உள்மன ஆழம் 

This entry is part 8 of 19 in the series 25 ஜூன் 2023

வளவ. துரையன்

உன் கவிதைகளில்

நான்தான் இருக்கிறேன் என்றால் 

ஒப்புக்கொள்ள மறுக்கிறாய்.

சுருள்முடியும் நான்விடும் 

சுருள் புகையும் எப்படிச் 

சுற்றிச் சுற்றி 

அங்கே இடம் பிடித்தன.

அன்று நகருந்தில் 

என் காலை மிதிப்பது 

தெரியாமல் மிதித்து ரணமாக்கி

ரத்தக் கண்ணீர் வடித்தாயே.

அருகருகே தோளுரசி 

நடக்கும்போது இருவரும்

கைகள் கலந்தும் 

கலக்காமலும் போனதையும் 

கவிதையாக்கி இருக்கிறாய்.

ஆனால்

கல்லிலிருந்து 

தலை நீட்ட மறுக்கும்

பாம்புக் குட்டியாய் நீ

பரிதவிப்பது தெரிகிறது.

நீ ஒப்புக் கொள்ளாவிடினும்

உன் உள்மன ஆழம்

அறிந்தவன் நான்.

Series Navigationநாவல்  தினை              அத்தியாயம் இருபது             பொ.யு 1900கற்றுத் தரல்  
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *