வியாழனுக்கு அப்பால்

This entry is part 6 of 16 in the series 3 ஏப்ரல் 2016

நேதாஜிதாசன்

பிச்சை கேட்கும் குழந்தை
காணிக்கை கேட்கும் கடவுள்
லஞ்சம் கேட்கும் அதிகாரி
ரத்தம் கேட்கும் சாதிமன்ற தலைவன்
பணம் கேட்கும் விபச்சாரி
கடன் கேட்கும் அவன்
முத்தம் கேட்கும் மனைவி
பொம்மை கேட்கும் குழந்தை
இறைச்சி கேட்கும் நாய்
மீன்முள் கேட்கும் பூனை
வீடு கேட்கும் தெருவோரகுடிமகன்
மருந்து கேட்கும் வியாதிக்காரன்
என்னை கேட்கும் நான்
என எல்லோரும் இப்போது
எதை கேட்கப்போகிறார்கள்
ஒருவேளை நான் இல்லாமல்போனால்
ஆனால் நிச்சயம் நீங்கள் கேட்டதற்கு
பதிலாக கவிதை உண்டு
அதை உங்களால் படிக்க முடியுமா
என தெரியாது
ஆனாலும் நான் அதை எழுதுவேன்
இவ்வளவு நான் எனக்கு சுமையளித்த காலத்தின் காலில்
கட்டிவிடுவேன் என் கவிதையை
முடிந்தமட்டும் அது காலத்தின் அதிவேக ஓட்டத்தை குறைக்கும் என நம்புகிறேன்
ஏனெனில் என் கவிதைகளுக்கு நிறை அதிகம்
பூமியில் ஓரு நிறை
நிலவில் ஒரு நிறை
வியாழனில் ஒரு நிறை
வியாழனுக்கு அப்பால் ஒரு நிறை
இதை பற்றி கூட கவிதை எழுதுவேன்
அதையும் அந்த நிறையின் முதுகில் கட்டிவிடுவேன்
இப்போது நிறைக்கு நிறையால் நிறை ஏறி நிறைந்து செல்லும்
இந்த நிகழ்வு நடக்கும்போது
எங்கோ ஒரு மரம் காகிதமாகி கொண்டிருக்கும்
நிலவை ஒரு இயந்திரம் படமெடித்திருக்கும்
ஒரு குழந்தை பொம்மைக்கு ஏங்கி அழுதிருக்கும்
ஒரு கழிவறை சுத்தம் செய்யப்பட்டிருக்கும்
ஒரு கைதி விடுதலை ஆகியிருப்பான்
ஒரு கழுகு இரையை கண்டு கொண்டிருக்கும்
இந்த கவிதை கூச்சல் நின்றிருக்கும்

Series Navigationநாமே நமக்கு…கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *