கே. எஸ். சுதாகரின் “பால்வண்ணம்” சிறுகதைத்தொகுப்பு – ஒருகண்ணோட்டம்

author
0 minutes, 10 seconds Read
This entry is part 6 of 17 in the series 12 பெப்ருவரி 2023

கிறிஸ்டி நல்லரெத்தினம்

ஆஸ்திரேலியாவை வதிவிடமாய் கொண்ட ஈழத்து எழுத்தாளர் கே. எஸ். சுதாகரின் புதிய படைப்பு “பால்வண்ணம்” சிறுகதைத்தொகுப்பு. 1983ல் இருந்து சிறுகதை, குறுநாவல், ஆய்வுக்கட்டுரை, விமர்சனம் ஆகிய பல பாதைகளில் தடம் பதித்தவரின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு இது. இலக்கிய சஞ்சிகை, இணையதளம், பத்திரிகை என பல தளங்களில் அயராமல் எழுதிவரும் புலம்பெயர் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகருக்கு வேறு அறிமுக பாமாலை வேண்டியதில்லை.

இச்சிறுகதைத்தொகுதியின் புகுமுகத்தையும் இன்ஜின் அறையையும் பற்றி அனேக நண்பர்கள் பல தளங்களில் ஏற்கனவே சிலாகித்து விமர்சனம் செய்துவிட்டனர். எனவே நூலை படித்த போது என்னை வருடிய சில தருணங்களை மட்டுமே இங்கு மையில் தோய்க்கிறேன்.

நவீன இலக்கியத்தின் ஒரு முக்கிய அம்சமான சீண்டல் அல்லது நிலைகுலைவு இவரின் கதைகளின் சிறப்பு. சுதாகரின் கதைகள் ‘எல்லாம் சுபம்’ என்று என்றும் முடிவதில்லை. பல கதைகளில் வாசகனை சீண்டி அவனை ஒரு முடிவிலிக்கு (infinity) அழைத்துச்சென்று அங்கு அவனை பரிதவிக்க விட்டுவிட்டு விலகிப்போகிறார் ஆசிரியர். இது ஒரு புது அணுகுமுறை. வாசகனுக்கு இது ஒரு புது அனுபவமே!

இத்தொகுப்பின் முத்திரைக்கதையான பால்வண்ணத்திலும் இச் சீண்டலை காணலாம். முப்பது வருடங்களின் பின் சந்திக்கும் காதலர்களின் சுயதரிசனம், மூடிக்கொண்ட மனக்கதவுகளின் திறப்பு விழா, திறந்து கொண்ட படுக்கையறை கதவுகள், பற்றிக்கொள்ளாத தீயும் பஞ்சும், தகர்க்கப்படாத நூல்வேலி என கதை விரிகிறது. அன்பின் அடர்த்தியை தராசிலேற்றி பார்க்கும் கதைக்கரு. சமுதாயம் சமைத்து வைத்த எல்லைகளை கதைநாயகர்கள் தாண்டிவிடுவார்களோ என்ற ஒரு பரிதவிப்பு வாசகன் மனதில் துளிர்விடாமல் இல்லை – அதுவே இக்கதையின் வெற்றி.

இதே சீண்டல் ‘தலைமுறை தாண்டிய தரிசனங்கள்’ ‘நாமே நமக்கு’ ‘அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை’ கதைகளிலும் ஒரு சமுதாயச் சீண்டலாய் விரிகிறது.

ஆஸ்திரேலியாவின் பூர்வீக குடிமகனான மண்ணின் மைந்தன் அடோனிக்கும் வெள்ளை இனப்பெண்னை கரோலினுக்கும் உள்ள பிணைப்பு நிற வெறியை சுரண்டிப்பார்க்கிறது. ‘நாமே நமக்கு’ ஈழப்போரின் வேட்கையில் வெந்த கிருஷ்ணவேணியின் துயர வாழ்வை படம் போட்டு கட்டுவது மட்டுமல்லாமல் ‘கறை இங்கும் உண்டு’ எனும் காட்சியாய் விரிகிறது. 

இன்னொரு கிருஷ்ணவேணியை ‘கலைந்தது கனவு’ கதையின் நாயகியாய் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். இவள் அவள் அல்ல! வாழ்வின் வலியை அனுபவித்தவள் இவள். தன் கணவன் அகிலனில் இருப்பிடத்தை உரிமையுடன் ஆக்கிரமித்து “இஞ்சையே இருக்கப்போறேன்” என ஒரு குடும்பக்கட்டமைப்பில் மனைவியின் இடத்தை மீட்டெடுக்கும் நாயகியை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.

‘அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை’யில் சாதியத்தை கருவாக்கி ஒரு நிலைகுலைவை பதிவு செய்கிறார் ஆசிரியர். புலம்பெயர்ந்து மகனின் குடும்பத்தோடும் வாழும் ஒரு தாயின் மனக்குமுறல்களின் உச்சமாக, சாதியம் எனும் சர்ப்பத்தின் வாலை மிதிக்கும் அம்மாவை அறிமுகப்படுத்துகிறார். “கிழவி எல்லாத்தையும் உளறுது. ஓடிப்போய் ஸ்பீச்சை நிப்பாட்டு அக்கா…” என்று முடிகிறது கதை. வாழ்க்கையை வாழ்ந்து முடித்த தாயின் குரலை மௌனிக்க எடுக்கப்படும் எத்தனங்களின் கு௹ரத்தை விளக்குகிறது கதை. ஆசிரியரின் சமுதாய சீண்டவின் இன்னொரு பரிமாணம் இது.

இத்தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளும் தீவிர வாசிப்பிற்கான கதைகள் மட்டுமே என்று சொல்லிப் போகவில்லை. அவ்வாறு எதிர்பார்ப்பதும் தவறு.

 ‘வெந்து தணிந்தது காடு’ கொரோனா காலத்தில் வைத்தியசாலையில் பணிபுரியும் அகிலனின் தொழில்-குடும்பம் எனும் இரு மையங்களை இணைக்கும் நிகழ்வின் சாரம் மட்டுமே. ‘அனுபவம் புதுமை’ பலகலைக்கழக பேராசிரியர் நெயில் றொபின்ஷன் தன் மகளும் கல்விப் பயணத்தில் தன்னை ஏமாற்றியதை அறிந்து வெதும்பும் ஒரு தந்தையின் காட்சித் திரட்டு. ஒரு சிறுகதையின் சிறப்பம்சமாக கருதப்படும் ‘முரண்பாட்டுடனான முடிவு’ இங்கு சிறப்பாய் கையாளப்பட்டுள்ளது. தொகுப்பில் உள்ள பல கதைகள் உளவியல் நோக்குடன் எழுதப்பட்டவை. இது ஒரு புதிய பரிமாணமாய் கருவிற்கு வலுச்சேர்க்கின்றது.

பால் வண்ணம் தொகுதியில் உள்ள பல கதைகள் நெஞ்சை வருடிச்செல்கின்றன. சில சிந்திக்க வைக்கின்றன. சில ‘சலித்தெடுத்து ரசித்துக்கொள்’ என கூறி விலகிச்செல்கின்றன.

கதைக்களங்களின் தெரிவு கருவிற்கு வலுச்சேர்க்கின்றன. ஆபீஸ், பல்கலைக்கழகம், வைத்தியசாலை, கல்லூரி என வேறுபட்ட களங்கள் நிச்சயம் கதை நகர்த்த உதவுவது மட்டுமல்லாமல் ஆசிரியருக்கு இக்களங்களின் செயல்பாடுகள் பற்றிய நுணுக்கமான அறிவுத்தேடலை வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றன.

ஒரு கதைக்களத்தை உருவாக்கி அங்கு பேனாவும் கையுமாய் மறைந்திருந்து கதாபாத்திரங்கள் பேசுவதையும் அங்கு நிகழ்வதையும் கதாசிரியர் குறிப்பெடுத்து எழுதுவது போன்ற நடையிலேயே இத்தொகுதியில் உள்ள அனேகமான கதைகள் எழுதப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாய் உள்ளது. இந்த ‘காட்சி வர்ணனைப் பார்வையே’ கதாசிரியர் சுதாகரின் எழுத்து நடையின் முத்திரையாகவும் அமைந்துவிடுகிறது. இது குறையல்ல. ஒரு தனித்துவ முத்திரையே.

இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஞானம், பதிவுகள், கணையாழி, இலக்கியவெளி, செம்மலர் போன்ற இலக்கியத்திறனுள்ள வெளியீடுகளில் வெளிவந்தவை. தேர்ந்த வாசகர்களை வசீகரித்து இக்கதைகள் ஒரு கோர்வையாக நூல் உருவில் வெளிவந்துள்ளது வரவேற்கத்தக்கதே!

ஒரு நாவலையோ சிறுகதையையோ ஒரு வாசகர் படித்து முடித்ததும் அக்கணத்தில் அவன்/அவள் மனதில் எழும் உணர்வலைகளின் கொந்தளிப்பே அக்கதை பற்றிய நிஜ விமர்சனம். இதைவிட வேறு எந்த விமர்சன பரிமாணமும் அப்படைப்பிற்கு கிடையாது. இருக்கவும் முடியாது. ‘றூம் போட்டு எழுதும்’  பல விமர்சனங்கள் வெறும் வார்த்தை சோடனைகளாகவே இறுதியில் உருவெடுப்பதுண்டு! எனவே இக்கதைகளை படித்து ருசிப்பதே நுகர்தலின் உச்சம்.

படித்து மகிழ்வோம்!

(முற்றும்)

Series Navigationபெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ?மழை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *