This entry is part 14 of 32 in the series 15 டிசம்பர் 2013

பசியில்
தீக்கொழுந்து போல்
துள்ளும்.

நீட்டிப் படுத்துக் கிடக்கும் இரயில் நடைமேடை நெடுக
நிலத்தில் இழுத்த கோடு போல்
பின் தொடரும்.

விடுவதாயில்லை
அவளை.

கையிலிருக்கும்
காகிதப் பொட்டலத்தைப் பிரிப்பாள் அவள்.

விழுங்கும்
ஒரு பருக்கை விடாமல் சோற்றை ’அரக்கப் பரக்க’
சொறி நாய்.

பசித் தீ
தணியும்.

நின்று
அன்பில் நோக்குவாள் ’என்பு தோல் போர்த்த’
பிச்சைக்காரி.

நில்லாமல்
இரயிலடியை அவசரமாய்க் கடந்து கொண்டேயிருக்கும் இரயிலொன்று
ஏமாற்றமாயில்லை அவளுக்கு.

கு.அழகர்சாமி

Series Navigationமுதுவேனில் பதிகம்: திருமாவளவனின் கவிதைகள்எஸ்ஸார்சி கனவுமெய்ப்படும் – சாதிய கட்டமைப்பும் கட்டுடைப்பும்.