This entry is part 7 of 8 in the series 21 ஏப்ரல் 2024

                                வளவ. துரையன் 

இரண்டாம் ஆட்டம்

பார்த்துவிட்டு

இரவில் வருகையில்

சிறு சலசலப்பும்

சில்லென்று அடிமனத்தில்

அச்சமூட்டும்.

அதுவும்

கட்டைப்புளிய மரம்

நெருங்க நெருங்க

அதில் ஊசலாடிய கம்சலா

உள்மனத்தில்

உட்கார்ந்து கொள்வாள்.

அங்கிருக்கும்

சுமைதாங்கிக்கல்

அந்த இருட்டில்

ஆறு பேர் நிற்பதாகத் தோன்றும்.

பகலெல்லாம்

அதனடியில்

பழம்பொறுக்கிச் சீட்டாடும்

பாவிகள் எங்குதான் போனார்கள்

என்று என்மனம் ஏசும்.

நடையை வேகமாகப் போட

நான் நினைத்தாலும்

கால்கள் பின்னலிடும்.

இத்தனைக்கும்

புளியமரம் பக்கத்திலிருக்கும்

வேப்பமரம்தான்

எங்கள் குலதெய்வம்.

Series Navigationகனடாவில் செல்வி அதிசாவின் சலங்கைப்பூசைநான் திரும்பிப் போவேன்