This entry is part 3 of 7 in the series 9 நவம்பர் 2025

அவள் 

அந்த கடவுளையும் 

தூக்கிக்கொண்டு அலைந்தாள்

ஐந்து பிள்ளைகளோடு. 

வாழ்வதற்கு 

வீடில்லை. 

உண்பதற்கு சோறில்லை. 

படுத்துறங்க 

பாயுமில்லை. 

கட்டிய கணவனோ 

கள்ளச்சியோடு 

கலந்திட 

வீடோ 

சுனாமியில் போய்விட 

அவள் 

அலைந்துக்கொண்டிருந்தாள் 

அந்த சாமியோடும்

ஐந்து பிள்ளைகளோடும். 

யார் வீட்டிலோ 

சோறு கேட்டாள் 

மற்றொரு வீட்டில் 

பழைய துணி கேட்டாள் 

ஆண் துணையாக 

அங்கே நின்ற 

அரச மரத்திடம் 

துணைக்கேட்டாள் 

அந்த இரவில் படுத்துறங்க. 

ஆணாக நின்ற 

அரச மரத்தின் 

வயிற்றில் மாட்டினாள் சாமியை 

விரித்தாள் பழைய துணியை 

கிடத்தினாள் 

ஐந்து உயிர்களை 

காவலுக்கு 

கண் விழித்தாள் 

அவள்தான் 

தாய் !!!..

-ஜெயானந்தன். 

Series Navigationநிழல் தேடல்நூற்றாண்டின் நினைவில் எனது ஆசான் – தமிழருவி த. சண்முகசுந்தரம்