This entry is part 4 of 5 in the series 5 ஜூலை 2026

கவிஞர், திரைப்படக்கலைஞர் திரு.சீனு ராமசாமியின் சமீபத்திய நூல் (சந்தியா பதிப்பக வெளியீடு) குறித்து …….

_ லதா ராமகிருஷ்ணன்

………………………………………………………………………………………………………………………………………….வெளியீடு: சந்தியா பதிப்பகம்

விலைரூ.180

தொடர்பு எண்: 044 24896979 / 98409 52919

…………………………………………………………………………………………………………………………………………

ஒப்புநோக்க, சினிமாவைப் பற்றிய நூல்கள் குறைவு எனலாம். ஆனால், சினிமா வந்த நாளிலிருந்தே அது மக்கள் மனங்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்திவருவது கண்கூடு. எத்தனை எளிய மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் புத்தகம் படிக்க அடிப்படை எழுத்தறிவு அவசியம். சினிமா ரசனை, சினிமா ரசனையை எப்படி மேம்படுத்திக்கொள்ளலாம், சினிமாவும் சமூகமும் என எத்தனையோ தலைப்புகளில் ஆழமான வாசிப்புக்குரிய சினிமா தொடர்பான விஷயங்களை எழுத முடியும். நல்ல நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. என்றாலும், இன்னும் நிறைய எழுதப்படவேண்டும்.

அதுவும் சினிமா என்ற பிரம்மாண்ட கலைவடிவால் ஈர்க்கப்பட்டு, அதே சமயம் அந்தக் கலைவடிவத்தை மனித மேம்பாட்டுக்காக ஆக்கபூர்வ மாகப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும் கொண்டவர்கள், சினிமா குறித்த தங்களது அறிவையும், ரசனையையும் வளர்த்துக்கொள்வதில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் சினிமா குறித்து   எழுதும் நூலின் மூலம் சினிமாவின் பல பரிமாணங்களையும், சாத்தியப்பாடுக ளையும் நம்மால் அறிந்துகொள்ள முடியும். அத்தகைய ஒரு நூலாக சமீபத்தில் சென்னை, சந்தியா பதிப்பக வெளியீடாக வந்துள்ள சினிமா வின் ஆன்மாவைக் கூறமுடியும்.

தமிழ்த்திரையுலகில் குறிப்பிடத்தக்க பெயர்களில் இயக்குனர் சீனு ராமசாமியும் ஒன்று. சர்வதேச விருதுகளைப் பெற்ற திரைப்பட இயக்கு னர். சிறந்த கவிஞரும் கூட. இதுவரை இவரது 13 கவிதைத்திதொகுப்பு கள் வெளியாகியுள்ளன. ஒன்பது திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த நூல் அவருடைய மூன்றாவது கட்டுரைத்தொகுப்பு.

நூலாசிரியர் குறித்து பதிப்பாளர் சந்தியா நடராஜன் (இவர் சிறந்த எழுத்தாளரும்கூட!) எழுதியுள்ள ‘நிலத்தின் கலைஞன்’ என்ற தலைப்பிலான முன்னுரை குறிப்பிடத்தக்கது.

உலக சினிமா என்பது எங்கோ அந்நிய தேசத்தில் எடுக்கப்படுவது அல்ல. உலக சினிமா என்பது உள்ளூரில் எடுக்கப்படும் நேர்த்தியான சினிமா என்ற தனது முத்திரை வாசகத்தை மீண்டும் வலியுறுத்தி ஒளிகளின் மொழி என்ற தலைப்பில் நூலாசிரியர் எழுதியுள்ள ‘என்னுரை’யும் சிறப்பானது. “ரசனை மிகுந்த மனிதன் இந்த சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் ஒருவனாக இருக்க வாய்ப்பே இல்லை என்று நான் ஆழமாக நம்புகிறேன். நமது பார்வையாளர்கள்வெறும் திரையில் தோன்றும் உருவங்களுக்கு விசில் அடிப்பவர்களாக மட்டும் நின்று விடாமல், அந்த உருவங்களுக்குப் பின்னால் இருக்கும் ஆன்மாவை தரிசிப்பவர்களாக மாறவேண்டும்” என்று கூறுபவர், ‘இந்த நூல் ஒரு சிறு முன்மாதிரி நூல் மட்டுமே. இதை ஒரு மூலமாகக்கொண்டு, பாடங்களில் திரைப்படங்களின் எண்ணிக்கையை நாம் இன்னும் கூட்டிக்கொள்ளலாம். உலக சினிமாக்களை மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் ஒரு எளிய வழிவகையாக இந்தப் படைப்பு இருக்கவேண்டும் என்பதே எனது ஆசை. வாழ்க்கை என்பது ஒரு முடிவற்ற திரை. அதில் நாம் ஓட்டும் படங்கள் யாவும் பேரன்பால் நெய்யப்படட்டும்’ என்று ஒரு திரைப்பட இயக்குன ராகத் தன் ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் கவித்துவமாக வெளிப்படுத்தி யிருக்கிறார்.

இந்த நூலின் சிறப்பம்சம் குழந்தைகளை பிரதான கதாபாத்திரங்களாகக் கொண்ட உலகத்தரமான 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களை அறிமுகம் செய்திருப்பது. அவை எதனால் சிறந்த படங்கள் என்று தேர்ந்த ரசிகர் பார்வையில் எடுத்துரைத்திருக்கிறார் நூலாசிரியர். ஒவ்வொரு படத்தைப் பற்றிப் பேசும்போதும் குழந்தைகள் பால் நூலாசிரியருக்கு உள்ள மெய்யான அக்கறை வெளிப்படுகிறது. எடுத்துக்காட்டாக, THE RED BALLOON என்ற , 1956இல் வெளியான படம் குறித்ட கட்டுரையின் ஆரம்பப் பத்தி இது:

“குழந்தைகளின் உலகம் பெரியவர்களுக்குப் புரிவதே இல்லை. அவர்களின் கற்பனைகளுக்குத் தர்க்கங்கள் கிடையாது. ஒரு சிறிய மரக்கட்டையை மோட்டார் காராக நினைத்து ஓட்டக்கூடியவர்கள் அவர்கள். அவர்களுக்கு உயிரற்ற பொருட்களோடும் பேசத்தெரியும். அப்படிப்பட்ட ஒரு தனிமையான சிறுவனுக்கும், அவனோடு ஒட்டிக் கொண்ட ஒரு சிவந்த பலூனுக்கும் இடையிலான மௌனமான காதலே பிரெஞ்சு இயக்குனர் ஆல்பர்ட் லாமோரிஸ் 1956இல் உருவாக் கிய THE RED BALLOON.’

CHILDREN OF HEAVEN என்ற 1997ஆம் ஆண்டைய படம் பற்றிக் குறிப்பிடுகையில் ‘வாழ்க்கை சில நேரங்களில் ஒரு ஜோடி கிழிந்த காளணிகளுக்குள் அடங்கிவிடுகிறது. வறுமை என்பது வெறும் பற்றாக் குறை அல்ல. அது ஒரு மனிதனின் தன்மானத்தையும் அவனது மென்மையான உறவுகளையும் சோதித்துப் பார்க்கும் ஒரு களம். ஈரான் நாட்டின் மகத்தான இயக்குநர் மஜித் மஜிதி செதுக்கிய சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைப்படம் வறுமையின் நிறத்தை, அதோடு அந்த வறுமைக் குள்ளும் குடும்பம் எப்படி அன்பால் பிணைக்கப் பட்டிருக்கிறது என்பதை ஒரு கவிதையைப் போல் பதிவு செய்கிறது’ என்று எடுத்துச்சொல்கிறார்.

இப்படி ஒவ்வொரு படமாக அதன் உள்ளடக்கச் சிறப்பை, அதிலுள்ள சமூகப்பிரக்ஞையை எடுத்துக்காட்டி அது சினிமாவாக எப்படி நேர்த்தியான பாணியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் விவரித்துச்சொல்கிறார்.

நூலின் இறுதிப்பக்கங்களில் சினிமா ரசனைக் கல்வியின் அவசியமும் தேவையும் என்ற கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.

பல பள்ளிகளில் நூலகங்களே மாணாக்கர்களுக்கு எட்டாக்கனியாக இருக் கிறது என்று கேள்விப்படுகிறோம். அரசுப்பள்ளிகளில் புத்தகங்கள் கிழிந்து விடும் என்று நூலகங்களில் பிள்ளைகளை உள்ளே விடுவதில்லையென் கிறார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.  இந்த நிலை மாறவேண்டியது அவசியம். கூடவே, மாணாக்கர்களுக்கு உலகத்தரமான திரைப்படங்களும் அவ்வப்போது காண்பிக்கப்படலாம். அவர்களுடைய வளர்ச்சிகாலத்திற்குத் தேவையான சில கருத்துகளை முன்வைக்கும் ஆவணப்படங்களும் காண்பிக்கப்படலாம்.

இன்று காட்சி ஊடகங்களின் காலம் எனலாம். இதில் குழந்தைகள், வளரி ளம்பருவத்தினர் திசைதப்பி தறிகெட்டுப்போய்விடாமலிருக்க அவர்க ளுக்கு சினிமா ரசனை என்பதும் பாடத்திட்டத்தில் இடம்பெறுவது அவசி யம் என்று நூலாசிரியர் வலியுறுத்தியிருப்பது கவனத்திற்குரியது. நூலில் கையாளப்பட்டுள்ள மொழியும், நடையும், பேச எடுத்துக்கொண் டுள்ள உலக சினிமாக்களும், சினிமா சார்ந்த விஷயங்களும்  திரு.சீனு ராமசாமியின் (தரமான) சினிமா ரசனையையும் சமூகப்பிரக்ஞையையும், தாக்கமேற்படுத்துவதான நேரிய மொழிப்பயன்பாட்டையும் எடுத்துக் காட்டுகின்றன.

Series Navigationஎண்ம மெய்ஞானம்’ Digital Wisdom ஆன்மீக தளத்தின் பின்உண்மை பாதைசகியே!