This entry is part 4 of 46 in the series 19 ஜூன் 2011

சருகாகி உதிரும் இலைக்கு

மெத்தை விரித்தது பூமி

காற்று அதை கைப்பிடித்து

அழைத்துச் சென்று

உரிய இடத்தில் சேர்த்தது

கிளைகளெல்லாம் இசைக் காருவியாகி

வேர்களின் பாடலை

ஓயாமல் பாடியது

பூக்களின் நறுமணத்தை

முகர்ந்த வண்டுகள்

தேன் குடித்து

ரீங்காரமிட்டுச் சென்றன

மொட்டுகள் இதழ்விரித்து

வானம் ஆடை

உடுத்திக் கொள்ளாததைப்

பார்த்துச் சிரித்தது

அக்கா குருவி கீதம் பாடி

வசந்தகாலத்தை அழைத்தது

திடீரென மழை பெய்து

தேகத்தை நனைத்தது

புல்லாங்குழலின் துளைகள் வழியே

எப்படி புது நாதம் பிறக்குது

மேக ஊர்வலத்தில்

தானும் கலந்து கொள்ள

நதிவெள்ளம் துடித்தது.

 

Series Navigationஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதைசாகச விரல்கள்