அகஸ்தியர்-எனது பதிவுகள்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 29 of 48 in the series 11 டிசம்பர் 2011

முல்லை அமுதன்

மனித நேயம் மிக்க ஒருவரை மீண்டும் நாம் நினைக்க வைத்துள்ளது.வர்க்கம் சார்ந்து,சாதிய முறைமைகளை எதிர்த்த படி தனது கற்பனைத் திறத்தால் நம்மையெல்லாம் ஆட்கொண்டவர் தான் அகஸ்தியர்.29/08/1926இல் சவரிமுத்து-அன்னம்மா தம்பதியர்க்கு மகனாக ஆனைக்கோட்டையில் பிறந்தவர்.
அந்தக் காலத்து எஸ்.எஸ்.சி சாதாரண தரம் வரை கல்வி கற்றிருந்தாலும் அவர் வளர்த்துக்கொண்ட தமிழ் அறிவு அவரை நல்லதொரு படைப்பாளியாக நமக்குத் தந்திருக்கிறது.தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஆற்றல் வாய்ந்தவராகவே தன்னை வளர்த்துக் கொண்டார்.
எழுத்தாற்றலால் தன்னை வளர்த்துக்கொண்டாலும் பலராலும் நேசிக்கப்பட்ட அதே வேளை சிலரால் இருட்டடிப்புக்குள்ளாக்கவும் பட்டதனால் இவரின் எழுத்துக்களை கண்டும் காணாது விட்டதும் பலரின் பார்வைக்குத் தெரியாமல் போய்விட்டார்.
இவர் தன் தெரிவாக கம்யூனிஸத்தை தேர்ந்தெடுத்ததும் படைப்புகள் பலரிடம் இவர் படைப்புகள் சென்று சேர முடியாது போனது.ஆனாலும் பார்வைக்குக் கிடைத்தவைகள் காத்திரமானதான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.
புதுமைப்பித்தன்,லெனின்,காண்டேகர்,மாஜினி,மகாகவி.பாரதியார்,பாரதிதாசன்,வள்ளுவன்,டால்ஸ்டாய்,ஸ்டாலின்,மாவோ,மார்க்ஸ் போன்று பலரின் எழுத்துக்களை விரும்பிப் படித்தார்.அதன் விளைவாக 1947 இல் தனது முதற்கதையை சுதந்திரனில் எழுதினார்.இசை மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நாட்டுக்கூத்துக் கலைஞர்களையும் மதிக்கின்ற பக்குவம் இவருக்கிருந்ததினால் சக கலைஞர்களை,படைப்பாளர்களை மதிக்கின்ற உணர்வு இவருக்குள்ளும் வளர்ந்து வந்துள்ளதை உணரலாம்.அவ்வப்போது கவிதைகள் எழுதினாலும் சிறுகதை,கட்டுரை,நாவல் எழுதுவதில் தன் திறமையை வெளிப்படுத்தினார்.பிரேத விசாரணை,பங்காளிச் செய்தி போன்ற சிறுகதைகளை சுதந்திரன் வெளியிட்டிருந்தாலும் கண்ணதாசன்(இந்தியா)தினகரன்,செய்தி,ஈழநாடு,ஈழகேசரி,அமிர்தகங்கை,ஈழநாடு(பாரிஸ்),தமிழன்,வீரகேசரி,பாரிஸ்முரசு போன்ற பத்திரிகைகள்/சஞ்சிகைகள் இவரின் படைப்புகளை வெளியிட்டு இருந்தன.
சத்திய ஆவேசம் கொண்டவர் என் அடையாளப் படுத்தப்பட்டவர்.அதனால் விமர்சனங்களுக்குட்பட்டவர்.வர்க்கம் சார்ந்து சிந்தித்தவர்.சாதிய முறைமைகளை எதிர்த்தவர்.முற்போக்கு சிந்தனைகளுடன் வாழ்நாளில் தன்னை அர்ப்பணித்தார்.முதன் முதலில் எழுத்தில் உணர்வூற்றுச் சித்திரத்தினை அறிமுகப் படுத்தியவர்.மொழி மீதான காதல் அவரின் எழுத்தில் காணக்கூடியதாக இருக்கிறது.கொழும்பு,தியத்தலாவை,திருகோணமலை,கண்டி,களுத்துறை,அம்பலாந்தோட்டை,அளுத்கம போன்ற இடங்களில் எல்லாம் தீயணைக்கும் படைப்பிரிவு,பண்டகசாலை பொறுப்பாளர்,பொலிஸ் அதிகாரி,இராணுவ அலுவலக உத்தியோகத்தர் என பல பதவிகளை வகித்திருந்தாலும் எழுத்தாளராகவே பலருக்குத் தெரிய வந்திருக்கிறார்.
ஈழநாடு நடாத்திய நாவல் போட்டியில் இவரது ‘எரிகோளம்’ நாவல் பரிசு பெற்றது.தொடராக வெளிவந்து பலரை வியக்க வைத்தது.அதுவே பின்னாளில் ‘எரி நெருப்பில் இடை பாதை இல்லை’ எனும் பெயரில் நூலாக வந்து பலரையும் சென்றடைந்தது குறிபிடத் தக்கது.
அது போலவே ‘மண்ணில் தெரியுதொரு தோற்றம்’ நாவல்1978இற்குரிய இலங்கை சாகித்திய மண்டல பரிசினைப் பெற்றதை ஈழத்து இலக்கிய உலகில் இவரின் இருப்பை மேலும் உறுதிப் படுத்தியது. நாடுக்கூத்துக் கலைஞர் மீதான அபிமானமே நமது கலைஞர் பூந்தான் ஜோசெப் அவர்களின் வாழ்க்கை வரலாறை எழுதி 1981இல் வெளியிட்டார்.எழுத்தில் ஒரு லாவகம் இருந்தை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.
கார்த்திகேயன்,வைத்திலிங்கம்,பீட்டர் கெனமன்,சண்முகதாசன்,கைலாசபதி,சிவத்தம்பி,தில்லைநாதன் போன்ற மார்க்ஸீச சிந்தனையாளர்களை மிகவும் நேசித்தார்.நெருங்கிய தொடர்புகளைப் பேணியும் வந்துள்ளார்.இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்புகளை கொண்டிருந்தார். மல்லிகை,தாமரை,மேகம் போன்ற சிறுசஞ்சிகைகளை விரும்பி வாசித்தார்.தினகரன் மீதான அவரின் அபிமானமோ என்னவோ அவரின் ஞாபகார்த்த சிறுகதைகளுக்கான போட்டிகளை அவரின் குடும்பத்தார் நடாத்தினார்களோ?
ஆலடியம்மான்,காலன்,தீட்சண்யன்,எஸ்.ஏ,அருளம்பனார்,குறுமுனிவர்,வித்தக பண்டிதர்,யாழ்ப்பாணன்,ஈழத்துச் செல்வன்,சத்தியமூர்த்தி,நவமணி,நவஜோதி,ஜெகா,ஜீவா,ஜெகனி,நாவலன்,வசந்தன்,லெனினிஸ்ட்,கலைதாசன்,புதுமைப்பிரியன், போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார்
1983 இல் ஏற்பட்ட இனக்கலவரம் இவரின் உடைமைகளை-நூல்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.படைப்பாளிக்கு பிற அழிவுகளை விட நூல்களின் இழப்பின் வலி அதிகம் தான்.
இவரின் நூல்களாக:சிறுகதைள்-இலவு காத்த கிளிகள்,மேய்ப்பர்கள்,அகஸ்தியர் கதைகள்,எவளுக்கும் தாயாக,மானிட தரிசனங்கள்,லெனின் பாதச் சுவடுகள் என்பனவும்,குறு நாவல்களாக-மகாகனம் பொருந்திய,நரகத்திலிருந்து..,இருளினுள்ளே,கோபுரங்கள் சரிகின்றன,ஒரு குப்பி விளக்கு எரிகின்றது போன்றனவும் வெளிவந்துள்ளன.தொடராக வந்திருந்தாலும் நாவல்கள் நூலாக வந்தபின் விமர்சனங்கள் பல கிடைத்து ஊக்கத்தை தந்தன எனலாம்.அந்த வகையில் திருமணத்திற்காக ஒரு பெண் காத்திருக்கிறாள்,மண்ணில் தெரியுதொரு தோற்றம்,எரி நெருப்பில் இடைபாதை இல்லை என்பவற்றைக் குறிப்பிடலாம். அவரின் போரும் சமாதானமும் நாவல் அச்சில் உள்ளதாக அறிகிறோம். இன்னும் உதிரிகளாக எழுதிய ஆக்கங்கள் தொகுக்கப் பட வேண்டியுள்ளன..
மெல்லியதாக காதல் உணர்வு,குடும்ப உறவு இவற்றூடாவே வர்க்க-சாதி இவற்றுக்கெதிரான போராட்டம் பற்றி தன் கதைகளூடு நகர்த்திச் சென்றார்.
வில்லூன்றி சாதிக் கலவரம் இவர் மனதை பாதித்ததின் விளைவே வில்லூன்றி மயானம் படைப்பு உருவானது.அதுவே எரிமலையாகவும்,எரிகோளமாகவும் விரிவடைந்தது என்பர்.பின்னர் எரி நெருப்பில் இடைபாதை இல்லை என நூலாகியது.
கட்டுரைகளாக தன் எண்ண வெளிப்பாடுகளை எழுதியது சிறப்பாகவெ பார்க்கமுடிகிறது.அவற்றுள் நூலாக வெளி வந்த ஒரு நூற்றாண்டின் இரு தமிழ் நாவல்கள்,கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும்,மரண சாசனம்-கருத்தியல் சார்ந்த பிரகடன நூல்,அகஸ்தியர் பதிவுகள்,அர்த்தமுள்ள வாழ்க்கை(அச்சில்)எனது இலக்கிய வாழ்க்கை(அச்சில்) சிறப்பான பக்கங்களை நமக்குத் தொடுக் காட்டுகின்றன.
நாடகங்கள்,நாட்டுக்கூத்து மீதான இவரது ஈடுபாடும்,நாடகம் சார்ந்த கலைஞர்களின் வாழ்க்கையின் தேடலுமே நவீன பரமார்த்த குருவும் அவர்தம் சீடர்களும்,அலைகளின் குமுறல்,நாட்டுக்கூத்துக் கலாநிதி பூந்தான் ஜோசேப்பு கலை உலக வாழ்க்கை வரலாறு நுல்களாக தந்திருக்கிறதும் பாராட்டத் தக்கது.
நான் அறிந்தவரையில் உணர்வூற்றுச் சித்திர நூலாக நீ எனும் நூலைத் தந்ததன் மூலம் மேலும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.இயக்க-இயல் தத்துவ நூலென பலராலும் விதந்துரைக்கப்பட்டார்.
கலகக்காரர் என்று சிலரால் அடையாளப் படுத்தினாலும் அவருக்குள் இருந்த நேயத்தை அவருடன் பழகியவர்கள் குறிப்பிடத் தவறியதில்லை.
எங்கோ இருக்கும் ருஷிய,சீன கம்யூனிஸ தத்துவங்களை உள்வாங்கிக் கொண்டவர்கள் நமது இன விடுதலைப் போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை என்பது என் கருத்து.அவர்களின் சூழல் சார்ந்த போராட்டங்கள் அப்படி இருந்ததோ?
டொமினிக் ஜீவா, அ.ந.கந்தசாமி,டானியல்,டானியல் அன்டனி என்று பலரை குறிப்பிடலாம்.
பிரான்ஸிற்கு புலம் பெயர்ந்த பின்னும் நிறைய எழுதினார்.நோய் வாய்ப்பட்டு 08/12/1995இல் மரணிக்கும் வரை இலக்கியம் பற்றியே பேசினார்-எழுதினார்.
இலக்கியம் அவரின் சொத்து.அவர் நம் இலக்கியத்தின் சொத்து.ஈழத்து இலக்கிய பற்றி எழுதும் போது அகத்தியரை விட்டு விட்டு எழுதி விட முடியாது.
நாமும் இலக்கியம் மட்டுமன்றி இலக்கியர்களையும் நினைவு கூர மறத்தல் ஆகாது.
ஒரு இலக்கிய இயக்கமாக வாழ்ந்த அகஸ்தியர் நம் ஆன்மாவிலும் வாழ்வார்.
05/12/2011

Series Navigationகாந்தி சிலைஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 1
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *