![first-man-on-the-our-moon1 first-man-on-the-our-moon1](https://ci3.googleusercontent.com/proxy/FjPbRyY0BF3yQVOczymzbydyAQvmb0p_iUFrVLY6fdSmZDLOg3hQBfJNZ9um6ruw_8iV4gd-dOZfiVhM6Lru2g_bX4S-_WrO9v-Bo7gs8E41CscMPVyDAk4vDN0wPAMcwRbBC5_b9JI=s0-d-e1-ft#https://jayabarathan.files.wordpress.com/2009/04/first-man-on-the-our-moon1.jpg?w=584)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
பொங்கிவரும் பெருநிலவு
இங்கில்லை என்றால்
பூமி பரிதிக்கு அப்பால்
தங்கி விடும் !
தட்ப, வெப்பம் மாறிவிடும் !
உயிரின மெல்லாம்
மங்கி விடும் !
நிலவில்லை யென்றால்
கடல் வீக்கம் ஏது ?
முடங்கிய
கடல் வெள்ளத்தைக்
குலுக்கிட அலை
ஏற்ற மில்லை ! இறக்க மில்லை !
காற்றின் இறக்கை
முறிந்து விடும் !
கடல் நீர் சுற்றியக்கம்
தடைப்படும் !
கடல் நீட்சியும் மீட்சியும்
நடைபெறா !
கடல் வெப்பம் சீர்ப்படாது
முடங்கும் !
காலநிலை மாறுபடும் !
சூழ்வெளி வேறுபடும் !
பயிரினம் பரிதவிக்கும் !
உயிரினம் பாதிக்கப் படும் !
பூமியின் சுயச்சுற்று தடைப்பட்டு
நாள் மணிக் கணக்கு
நீளமாகும் !
கருநிலவு பூமியை விட்டு
வருடந் தோறும்
அங்குலக் கணக்கில்
அப்பால் நகரும் !
“காலநிலை, காற்று, காரிகை, எதிர்பாராத செல்வீகம் (Fortune) – இவை யாவும் நிலவைப் போல் மாறிப் போய் விடுபவை !
பிரெஞ்ச் பழமொழி.
நம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.
டெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)
![fig-1-relative-sizes-of-earth-moon fig-1-relative-sizes-of-earth-moon](https://ci3.googleusercontent.com/proxy/JfPr6IjjhC83DFUecAZwV6kKamjxWTHC5PuASKUtn8esnr2T9x8DkcxiGwG2iNLzDJSuKuQbBsdN9TX_2B9-K2Ks_gZ7-Ix41w9zsquYjfUT1XAUy5aC1cmva17mHsAzwF3eDoc3BAtmBoafkQeXng=s0-d-e1-ft#https://jayabarathan.files.wordpress.com/2009/04/fig-1-relative-sizes-of-earth-moon.jpg?w=584)
பூகோளம் முதன்முதலில் தோன்றிய போது !
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய போது பூர்வ பூமியானது எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்வது கடினம் ! திரண்டு உருவான பூமியின் கனல்கட்டி எந்த வடிவத்தில் காணப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது ! கண்டங்கள் குளிர்ந்து எப்போது உண்டாயின, கடல் வெள்ளம் எப்போது குழியில் நிரம்பியது என்று எவரும் அறியமாட்டார் ! படிப்படியாகப் படிந்த வாயு மண்டலம் எப்போது பூமிக்குக் குடை பிடிக்கத் தொடங்கியது என்பதை யார் கணிக்க முடியும் ? புத்தம் புதியக் குழந்தை பூமியை செவ்வாய்க் கோள் அளவுள்ள ஓரண்டம் தாக்கிச் சிதைத்து முதன்முதல் 6 மணி அளவு நாளாய்த் (6 Hour Day) தன்னச்சில் வெகு வேகமாய்ச் சுற்ற வைத்தது ! சிதைந்த சதைப் பிண்டம் உருகிப் போய் ஒன்றாய்த் திரண்டு துணைக்கோள் நிலவு ஆனது. சக்தி குன்றிய, நிறை குன்றிய, ஈர்ப்பாற்றல் குறைந்த நிலவு தன்னச்சில் சுழாது ஒருமுகம் காட்டிப் பூமியை வலம்வர ஆரம்பித்தது ! ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் கடந்து பூமி குளிர்ந்து உருகிய தளத்துடன், ஆவி பறக்கும் சூழ்வெளியில் உருண்டு திரண்டு ஒரு கோளானது. 700 மில்லியன் ஆண்டுகள் கழிந்து அதாவது சுமார் 3.8 பில்லியன் வருடத்துக்கு முன்பு முதன்முதல் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது.
![fig-2-life-without-the-moon2 fig-2-life-without-the-moon2](https://ci6.googleusercontent.com/proxy/rwjGrNlQUX7TvLPREJ-RawJiUYhu3sXngfX7y734YFxR385B9QDjbTP7OpcQeIehEnqWzwrvOT9tBq-H21xag3UHgCvySPz_8JaI0YKhidKRBjHxX0fIx4RL74VXh3ESyaQ7sZ-Oe2bOUg=s0-d-e1-ft#https://jayabarathan.files.wordpress.com/2009/04/fig-2-life-without-the-moon2.jpg?w=584)
4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய முதலே நீர்மயம் பூமியில் உண்டாகி விட்டது என்று ஒரு சில விஞ்ஞானிகள் கருதுகிறார். நிலவானது பூமியிலிருந்து சிதைக்கப்பட்டு அப்பால் தனியே சுற்ற ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட பெருங்குழியில் நீர் நிரம்பி கடல் உண்டாக ஏதுவானது. ஆயினும் அப்போது பூமி வெட்ட வெளியாகத்தான் கிடந்தது. நிலவு முதலில் 7300 மைல் தூரத்தில் சுற்ற ஆரம்பித்தது. பிறகு நகர்ந்து இப்போதுள்ள தூரத்தில் பாதி அளவு (120,000 மைல்) தொலைவில் இருந்தது. பூமியில் கடல் அலைகள் அதனால் பேரளவு உயரத்திலும், கொந்தளிப்பிலும் அடித்து வந்திருக்கின்றன. கடல் நீட்சியால் (Tidal Bulge) பூமியின் “கோண முடுக்கம்” (Angular Momentum) தொடர்ந்து நிலவை ஆண்டுக்கு சுமார் 1.5 அங்குலம் (3.8 செ.மீ) அப்பால் நகர்த்தி வருகிறது ! பூமியின் நாட் கணக்கு நூறாண்டுக்குச் சுமார் 0.002 செகண்ட் நீள்கிறது ! தற்போதைய நிலவின் சராசரித் தூரம் பூமியிலிருந்து 235,000 மைல் (380,000 கி.மீ.). பூமியின் வேகம் படிப்படியாகக் குறைந்து 6 மணி நாள் நீண்டு 24 மணி நாளாக மாறியது !
![fig-5-sea-tides-in-12-hours1 fig-5-sea-tides-in-12-hours1](https://ci3.googleusercontent.com/proxy/-uHjw6ExY2m3pTb-HsVOmL25E6A-Uh0DSh6MS0HCjipSHS8TlOq3btP1oNCRlNZjaTU_ELwcVr0lfU7_opDtO484iTXDsYmGFjMRWFpzRSuZRkoq-n0rf4tSzsVkXpcXwCCJN2LAb_T_Qw=s0-d-e1-ft#https://jayabarathan.files.wordpress.com/2009/04/fig-5-sea-tides-in-12-hours1.jpg?w=584)
பூமி இழக்கிறது ! நிலவு பெறுகிறது ! பூமி மெதுவாகிறது ! நிலவு விரைகிறது !
பூமியின் ஈர்ப்பியல் வல்லமை நிலவின் ஈர்ப்பியல் வலுவை விட 3000 மடங்கு மிகையானது. மேலும் பூமியின் திணிவு நிறை நிலவைப் போல் 80 மடங்கு பெரியது. பூமி சக்தியை இழக்கிறது. நிலவு சக்தியைப் பெறுகிறது ! பூமி கடல் நீட்சியோடு (Tidal Bulge) சுற்றும் போது அந்த வெள்ளம் கண்டங்களின் கரைத் தளம், நதிச் சங்கமம், வளைகுடாக்கள் ஆகியவற்றைச் சூடாக்கும் . எதிர்ப்படும் இடையூறுகளை தகர்க்கும் ! அத்தகைய கடல் நீட்சியும், மீட்சியும் (Tidal Swelling & Ebbing) சக்தியை இழக்கும் போது பூமியில் “கடல் நீர் உராய்வு” (Tidal Friction) உண்டாகிறது. அந்தப் பேரளவு நீர் மண்டலம் நீட்சி உண்டாக்கும் போது பூமியின் சுழற்சி சக்திக்குத் தடையாக முட்டுக் கட்டை (Applies Brake to Earth’s Rotational Energy) போடுகிறது ! அதாவது பூமியின் வேகத்தைத் தணிக்கிறது ! அதாவது பூமி ஒரு முறை தன்னச்சில் சுழல அதிக நேரத்தை எடுக்கிறது ! 4 பில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமி தோன்றிய காலத்தில் அதன் நாள் மணிக் கணக்கு 6 மணி நேரமாக இருந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள் ! அப்போது நிலவு பூமிக்கு மிக அருகில் சுமார் 7300 மைல் தூரத்தில் இருந்ததாகவும் அறியப் படுகிறது ! இந்தக் குன்றிய தூரத்துக்கும் குறைவாக நிலவு பூமியை நெருங்கி இருக்க முடியாது. அவ்விதம் தூரம் குன்றினால் பூமி நிலவைத் தன்வசம் இழுத்துத் தகர்த்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் !
![fig-1a-earth-tides fig-1a-earth-tides](https://ci3.googleusercontent.com/proxy/xCznf4zkTYpcrFP2h___zGxlMrA00bGVjCulB2-LUY7O648Gnty5P6KHALgTIUhbqWvNkVa3C-FXj8aoI1SHek24h0vWuvuOKvn8iKYCZCWDIcAKjxr4aWmoB1-MjrbR=s0-d-e1-ft#https://jayabarathan.files.wordpress.com/2009/04/fig-1a-earth-tides.jpg?w=584)
படிப்படியாக பூமியின் ஈர்ப்புச் சக்தி குறைந்து தன்னச்சில் சுற்றும் அதன் வேகம் தணிகிறது. பூமியின் ஆறு மணி நேர நாள் 4 பில்லியன் ஆண்டுகளில் நீண்டு இப்போது 24 மணி நேரமாக நீடித்துள்ளது ! இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிதி ஆண்டுக்கு 800 நாட்கள் என்று இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார் ! பூமி தன்னைத் தானே சுற்று வீதம் ஒரு நிலை இலக்கமில்லை ! பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த சூரிய கிரகணங்களை வானியல் நிபுணர்கள் துல்லியமாகச் சொல்லி இருப்பது வியப்பான கணிப்பே ! 2.5 பில்லியன் ஆண்டுகட்கும் 650 மில்லியன் ஆண்டுகட்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவின் நகர்ச்சி ஆண்டுக்கு அரை அங்குலம் (1.27 செ.மீ.) வீதம் இருந்ததாகக் கணிக்கிடப் படுகிறது. அந்த யுகங்களில் பூமிக்கு மிக அருகில் இருந்த நிலவு படிப்படியாகத் தள்ளப்பட்டு இதுவரை 235,000 மைல் தூரத்தில் நகர்ந்து பூமியைச் சுற்றி வருகிறது. 1970 ஆண்டுகளில் நாசாவின் அபொல்லோ விண்வெளித் தீரர்கள் நிலவிலே விட்டு வைத்த “மூன்று கோண மூலைக் கண்ணாடிகள்” மீது (Three-Cornered Mirrors Left on the Moon By the Apollo Astronauts) இப்போது லேஸர் ஒளிக்கதிரை அனுப்பித் துல்லியமாகச் சந்திரனின் நகர்ச்சியை [1.5 Inch per Year (3.8 cm per Year)] அளந்து வருகிறார் !
![fig-1b-tidal-movements-on-earth fig-1b-tidal-movements-on-earth](https://ci6.googleusercontent.com/proxy/rDp-0cDP9xuw2BHjBdeNnFpm-GGwg1lohbPE4hUY2mO0FRWvTsW0WhRDA8MBeJ93EncrB-WcbGhp_jw3FWrLHVBjPTWOHqPdrgMnx4Tq7gPTvckDa2uiwpPAbfkgFpoV7nFCXfNQYlwXWImtAA=s0-d-e1-ft#https://jayabarathan.files.wordpress.com/2009/04/fig-1b-tidal-movements-on-earth.jpg?w=584)
நிலவின் ஈர்ப்புக் கவர்ச்சி பூமியில் என்ன செய்கிறது ?
நிலவால் கடலில் ஏற்படும் நீர் மட்ட உயர்ச்சி தாழ்ச்சி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் அனுதினமும் இயற்கையாக நேரும் கடல் வெள்ளத்தின் நீட்சி மீட்சி இயக்கங்கள் ஆகும் ! கடலின் நீட்சி பூமியின் ஒருபுறமும் கடலின் மீட்சி அல்லது தாழ்ச்சி பூமியின் எதிர்ப்புறமும் நிகழ்பவை. அவை ரப்பர் பந்து போல் இழுப்புத் தன்மை உடையவை. சந்திரனின் ஈர்ப்பு விசை இல்லை யென்றால் பூமியின் கடல் வெள்ளம் சுழற்சி அடையாமல் முடமாகி வெறும் பூமியோடு சுற்றி வரும். ஆனால் நிலவின் ஈர்ப்பு விசை கடலின் நீர் மண்டலத்தைத் தன்வசம் கவர்ந்துப் பிடித்து வைக்கிறது ! அவ்விதக் கடல் வெள்ள நீட்சி அடையும் போது ஒருவித “முறிப்பு நெம்புதலை” (Torque or Twisting Force) பூமி நிலவின் மீது உண்டாக்குகிறது !
பரிதி, நிலவு, பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் உள்ள போது அவை நேர்முக நோக்கு ஈர்ப்பு விசையை மிகையாக்குகின்றன. வசந்த காலத்தில் வரும் கடல் நீட்சி (Spring Tides) எல்லாப் பருவக் காலத்தையும் விட மிகையாக இருந்து வருகிறது ! நீள்வட்டத்தில் சுற்றும் நிலவு சிற்றாரத்தில் (Perigee) பூமிக்கு அருகில் உள்ள போது கடல் நீட்சி அதிகம். பிறகு பூமிக்கு அப்பால் நீளாரத்தில் (Apogee) நிலவு உள்ள போது கடல் நீட்சி குறைவு.
![fig-1c-spring-tides fig-1c-spring-tides](https://ci3.googleusercontent.com/proxy/RCWynOz7JRJd80pXyKA7ayyVAFa0SsZkM0esqosLrcGHKqJZeuu8HPJT-NOrzMUltdpCjVG--dNS9r45WFk1OXWqEQfuX54z6rBiW782bFkBJW665CrK2a-eql58426xtA=s0-d-e1-ft#https://jayabarathan.files.wordpress.com/2009/04/fig-1c-spring-tides.jpg?w=584)
மேலும் சந்திரனின் ஈர்ப்பு விசை பூகோளத்தின் வாயுச் சூழ்வெளியைப் பாதிக்கிறது. அது பூமியின் அடித்தட்டு நகற்சி (Plate Tectonics) இணைந்த மேற்தளக் கோளத்தையும் (Lithosphere – Topmost Layer of Earth along with the Crust) மாற்றுகிறது. நமது பூகோளத்தின் அடித்தட்டு (crust) நிலவை நோக்கி அதன் ஈர்ப்பு விசையால் 12 அங்குலம் (30 செ.மீ) நீட்சி அடைகிறது
துணைக்கோள் நிலவால் பூமிக்கு ஏற்படும் பலாபலன்கள்
நிலவில்லாது போனால் கடலில் நீரோட்டம் முடக்கமாகி கடலியக்கம் தடைப்படும். அப்போது பேரளவு ஆக்ஸிஜன் வெளியாக்கும் ஆல்கே (Algae – Seaweeds) போன்ற கடற்களைகள் அழிந்து போகும். அதாவது சந்திரன் இல்லாவிட்டால் நாம் உண்ணும் உணவு சங்கிலி (Food Chain) பாதிக்கப்படும். நிலவின் அமைப்பு மனிதரைப் போன்ற பூமியின் உயிரினச் செம்மை விருத்திக்குப் பல்வேறு செழிப்பு முறைகளில் பாதிப்பு செய்தற்கே. அவற்றில் முக்கியமானவை :
![fig-1f-the-structure-of-earth fig-1f-the-structure-of-earth](https://ci5.googleusercontent.com/proxy/V8li6psy1FkKGi7bkeDgkM1fDFiiw_BhrT9WFZ_RtJwUkRiaN5UdgttE9p5ElOmqxe0UeRI-wr17dDBfjJrerm7SsYGMaX8vbXIYcBsgPf0iYznIsVgk0Pevhjbxm6ihq_i1oAkQDt3KaDM=s0-d-e1-ft#https://jayabarathan.files.wordpress.com/2009/04/fig-1f-the-structure-of-earth.jpg?w=584)
1. 4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் அதிர்ஷ்ட வசமாக செவ்வாய்க் கோள் அளவில் பூமியைத் தாக்கிய ஓரண்டம் சிதைத்து 99% திணிவு மிக்க இயற்கையான உயிரினத் தடை உண்டாக்கும் சூழ்வெளியை (Natural Primordial Life-Prohibiting Dense Atmosphere) அகற்றியது ! அதன் பின்னர் மிக மெல்லிய தெளிவான உயிரின வளர்ச்சிச் சூழ்வெளி (Relatively Thin Translucent-Clear Life-Permitting Atmosphere) தோன்றியது. அதே சமயத்தில்தான் முதன்முதல் சந்திரன் துணைக்கோளும் பூமிக்கு உண்டானதாகக் கருதப்படுகிறது !
2. அதே கொந்தளிப்புக் காலத்தில்தான் மிகையான மேற்பட்ட கதிர் வெப்பம் வீசும் யுரேனியம், தோரியம் மூலகங்கள் தோன்றி பூகோள உட்கரு செழிப்பாகத் துவங்கியது ! கதிரியக்க வெப்பம் அடித்தட்டுக் கண்ட நகர்ச்சியால் எழுந்த வாயுத் திடப் பொருட்களை சுற்றியக்கத்தால் (Recycling of Continents due to Plate Tectonics) பூமியிலிருந்து வெளியேற வழி வகுத்தது ! அதாவது அடித்தட்டு நகர்ச்சியில் ஒன்றின் மீது ஒன்று குதிரை ஏறிக் கரி கலந்த பொருட்கள் (Subduction of Carbonacious Materials) வெளியாகிக் காலம் செல்லச் செல்ல “சுக்கிரன் விளைவு” மாதிரி (Venus Effect of Global Warming over Time) பூகோளச் சூடேற்றத்தைப் படிப்படியாகத் தவிர்ப்பது.
![fig-1e-earths-lithosphere1 fig-1e-earths-lithosphere1](https://ci4.googleusercontent.com/proxy/eIfGC7CQdQI9V9nxrOY9SaDstaBdDNhVy4v0f7yAosE3N-HB-i2AIzuabAI0i8cIWCTCOal1hBwdKwp3tR-lbSGn5XC7WXzW3asU_RfTShWnYEgDiITh3XpdT45duYa5E8tHRYH7tuQ=s0-d-e1-ft#https://jayabarathan.files.wordpress.com/2009/04/fig-1e-earths-lithosphere1.jpg?w=584)
3. கடல் நீர்மட்டம் ஏறி இறங்கி கடல் வெள்ளத்தின் சுற்றோட்டத்தை அனுதினமும் நிகழ்த்தி கடல்நீர் முடமாவதைத் தடுப்பது. அதன் விளைவு : மேலான மனித உயிர் வளர்ச்சிக்குத் தடையானவற்றை நீக்குவது.
4. நிலவின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் கடல் நீட்சி தடை செய்வதால் (Tidal Braking) பூமியின் சுயச் சுழற்சி வேகம் தணிகிறது ! அதனால் பூகோளத்தில் உயிரினம் செம்மையாக விருத்தியாகச் சூழ்வெளி மிதமாகிறது. பூமியின் சுழற்சி வேகம் மிகையானால் உயிரினம் பாதிக்கப்படும் பயங்கரச் சூழ்வெளி உருவாக வழி ஏற்படும்.
5. மேலும் பூமியின் சுற்றச்சு 23.4 டிகிரி பரிதிக்கு ஒப்பாகச் சரிந்திருக்க நிலவே நிலைப்பாடு செய்ய உதவுகிறது. அதே சமயத்தில் யுரேனஸ் கோளின் அச்சு கட்டுப்பாடு இல்லாமல் சுற்றச்சு சுமார் 98 டிகிரி சாய்ந்து போய் உள்ளது. அதாவது மிதமான பருவ நிலைக் காலம் பூமத்திய ரேகைப் பகுதிக்கு மேலும் கீழும் சுற்றியக்கம் பெற உயிரினங்களுக்கு வசதி உண்டாக்குகிறது.
![fig-4-spring-tide-neap-tide fig-4-spring-tide-neap-tide](https://ci6.googleusercontent.com/proxy/AwVee61b4vJbh0oUTwglmVl0ckpX3VCvdN_L2Pv-iQsBEnxs9hFaqhloB2M_axlEQgsOWEHYuW2dUvtdrV3DoNY6vZ46yTzkaN9L9pn6G-H07p4FGZUXqjdIercouXRvTwelJNsGyVJd=s0-d-e1-ft#https://jayabarathan.files.wordpress.com/2009/04/fig-4-spring-tide-neap-tide.jpg?w=584)
6. உலகம் முழுவதிலும் நிலவின் அமைப்பே கடல் நீட்சிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. நிலவு இல்லாவிட்டால் அலை ஏற்ற இறக்கங்கள் பேரளவில் மெலிந்து போய்விடும் ! நிலவில்லா விட்டால் பூமியின் சுழலச்சு தாறுமாறாக ஊஞ்சல் ஆடும் ! அந்த ஆட்டம் உஷ்ணக் கொந்தளிப்பையும் பெருத்த கால நிலை மாறுதல்களையும் உண்டாக்கும் ! பூமியில் சுமுகமாக வசித்த மனித இனங்கள் வசதியற்ற தட்ப வெப்பச் சூழ்வெளியில் தவிக்க நேரிடும் !
சூரிய மண்டலத்தில் நூதனப் படைப்புக் கோள் பூகோளம்
பிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது. அதிலும் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது ! அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது ! பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது ! ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது ! பூமிக்கு ஒரே முகத்தை மட்டும் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.
![fig-6-solar-eclipse-on-the-moon fig-6-solar-eclipse-on-the-moon](https://ci3.googleusercontent.com/proxy/TZgYBZqZrJhscdgACBDvjMlsQh92zbNjpims1LtroWmF-0-4_kQBgcfCJBlvQ_vcwQwCskOZfy1UOXsHpCWD9wef4SpvNUpVZM3bxF1uqvDqEDzkHs3LJ1a5u62qi1r2XL6jzBXt9IP74aezMA=s0-d-e1-ft#https://jayabarathan.files.wordpress.com/2009/04/fig-6-solar-eclipse-on-the-moon.jpg?w=584)
[தொடரும்]
தகவல்கள்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. Physics for Poets By : Robert March (1983)
9. Atlas of the Skies (2005)
10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
11 On the Moon By : Patrick Moore (January 2001)
12 http://www.thinnai.com/?
13 Wikipedia – Inner Structure of the Moon [January 31, 2008]
14 Astronomical Society of the Pacific – Whait if the Moon Did not Exist ? By : Neil F. Comins, University of Maine (1996)
15 AstronomyCafe.net What Would Have Happened if the Earth Did not Have the Moon ?
16 Home Page. Natural World . Com – Formation of the Earth & The Moon, Tides & Gravity
17 Earth-Moon Dynamics Page – Would We have Had Evolution Without the Moon ? By : Dan Green B.Sc. (Hons).
18 Tides on Earth – The Recession of the Moon By : Tim Thompson (Matt Rosenberg http://geography.
19 Scientific American – Without the Moon, Would There Be Life on Earth ? By : Bruce Dorminey (April 21, 2009)
******************
jayabarathans@gmail.com [April 30, 2009][R-1]
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- ராமராஜ்ஜியம் எனும் மாயை
- எமிலி டிக்கின்ஸன் கவிதை – 26
- என் ஜீவப்ரியே ஷ்யாமளா
- நிலவின் துணைச் சுற்று இல்லாமல் பூமியிலே நீடிக்குமா உயிரினம் ?
- பேரழிவுப் போராயுதம் படைத்த பாரத விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா
- எஸ் சாமிநாதன் விருது வழங்கும் விழா