This entry is part 1 of 4 in the series 23 ஜூன் 2019

மு.ச.சதீஷ்குமார்

அப்பா..

நாளை 

நான் வகுப்பில்

பேச வேண்டும்

மழையைப் பற்றி..

அது 

எப்படி இருக்கும்..

நீரின் துளிகள்

சிதறுவதை மழை

என்கிறோம் தம்பி..

அதை நீர் என்றே

சொல்லலாமே..

இல்லை..

சேர்ந்திருந்தால் நீர்

இது சிதறுகிறதல்லவா..

அவன்

விடாது கேட்டான்..

எவ்வளவு வேகத்தில்

சிதறி விழும்..

மிதமானது முதல்

மிகவேகமானது வரை..

கிடைமட்டமாகவா..

செங்குத்தாகவா..

செங்குத்தாக..

சில சமயம் சாய்வாக..

மேலே எப்படி

நீர் செல்லும்..

யார் தூக்கிப் போவார்கள்..

அவன் விடுவதாயில்லை..

கதிரொளியால்

உறிஞ்சப்பட்டு

காற்று தூக்கிச் செல்லும்..

புரிந்தது போல் 

தலையாட்டிச் சென்றான்

மறுநாள்.. பேசினான்..

காலையில் பள்ளியால் உறிஞ்சப்பட்டு

மாலையில் வீடுகளில்  துளிகளாய்ச் சிதறும் நாமே மழை

-மு.ச.சதீஷ்குமார்

9962956145

Series Navigationஇருள் கடந்த வெளிச்சங்கள்