தவிர
***
அறுபடுவோம்
அடுத்தென்று
அறிந்திருந்தும் ஆடு
அனுபவித்து உண்கிறது
மாவிலையை
***
உயிரை வருடும்
இனிப்புகள் ஒருநாள்
உயிரைப் பறிக்கும்
***
வானமே வீடாய்
அந்தப் பறவை
வேட்டைக்காரன்
பார்க்கும்வரை
***
தெருச்சண்டையில்
எந்த நாயும்
வென்றதில்லை
இன்றுவரை
***
சூட்டிலேயே கிடந்துதான்
சுக ஒளி தருகிறான்
சந்திரன்
***
கொதிக்கும்
எண்ணெயில்
குளிர்நீர்
ஊற்றாதீர்
அமீதாம்மாள்