ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 2

This entry is part 23 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா 

தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

“நமது தீமைகளில் மிகவும் தீவிரமானது, குற்றங்களில் மிகக் கொடியது வறுமை.  நமது முதற் பணி ஏழ்மையை இல்லாமல் செய்வதே.  அதற்காக நாம் எதையும் தியாகம் செய்யகத் தயாராக வேண்டும்.”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara)

“எல்லா ஆடவரும் மாதரின் சொத்துக்களைத்தான் திருமணம் செய்து கொள்கிறார்.  அதுவே திருமணமான பெண்டிரின் உண்மையான சொத்து என்று மெய்யாக விளக்கப் படுவது.”

ஆஸ்கர் வைல்டு (Oscar Wilde in A Woman of No Importance )

 

மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :

இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது.  அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது.  அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்ஃபஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை.  மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார்.  மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.

வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா.  ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா !  ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் !  போருக்கு  ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள்.  ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள்.  ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை !  அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக்குள்ளானது என்று தள்ளி விடுகிறார்.  எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிட மிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார்.  நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.

மிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணப் பண்பியல் புதல்வி (An Idealistic Daughter).  சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள்.  அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்·பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர்.  அடால்ஃபஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை,  சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.

 

சிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது.  தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன,  பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார்.  ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

**********************

நாடக உறுப்பினர்:

1.  மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷாஃப்ட் (Major Ms. Barbara Undershaft).  ஆன்ரூவின் மூத்த மகள்.

2.  ஆன்ரூ அண்டர்ஷாஃப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.

3.  மேடம் பிரிட்னி அண்டர்ஷாஃப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)

4.  ஸ்டீ·பன் அண்டர்ஷா·ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.

5.  மிஸ். சாரா அண்டர்ஷா·ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.

6.  அடால்ஃபஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்

7.  சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.

8.  பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45

9.  ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந்து போகும் சாவடி வாசிகள்.

மற்றும் பலர்.

************************

 

ஏழ்மைக் காப்பணிச் சேவகி

(மேஜர் பார்பரா)

(இரண்டாம் அங்கம்)

அங்கம் -2 பாகம் – 2

இடம் :  இங்கிலாந்து லண்டன் நகரம்.  வெஸ்ட் ஹாம் ஏழ்மைக் காப்பணிச் சாவடி (West Ham Shelter of the Salvation Army)

நிகழும் ஆண்டு : ஜனவரி 1906

நேரம் : காலைப் பொழுது.

அரங்க அமைப்பு :  ஏழ்மை மனிதரை ஜனவரிக் கடுங்குளிர் நடுக்கத்தில் பாடுபடுத்தும் ஒரு பழைய சத்திரக் கூடம் சல்வேசன் ஆர்மிச் சாவடி.  புதிதாக வெள்ளை அடிக்கப் பட்டுள்ளது.  கறைபடிந்த மேஜை, நாற்காலிகள், பெஞ்சுகள் அங்கு மிங்கும் தெரிகின்றன. அறைக் கதவுகள் ஜன்னல்கள் திறந்துள்ளன.  முன்னறையில் ஓர் ஆணும், பெண்ணும் நடமாடி வருகிறார்.  மேஜையில் சாவடி வாசிகள் சாப்பிட்ட தட்டுக்களை மூதாட்டி ஒருத்தி எடுத்துக் கொண்டிருக் கிறாள்.  உலவும் ஆடவன் வேலை இல்லாத வாலிபன்.  வாயாடி மனிதன்.  பெண் நடுத்தர வயது மூதாட்டி.  அவரது உடையிலும், நடையிலும் ஏழ்மை தெரிகிறது.  கடுங்குளிர் நடுக்கத்தைப் பொருட் படுத்தாமல் நாற்காலில் சிலர் அமர்ந்திருக்கிறார்.  காலை உண்டி சாப்பிட்டு அவர் இருவரும் தெம்புடன் இருக்கிறார்.  ஆடவன் குவளையில் உள்ள ஆறிப்போன சூப்பைச் சுவைத்துக் கொண்டிருக்கிறான்.  மேஜர் பார்பரா தன் சகபாடிகள் பலரோடு வாத்தியத் தம்பட்டம் கொட்ட அணிவகுத்துக் கொடி உயர்த்தி நடந்து வருகிறாள்.  மூதாட்டியும், வாலிபனும் வாதாடிக் கொண்டுள்ள போது ஜென்னி ஹில்லும், பீட்டர் ஸெர்லியும் நுழைகிறார்.

 

பிரைஸ்:  அது உண்மையே.  சல்வேசன் ஆர்மி நேர்மையாக நடந்து கொண்டால் அதற்கு மனிதர் ஆதரவு அளிப்பாரா ?  மேஜர் பார்பராவுக்குத் தெரியாமல் சல்வேசன் சாவடிக்குப் பின்னால் என்ன என்னமோ நடக்குது !  எனக்குத் தெரியுது !  உனக்குத் தெரியுது !  ஆனால் மேஜர் பார்பராவுக்குத் தெரிவதில்லை !  சல்வேசன் சாவடி சூழ்வெளிக் காற்றைச் சுத்தம் செய்ய முயலுது.  நம்மைப் போன்ற எளிவரை எல்லாம் சமூகம் திருடிக் கொள்ள வசதி செய்கிறது.  எனக்கு இந்த விளையாட்டை ஆடத் தெரியும் இப்போது மற்றவரைப் போல்.  ஒரு நாள் மின்னல் அடித்து யாரோ ஒருவன் மடிந்து விட்டால் நான் எங்கே நீடித்த சொர்க்கத்தை அனுபவிக்கப் போகிறேன் என்று ஒருவன் கேட்கலாம்.

(அப்போது 18 வயது வாலிப அழகி ஜென்னி ஹில்லும், 46 வயது வறியவர் பீட்டர் ஸெர்லியும் நுழைகிறார்.  அழகி ஜென்னி பசியில் வருந்தும் நடுத்தர வயது பீட்டரைச் சாவடிக்குள் ஆதரவாக இழுத்துக் கொண்டு வருகிறாள்.)

ஜென்னி ஹில்:  வாருங்கள் உள்ளே.  சூடான உண்டி கிடைக்கும்.  உட்காருங்கள் இங்கே.  நான் போய் உணவு கொண்டு வருகிறேன்.  வயிறு நிறைந்தால் எல்லாக் களைப்பும், வலுவின்மையும் போய்விடும்.

பிரைஸ்: (எழுந்து சென்று பீட்டரைப் பிடித்து)  ஐயோ பாவம் !  எத்தனை நாள் பட்டினியோ !  முகம் சுளிக்காதீர் முதியவரே !  நாமெல்லாம் இங்கே சகோதரர் !  பசி பட்டினியில் மட்டுமல்ல !  பசி அடங்க உணவு கிடைப்பதிலும்தான் !  இங்கே குளிரில் நாம் நடுங்கினாலும் வேளா வேளைக்கு உணவு கிடைக்குது !  உண்டு, உறங்கி, விழித்தெழுவே இங்குள்ள மூன்று வேலைகள்.  அந்த வேலைகளுக்கு ஊதியம் இல்லை !  ஜென்னி !  உடனே போய் தட்டில் உணவு கொண்டுவா !  போ !  இப்போது உனக்கு ரொட்டி, காபி கிடைக்கும் ! அது போதாதா ?  உன் கோரப் பசி அடங்கும் !

 

பீட்டர் ஸெர்லி:  நான் கிழவன் இல்லை.  எனக்கு 46 வயது.  பசியில் நான் சாகப் போகிறேன் !  நீங்கள் யாவரும் அதற்குச் சாட்சி !  ஒரு காலத்தில் இருந்த உடல் உறுதி இப்போது உடைந்து போனது !  ஒரு வேலை இல்லை எனக்கு !  ஒருவித வருமானம் இல்லை எனக்கு !  எத்தனை நாளுக்கு நான் உண்ணாமல் இருப்பது ?  உயிர் வாழவும் இயலவில்லை !  உயிர் போகவும் தயங்குகிறது !  முப்பது வயதிலே என் தலை நரைத்து விட்டது !

ரம்மி:  (சிரித்துக் கொண்டு) பசியில் சாகும் நீ தலை மயிர் நரைத்துப் போனதே என்று கலங்குகிறாய் !  சாவப் போவதைப் பற்றி சல்வேசன் சாவடியில் நினைக்காதே !  இங்கே செத்தவர் பிழைப்பார் !  உண்ண உணவு கிடைக்குது !  உறங்க ஒரு கூரை உள்ளது.

பிரைஸ்:  ஆனால் சாவடிக் கடுங்குளிரில் செத்துப் போகலாம் !

பீட்டர்:  பதிமூனு வயதிலிருந்தே நான் வேலை செய்து வருகிறேன் !  பத்து அல்லது பன்னிரெண்டு மணி நேரக் கடும் உழைப்பு !  இப்போது நான் குப்பைத் தொட்டியில் வீசப் பட்டேன் !  என் வேலை பறி போனது !  என் வேலையை ஒரு வாலிபனுக்குக் கொடுத்தார் !  காரணம் என் தலை மயிர் வெளுப்பாம் !  அவன் தலை மயிர் கருப்பாம் !  என்னைப் போல் நன்கு வேலை செய்ய முடியாதவன்.  ஆயினும் ஊதியம் கிடைக்குது அவனுக்கு !

பிரைஸ்:  46 வயதிலே நீ மூப்படைந்து விட்டாய் !  வாலிபர், வனப்பு மிக்கவர் போட்டி இடும் காலம் இது !  நரை முடிக்குக் கருப்புத் தைலம் தடவினாலும் கிழவன் கிழவன்தான் !  யார் உன்னைப் பற்றிக் கவலைப் படுகிறார் ?

(ஜென்னி தட்டில் ரொட்டி, ஜாம், காபி கொண்டு வருகிறாள்)

ரம்மி:  இதோ உணவு வந்து விட்டது !  மேஜர் பாரபரா உன்னைப் பற்றி அக்கரை கொண்டவர் !  நீ ஓர் ஏழ்மைப் பாதுகாப்புச் சாவடிக்குத்தான் வந்திருக்கிறாய் !  உன் கோரப் பசி அடங்கும் இங்கே !  நீ சாகப் போவதில்லை இங்கே !

பீட்டர்:  (ரொட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு அழுகிறான்.)  சாப்பிட்டு எத்தனை நாள் ஆகுது ?  யார் இப்படி என்னை இதுவரை உபசரித்தார் ?

 

ஜென்னி:  (முதுகைத் தட்டி)  அழாதே அப்பா !  உணவைக் கடவுள் அளிக்கிறார் ! உன்னருகில் கடவுள் இருக்கிறார் !  உன் உயிர் போகாது !  உறுதியாக இரு !  உனக்கு வேலை வாங்கித் தருகிறோம் !  வேலையில் சேர்ந்த பிறகு நீ இதற்குப் பணம் தரலாம்.

பீட்டர்:  (ரொட்டியைத் தின்று கொண்டே)  ஆமாம் நான் அப்படியே செய்கிறேன்.  கடனை நான் திருப்பி அடைப்பது போல் செய்கிறேன்.  நன்றி கடவுளே !  கடவுளே ! நான் உனக்குக் கடன் பட்டவன் (தட்டைச் சீக்கிரம் காலி செய்கிறான்).

ஜென்னி:  (பூனகையோடு) ரம்மி !  நீ எப்படி நலமாக இருக்கிறாயா ?

ரம்மி:  கடவுள் உனக்கு நீண்ட ஆயுளைத் தருவார், ஜென்னி !  எனக்கு உண்ண உணவும், உறங்க இடமும் தந்து என் ஆத்மாவைக் காப்பாற்றினாய்.  என்னருகில் உட்கார் !  உன் கருணை முகத்தைச் சற்று நான் காண வேண்டும் !  நீ ஓய்வெடுக்கும் நேரம் வந்து விட்டதா ?
ஜென்னி:  இல்லை.  காலை முழுவதும் கடும் உழைப்பு இன்று !  இன்னும் முடியாமல் நிறைய வேலை உள்ளது !  நான் ஓய்வெடுக்கத் தாமதமாகும்.

ரம்மி:  என்னருகில் அமர்ந்து இரண்டு நிமிடம் கடவுளை நினைத்து வழிபடு !  எனக்கு மன அமைதி உண்டாகும்.

ஜென்னி:  (கண்களில் ஒளி உண்டாகி)  உண்மையான பேச்சு.  இரண்டு நிமிட வழிபாடு எத்தகைய இனிய அமைதி கொடுக்கிறது !  இன்று பகல் 12 மணிக்கு மிகவும் களைத்துப் போனேன்.  மேஜர் பார்பரா அருகில் வந்து ஐந்து நிமிடம் அவகாசம் எடுத்து கடவுளை வழிபடு என்று வேண்டிக் கொண்டாள்.  நானும் அவ்விதம் செய்தேன் !  மனதில் அமைதி உதித்தது !  உடலில் உறுதி உண்டானது !  உடம்பில் களைப்பு மறைந்தது !  பம்பரமாய் நான் வேலை செய்தேன் !

(தொடரும்)

***********************

தகவல் :

Based on The Play : Major Barbara By : George Bernard Shaw, – Penquin Books (Editorial Supervision of Biographer : Dan. H. Laurence) (1960)

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(e) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(f) DVD Video Classics – Bernard Shaw’s Major Barbara Released in August 2007 (2 Hours)

(g) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 4, 2011)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationலோக்பால் மசோதா- முதுகெலும்பு இல்லாத தவளைபூமியில் மூலாதார நீர் வெள்ளத்தை நிரப்பியவை பனி மூடிய முரண்கோள்களா ? (கட்டுரை 2)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *