This entry is part 17 of 17 in the series 27 செப்டம்பர் 2020

எஸ் பி பி

மூன்றெழுத்தா?

முத்தமிழா?

ஆயிரம் நிலாக்களை

அழைத்து வந்தாய்

அத்தனைக்கும் எப்படி

அமாவாசை?

பொத்தி வச்ச

மல்லிகை மொட்டு

கருகியது நியாயமோ?

என் மின்னல் எங்கே?

தேடுகிறது இடி

என் வானவில் எங்கே?

தேடுகிறது தூவானம்

ஒரு தாலாட்டு நின்றது

உலகெங்கும் அழுகின்றன

குழந்தைகள்

குயில்களுக்கு

குரல் தந்துவிட்டு

துயில் கொண்டது

நியாயமோ?

ஒரு கடல் எப்படி

கண்ணாடிக்குள்?

உன் நாவில் மட்டும் எப்படி

நவரசங்களின் நடனம்?

நிசப்தமாய் நந்தவனம்

காதல் பறவைகள்

ஊமையாகிவிட்டனவா?

ஏழு சுரங்களும்

உன்னைத் தேடுகின்றன

எழுந்துவா பாலா

அமீதாம்மாள்

Series Navigationஒரு கதை ஒரு கருத்து…. அசோகமித்திரனின் ‘இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை’