தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.

This entry is part 16 of 17 in the series 10 ஏப்ரல் 2016

சி. ஜெயபாரதன், கனடா

புத்தாண்டுப் பிள்ளை பிறக்குதடி
ஈராறு திங்கள் தாண்டி,
சித்திரை முதல்நாள் தமிழ்த் தாயிக்கு !
புத்தாண்டுப் பஞ்சாங்கம் வாசிப்போம்
சித்திரை மாத நாள் முதலாய் !
புத்தாண்டுக் கன்று உடனே,
எழுந்து நிற்கும், தத்தி
நடக்க முயலும்,
நழுவி விழும் தள்ளாடி;
நல்ல காலம் வருகுது நமக்கென
நம்புவோம்.
நாச காலம் போகட்டும் எனச்
சாபம் இடுவோம்.
நாடு செழிக்கப் போகுது,
நன்மை விளையப் போகுது,
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின வென்று
கும்மி அடிப்போம் !
ஏட்டுச் சுவடி செந்தமிழ் ஆளும் !
நாட்டுச் சுரைக்காய் ஆங்கிலம் கூறும் !
கல்விக் கூடங்கள் பெருகும் !
பல்கலைக் கழகப் பட்டங்கள் எல்லாம்
செல்வப் பூதங்கள் வழங்கும் !
பட்டதாரிகள் ஈசலாய்ப் பறப்பார் !
வேலை யின்றிச் சிறகறுந்து வீழ்வார் !
நோய், நொடி, தீமைகள் பெருகும் !
வேலி தாண்டும் கூண்டுக் கிளிகள்.
செல்வந்தர் பெருகுவார்,
கல்வி கற்போர் பெருகுவார்.
குடியரசில் குடியும், குடிசையும் பெருகும்.
சச்சரவு, சண்டைகள் பெருகும் !
சட்டங்கள் மீறப்படும் !
வம்பு, வன்முறை பெருகும்;
வாய்ச் சண்டை மிகும் !
மதச் சண்டை பெருகும் !
ஜாதிக் கொலைகள் தொடரும்.
காவல் துறைக்கு
அச்சமில்லை அச்சமில்லை என்று
கயவர் கூட்டம்
காயப் படுத்தும் பெண்டிரை.
அமைச்சர்கள் வேடிக்கை பார்ப்பார்,
நாணய மதிப்பு குறையும்.
நன்னெறிகள் நூலுக்குள் உறையும் !
புத்தாண்டுப் பிள்ளை பிறக்குது
குளிக்காமல்,
புத்தாடை அணிந்து கொண்டு !

Series Navigationபெண்டிர்க்கழகுஅக இருப்பு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *