This entry is part 7 of 22 in the series 26 மார்ச் 2023

சாந்தி மாரியப்பன்

முதற் சரக்கொன்றை பூத்து விட்டது

அக்காக்குருவிகளைத்தான் காணவில்லை.

அலகு ஓய்ந்ததோ

அன்றி

களைத்து இளைத்ததோ

அக்காக்களைக் கண்ணுக்குள்ளேயே

வைத்திருக்கும் தங்கைகள்

தேடித்தட்டழிகிறார்கள்

இந்த மரத்தில் பூத்திருப்பது

சென்ற வருடம் கூவிய

அக்காக்குருவியின் 

கீதமாக இருக்கலாம்

தங்கைகளின் ஏக்கமாக வழிவது

ஏதோ ஒரு வருடத்தின்

பூக்குவியலாகவும் இருக்கலாம்

சுள்ளிக்குவியலாய் இருக்கும்

மரத்தின்

பூவின் தனிமையும்

வனம் முழுக்க அக்கக்கோவென

தேடும் தங்கையின் தனிமையும்

ஒன்றென்றால் ஒன்றுதான்

வெவ்வேறென்றால் வேறு வேறுதான்

சொட்டும் குரலும் மகரந்தமும்

பரவும்

மண் மட்டும் என்றும் ஒன்றே போல்.

அன்புடன்,

.

Series Navigationஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் – அங்கம் – 2, காட்சி – 1 பாகம் – 1புதிய  குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு